மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
வெற்றிவளவன்
|
பிரதாபனின் குறும்புகள்பிரதாபன் படிப்பில் மக்காக இருந்தாலும் விளையாட்டுத்தனம் நிறைந்தவனாக இருந்தான். அவனது குறும்புத் தனங்கள் வியப்பானவை.ஒரு முறை பிரதாபனைத் தவிர எல்லோரும் காய்ச்சலும் அம்மை நோயும் வந்து அவதிப் பட்டார்கள். எனவே பலரும் வந்து பார்த்து விசாரித்து, உபசரித்து, கவனித்துக் கொண்டார்கள். அப்போது பிரதாபன் ஒரு மூலையில் அமர்ந்து அழுதான். எல்லோரும் ஓடி வந்து அவனிடம், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டபோது, "எனக்கு காய்ச்சலோ, அம்மையோ வரவில்லையே?!" என்று சொல்லி அழுதான். பிரதாபன் தெருவில் பிற பிள்ளைகளுடன் விளையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தான். ஒரு முறை ஒரு பையன் நான் கண்ணை மூடிக் கொண்டு செய்வதை நீ கண்களை திறந்து கொண்டு செய்வாயா? என்று கேட்டான். பிரதாபனும் சவாலை ஏற்றுப் பந்தயம் வைத்துக் கொண்டான். அந்தப் பையன் தெருவில் இருந்து மண்ணை வாரி, கண்ணைமூடிக் கொண்டு கண்ணில் இட்டுக் கொண்டான். பிரதாபனிடம் அதே மாதிரி கண்ணைத் திறந்து கொண்டே செய்யுமாறு சொன்னான். பிரதாபனோ கண்ணை இழப்பதைவிட காசை இழப்பது மேல் என்று சொல்லிப் பந்தயப் பணத்தை கொடுத்து விட்டான். தன் முகத்தை அழகாகக் காட்டாதது முகம் காட்டும் கண்ணாடியின் தவறு என்று கண்ணாடியை உடைத்த அசட்டுத் தனமும் பிரதாபனுக்கு உண்டு. எந்த வேலையையும் உடனே செய்து விட வேண்டும் என்ற தாயாரின் புத்திமதியைப் பலகாரங்கள் சாப்பிடுவதில் பயன்படுத்தி ஏளாளமாக பண்டங்கள் உண்டு வயிற்றுக்கோளாறுக்கு வைத்தியர்களுக்கு வேலை கொடுப்பது பிரதாபனின் வழக்கம். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற புத்திமதிக்குக் கழிவறை கழுவ, சலவை செய்ய, முடிதிருத்த வரும் பணியாளர்களை நாற்காலி கொடுத்து உட்கார வைத்தான். தினமும் பொழுது விடிந்தால் ஆசிரியர் வந்து பாடம் கற்பிப்பதால் பொழுது விடியாமலிருக்க என்ன வழி என்று சிந்திந்து, கோழி கூவுவதால் பொழுது விடிகிறது, எனவே இனிக் கோழி வளர்க்க வேண்டாமென்று சொன்னான். ஒரு நாள் ஒரு பையனிடம் இரண்டு ரூபாய் கடன் வாங்கியதாகக் கண்ட கனவை அந்தப் பையனிடம் பிரதாபன் சொன்னான். அந்தப் பையன் பிரதாபனிடம் கடனைத் திருப்பித் தரக் கேட்டான். பரிதாபன் பையனை அடித்தான். பையன் ஏனென்று கேட்ட போது கனவில் அந்தப் பையன் தன்னை அடித்ததால் திருப்பி அடித்ததாக சொன்னான். அப்படி கடனுக்கும் அடிக்கும் சரியாகப் போய்விட்டது. -oOo- பிரதாபனுக்கு பதிலாகக் கனகசபை படிப்பதும், அடிபடுவதும் பிரதாபனின் தாயார் அறிந்து கொண்டார். ஒரு நாள் இருவரையும் அழைத்து இலை போட்டு கனகசபைக்கு மட்டும் உணவு பரிமாறி பிரதாபனுக்கு ஒன்றும் பரிமாறாமல் இருந்தார். பிரதாபன் தனக்கும் உணவு கேட்ட போது அவன் சாப்பிடுவதைப் பார்த்ததுக் கொண்டிரு. என்றார். அவன் சாப்பிட்டால் எனக்குப் பசி அடங்குமா