பிரதாபன் கதை - 4
வெற்றி வளவன்
அதைக்கேட்ட பிரதாபன், "தாய் தந்தை இருக்கும்போது நீ ஏன் தாய் தந்தை இல்லாத அனாதை என்று சொல்கிறாய்?" என்று கேட்டான்.
"உங்கள் முந்தைய ஆசிரியரான சாந்தலிங்கரையும் அவரின் மனைவியையும் தான் என் பெற்றோர் என்று இது வரை நினைத்திருந்தேன். ஆனால் அவர் உடல் நலமின்றி இருந்த போது இனிப் பிழைக்க மாட்டாரென்று நினைத்து என்னை ரகசியமாகக் கூப்பிட்டு ஒரு ரகசியத்தைக் கூறினார். "பனிரெண்டு வருடத்துக்கு முன்னால் ஆறு மாதக் குழந்தையாக இருந்த உன்னை ஒருவன் கொண்டு வந்து கொஞ்சம் பால் கொடுக்கும்படி கேட்டான். என் மனைவிக்கு அப்போது ஒரு குழந்தை பிறந்து இறந்து போய் இருந்ததால் அவள் குழந்தையாக இருந்த உனக்குத் தாய்ப்பால் கொடுத்தாள். அவளை விட்டுப் போக மறுத்து நீ அழுதாய். அதனால் உன்னை எங்களிடமே வைத்துக்கொள்ள விட்டு விட்டு அவன் போய் விட்டான். நீ யாருடைய குழந்தை என்று நாங்கள் விசாரிக்கவில்லை. ஆனால் அவனுடைய குழந்தை இல்லை என்பது நிச்சயம். "இதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த வருத்தமாகி விட்டது. சாந்தலிங்கர் பின்னர் உடல் நலம் தேறி விட்டாலும் அவர் கூறிய மொழிகள் மூலம் என் தாய் தந்தையர் வேறு என்பது எனக்கு தெரியவந்தது" என்று கனகசபை கூறினான்.
இந்தத் துயரத்தால் கனகசபை நாளுக்கு நாள் இளைத்து வந்தான். பிரதாபனின் தாயார் இதை எப்படியோ தெரிந்து கொண்டு கனகசபையிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பிரதாபனும், கனகசபையும், ஞானாம்பாளும் திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் ஒரு திருவிழாக் கூட்டம் போல யானைகள், குதிரைகள், வண்டிகள், குடைகள், வாத்திய கோஷ்டிகளுடன் ஒரு ரதம் வந்து நின்றது. அதிலிருந்து வந்திறங்கிய ராஜா, ராணி போல இருந்தவர்களுடன் கனகசபையைக் குளத்திலிருந்து காப்பாற்றிய சன்னியாசியும் இருந்தார்.
அவர் வண்டியிலிருந்து இறங்கிக் கனகசபையைத் தொட்டுக்காட்டினார். அதைக் கண்டதும் ராஜாபோல இருந்தவர் கனகசபையைக் கட்டித் தழுவிக்கொண்டு, "மகனே, இத்தனை நாள் உன்னைக் காண முடியாமல் இருந்தேனே" என்று அழுதார். ராணிபோல இருந்த பெண்மணியும் "மகனே.. மகனே.." என்று அழுது புலம்பினார்.
பின்னர் அவர் ஞானாம்பாளை நோக்கி, குளத்திலிருந்து அவனைக் காப்பாற்ற உதவி அவன் பிழைக்கக் காரணமாக இருந்ததற்காக மிகவும் பாராட்டினார்கள்.
இதற்குள் குடும்பத்துப் பெரியவர்கள் எல்லோரும் வந்துவிட புதிதாக வந்தவர்கள் தங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தனர்.
அவர் ஆதியூர் பாளையக்காரர் தேவராஜர்.
ஆதிமூலர் என்ற பாளையக்காரருக்கு தேவராஜரும் தெய்வநாயகமும் பிள்ளைகளாக இருந்தார்கள்.
குடும்பத்தில் மூத்தவருக்கே அடுத்த பாளையக்காரராகப் பட்டம் சூட்டுவது வழக்கம். இளையவருக்குப் பட்டம் கிடைப்பது இல்லை. ஆனால் மூத்தவருக்கு சந்ததி இல்லாமல் இருந்தால் அவருக்குப் பிறகு இளையவருக்குப் பட்டம் கிடைக்கும்.
இதன் படி ஆதிமூலருக்கு அடுத்து தேவராஜர் பாளையக்காரராகப் பட்டத்துக்கு வந்தார். அவருக்குக் குழந்தை பிறந்து ஆறு மாதம் இருக்கும்போது தேவராஜருக்கு ஏதோ ஒரு தீவிரமான நோய் வந்து பலவித வைத்தியங்கள் செய்தும் சரிப்படவில்லை. பிறகு ஆங்கில மருத்துவர்கள் மருத்துவம் செய்து ஓரளவு குணமாக வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் வெளியூர்களில் சஞ்சாரம் செய்து வர வேண்டும் என்று சொன்னார்கள். எனவே குழந்தையையும் பாளையத்தின் பொறுப்புக்களையும் தம்பியிடம் ஒப்படைத்து விட்டு தேவராஜரும் மனைவியுமாக சஞ்சாரத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் வெளியூரில் இருந்தபோது குழந்தை நோய் கண்டு இறந்து விட்டதாகத் தம்பியிடமிருந்து கடிதம் வந்தது. தேவராஜரின் மனைவிக்குக் கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும் ஊர் வந்து சேர்ந்த பிறகு எல்லோரும் குழந்தை இறந்து விட்டதாகச் சொன்னதால் அவர்கள் நம்ப வேண்டியதாயிற்று.
ஆனால் சில காலம் கழித்து தேவராஜரின் தம்பி சில நாள் நோய்கண்டு இறந்து விட்டார். அவர் இறந்த பின் அவர் உடலில் இருந்து கிடைத்த கடிதத்தில் இருந்த விவரப்படி பட்டத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையைக் கொல்லத் தன் தோழன் முத்து வீரனிடம் கொடுத்து விட்டு இறந்து போன வேறொரு குழந்தையைப் பாளையத்துக் குழந்தை என்று ஆடம்பரமாக அடக்கம் செய்தார்கள்.
முத்து வீரன் பிறகு திரும்பி வரவில்லை. அவன் சன்னியாசியாகிப் போய்விட்டதாக தகவல் வந்தது. ஆனால் முந்தைய தினம் சன்னியாசி திரும்பி வந்து குழந்தை சாந்தலிங்கர் மகனாக இருப்பதைத் தெரிவித்தார். சன்னியாசியிடம் கேட்டு விவரம் தெரிந்து கொள்ளும்படி எழுதி இருந்தது.
தேவராஜர் சன்னியாசியைக் கண்டு விவரம் கேட்க, அவர் எல்லா விவரங்களையும் தெரிவித்தார். அதன்படியே தேவராஜர் தம்பியின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டுத் தன் துணைவி, மற்றும் பரிவாரங்களுடன் இங்கே வந்ததாக தெரிவித்தார்.
பின்னர் கனகசபையை வளர்த்த பெற்றோர் மற்றும் பிரதாபனின் குடும்பத்தினருக்கு நன்றி கூறி வாழ்த்தினர். பத்து நாட்கள் பிரதாபனின் குடும்பத்து விருந்தினராக இருந்த பின்னர் கனகசபையையும் அவனை வளர்த்த சாந்தலிங்கர், மற்றும் அவரது துணைவி ஆகியோரையும் கூட அழைத்துக் கொண்டு தேவராஜரின் பரிவாரம் விடைபெற்றது.
விடைபெறுவதற்கு முன்பு பிரதாபனின் பாட்டியார் தன்னால் கனகசபை அடிபட நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் தேவராஜரோ அவன் அடிபட்டது அவனுக்கு நன்மைதான் என்றும் அதன் மூலம் அடுத்தவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து யாரையும் துன்புறுத்தாமல் இருப்பான். துன்பமே ஞானத்தின் பாடசாலை என்று கூறிவிட்டார். அதன்மூலம் அடியின் பயன் என்ன என்று பிரதாபனும் உணர்ந்து கொண்டான்.
கூடவே வளர்ந்து தோழனாகவும் உடன்பிறந்தவனைப் போலவும் இருந்த கனகசபையின் பிரிவு பிரதாபனுக்குத் துயரத்தை அளித்தாலும் கனகசபையை சிறு வயதில் ஆபத்துக்களில் இருந்து அவனைக் காத்து அவனுக்குரிய இடத்தைத் திரும்பக் கிடைக்கச் செய்த கடவுளை எண்ணி வியந்து வணங்கினான்.
(தொடரும்)
வெற்றி வளவன்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












