தாயென்று கும்பிடடி பாப்பா
- அன்பே வழியாய்
சுகந்தி
கிறுஸ்துமஸ் நாள் காலை
அம்மா கொடுத்த பரிசுகளை எல்லோரும் பிரித்துப் பார்த்தாயிற்று. பீட்டருக்கு ஒரெ சந்தோஷம். அம்மா அவனுக்கு அழகான பேனா ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருந்தார். அப்பாவோ அவனுக்குப் பள்ளி செல்ல ஒரு சைக்கிளைப் பரிசாகத் தந்திருந்தார். கிடைத்த பரிசுகளிலேயே பீட்டருக்கு மிகவும் பிடித்த பரிசு அவனுடைய மாமா கொடுத்த பரிசு தான். அதை எடுத்துக் கொண்டு முன்னறைக்குச் சென்றான். அண்ணா, அண்ணா, என்று பீட்டர் பின்னாலேயே வந்தாள் அன்பு, அவனுடைய தங்கை. அவளைப் பார்த்தாலே எரிச்சலாக வந்தது. ஏய், நீ தள்ளிப் போ, நான் மாமா கிறுஸ்துமஸ் பரிசாகக் கொடுத்த புத்தகத்தைப் படிக்கப் போகிறேன் என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்தான் பீட்டர்.
அண்ணா, அந்தப் புத்தகம் எனக்குத் தான் வேண்டும். அதை நீ என்னிடம் கொடுத்து விடு என்றபடி நாற்காலியின் கைப்பிடியிலேறினாள் அவள். ஏய், இது என் புத்தகம், நீ மாமா கொடுத்த படம், வண்ணப் பேனாக்களை வைத்துக் கொண்டு விளையாடு என்றவன் தங்கையிடமிருந்து தப்பிக்க நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் நாற்காலி தடுமாறி விழப் போனாள் அன்பு.
தங்கையைத் தாங்கிப் பிடித்தான் பீட்டர். நல்ல வேளை அவளுக்கு அடிபடவில்லை. ஆனாலும் பயந்து போன அன்பு அலற ஆரம்பித்தாள். அவள் அலறுவதைக் கேட்ட பெற்றோர் பீட்டரின் அறைக்குள் வந்தனர்.
"என்ன பீட்டர், என்ன ஆயிற்று?" கேட்டார் தந்தை.
அம்மா அன்புவின் அருகில் குனிந்து அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டார். பீட்டர் எதுவும் சொல்லும் முன் முந்திக் கொண்ட அன்பு அண்ணா தான் என்னைத் தள்ளி விடப் பார்த்தான். அவனுக்கு என்னைப் பிடிக்கவேயில்லை என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
"பீட்டர், உன் தங்கையுடன் விளையாடு, கிறுஸ்துமஸ் அதுவுமாய் நீ ஏன் இப்படிச் செய்கிறாய்? உனக்கு நாங்கள் எவ்வளவு செய்கிறோம்." என்று அவன் தந்தை பீட்டரைக் கடித்து கொண்டார்.
தந்தை கோபம் கொள்ளும் போது எதுவும் பேசாமல் மெளனமாய்த் தலை குனிந்து கொண்டான் பீட்டர். தந்தையிடம் எதுவும் பேச அவனுக்குப் பயமாக இருந்தது.
அவனுடைய தாய் அவனுடைய அருகில் வந்தார், "பீட்டர், இன்னும் சிறிது நேரத்தில் நாம் சர்ச்சுக்குக் கிளம்ப வேண்டும், நீ கொஞ்ச நேரம் உன் தங்கையைப் பார்த்துக் கொண்டாயானால் நான் கிளம்பி விடுவேன். மாலையில் நான் உன்னைப் பூங்காவிற்கு அழைத்துப் போகிறேன். இப்போதைக்கு நல்ல பையனாக இரு" என்று சொன்னவர் அவன் முதுகில் ஆதரவாய்த் தட்டி விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.
பீட்டர் தன் அருகில் வந்து நின்ற தங்கையைப் பார்த்தான். அவளும் கண்களைத் துடைத்து விட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணன் தன் மேல் கோபமாய் இல்லை என்று தெரிந்ததும் தன்னுடைய கிறிஸ்துமஸ் பரிசான வண்ணப் பேனாக்களை எடுத்து விளையாட ஆரம்பித்தாள்.
இனி தங்கை தன்னைத் தொந்தரவு செய்ய மாட்டாள் என்று நினைத்த பீட்டர் அருகில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். அறிவியல் விநோதங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க அவன் தன் புத்தகத்தில் ஆழ்ந்து போனான். அருகில் தங்கை இருப்பதை மறந்து போனான்.
"அண்ணா, அண்ணா, என்னைப் பார்" என்று அவன் தோளை உலுக்கினாள் அன்பு.
"என்ன அன்பு, உனக்கு என்ன வேண்டும்?" என்று தன் புத்தகத்திலிருந்து கவனத்தைத் தன் தங்கையிடம் திரும்பிய பீட்டர் அதிர்ந்தான். அவள் தன் வண்ணப் பேனாக்களைக் கொண்டு அவள் முகம் முழுவதும் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அது மட்டுமல்ல, தரையிலும் சுவற்றிலும் கூடத் தன் கற்பனை வளத்தைக் காட்டியிருந்தாள்.
"அன்பு, நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? அம்மா வந்தால் என்னைத்தான் திட்டுவார்கள்" என்ற பீட்டர் என்ன செய்வது என்று தெரியாமல் "அம்மா, அம்மா" என்று தாயை உதவிக்கு அழைத்தான். அவன் குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு தாய் அங்கு வந்தார். அன்பு இருக்கும் கோலத்தைக் கண்ட அவர் ஆத்திரத்தில் பீட்டரை நன்றாக அடித்துவிட்டார். என்ன ஒரு பொறுப்பில்லாத் தனம் என்ற கோபம் அவருக்கு.
பீட்டர் மனவருத்தத்தோடு அங்கிருந்து நகன்றான். மாலையில் அனைவரும் குடும்பத்தோடு ஆலையத்திற்குச் சென்றனர். அஙகே கிறுஸ்துமஸ் பிராத்தனை முடிந்த பிறகு அவன் பெற்றோர்கள் நண்பர்களிடம் ஆலய வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்க, ஆலயத்தின் உள்ளே மண்டியிட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தான் பீட்டர். அவன் மனம் குழம்பிப் போயிருந்தது. அவன் தங்கை இன்று காலையில் நடந்தது போல அவனை எத்தனை முறை பிரச்சனையில் மாட்டி விட்டு இருக்கிறாள். ஆனால் அவனால் தன்னுடைய கோபத்தைக் காட்ட முடியவில்லை. அது அவனைக் குழப்பியது. தன்னைத் துன்பப்படுத்துபவர்களிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு வழி காட்டும் படி வேண்டிக் கொண்டான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அவன் தோளில் ஒரு கை விழுந்தது. அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்தான் பீட்டர். பாதிரியார் நின்றிருந்தார். "என்ன பீட்டர், ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறாய் போல, எதுவும் நல்ல பரிசுகள் கிறிஸ்துமஸுக்குக் கிடைக்கவில்லையா?" சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.
"அதில்லை ஃபாதர்" என்ற பீட்டர் தன் மனக்குறையை எடுத்துச் சொன்னான். அவனைத் தோளோடு அணைத்துக் கொண்ட பாதிரியார், "பீட்டர், இன்று நம் மத்தியில் குழந்தையாய்ப் பிறந்திருக்கும் இயேசுநாதர் எதற்காகப் பிறந்திருக்கிறார் தெரியுமா? நாம் செய்த தவறுகளை அவர் சிலுவையில் சுமந்தார். நமக்காகத் துன்பப்பட்டுத் தன் உயிரையும் கொடுத்தார். அவரைப் போல நாம் அனைவரும் சகிப்புத்தனமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள். உன் தங்கையின் தவறுகளுக்காக அவள் மேல் கோபப் படாதே, அவளை மன்னிக்கக் கற்றுக் கொள். உன் மனதும் லேசாகி விடும்" என்றபடி அவனை ஆலயத்தின் வாசலுக்கு அழைத்து வந்தார்.
தனது பையிலிருந்து ஒரு சிறிய பைபிளை அவனுக்கு எடுத்துக் கொடுத்தவர், "இதை நீ என்னுடைய கிறுஸ்துமஸ் பரிசாக வைத்துக் கொள். நீ இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது உன் தங்கை உன்னைத் தொந்தரவு செய்வதை உன் பெற்றோரே விரும்ப மாட்டார்கள். இது உனக்கு நல்ல நண்பனாக வழிகாட்டும்" என்று சொல்லி அவனைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
பீட்டர் தெளிந்த மனதுடன் வீடு திரும்பினான்.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