என்று பிரதாபன் கேட்டான். அவன் படித்தால் உனக்குப் படிப்பு வருமா? அவன் அடிபட்டால் உனக்கு அறிவு வருமா? என்று அவன் தாயார் திருப்பிக் கேட்டார். ஒரு ஏழைப் பிள்ளையை அடிபடும்படி செய்தது குற்றம். நீ பட வேண்டிய அடியை அவன் ஏற்றுக் கொண்டதால் இனி உனக்குக் கிடைக்கும் சுகங்கள் அவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறினார். பிறகு வீட்டிலேயே படிப்பில் பயனில்லை என்று மாமன் வீட்டில் படிக்க ஏற்பாடு செய்தார். பிரதாபனின் மாமா சம்பந்தம் என்பவருக்கு ஞானாம்பாள் என்ற மகள் இருந்தாள். அவளுடன் பிரதாபனும் கனகசபையும் வேறொரு ஆசிரியரிடம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப் பட்டது. கனகசபையின் தந்தைக்கு அவர்களின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டது. * ஞானாம்பாளின் அறிவு ஞானாம்பாள் மிகுந்த புத்திசாலிக் குழந்தை. படிப்பிலும் அறிவிலும் அவள் சிறந்து விளங்கினாள். அவள் தந்தை மிகுந்த செல்வராக இருந்தாலும் கஞ்சராக இருந்தார். ஐந்து வயதிலேயே வீட்டுக்கு வரும் ஊர்க்காரர்கள் அவரைக் கஞ்சன் என்று சொல்வதைக் கேட்டு அதன் பொருளை அவரிடமே கேட்டு அவரை வெட்கப் பட வைத்தாள். அவரும் மகளால் திருந்தி விட்டார். ஒரு முறை தன் அறிவில் கர்வமுள்ள ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவரிடம் ஞானாம்பாள் புத்திசாலிக் குழந்தை என்று எல்லோரும் சொன்னார்கள். உடனே அவர் சின்ன வயதில் புத்திசாலியாக இருக்கிறவர்கள் பிறகு முட்டாளாகி விடுவார்கள் என்று சொன்னார். உடனே ஞானாம்பாள் தாங்கள் சின்ன வயதில் புத்திசாலியாக இருந்திருப்பீர்கள் என்று சொல்லி அவரின் கர்வத்தை ஒடுக்கினாள். பிரதாபனும் கனகசபையும் ஞானாம்பாளுடன் கருணானாந்தம் என்ற ஆசிரியரிடம் கல்வி கற்றனர். அவர் "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். கனகசபையும் பதில் சொல்லாததால் பிரதாபன் பதில் தெரியாவிட்டாலும், "உயிரெழுத்து 50, மெய்யெழுத்து 100" என்று பதில் சொன்னான். அவர் அதைத் தவறு என்று சொல்லி ஞானாம்பாளிடம் கேட்க சொன்னார். அவள் "உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18" என்று சொன்னபோது பிரதாபன் "நான் ஐம்பது நூறு என்று சொல்லியும் ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. நீ குறைத்துச் சொல்வதை ஒப்புக் கொள்வாரா?" என்று கேட்டான். ஆனால் அவள் சொன்னது தான் சரி என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். இப்படி வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் அறிவில் ஞானாம்பாளுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தார்கள். அவளுடைய அறிவைப் பார்த்த பிறகுதான் தாங்களும் முயன்று கற்க வேண்டும் என்ற எண்ணம் பிரதாபனுக்கும் கனகசபைக்கும் ஏற்பட்டு அவர்களும் கல்வி அறிவு பெற ஆரம்பித்தார்கள். வெற்றிவளவன்
|
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |