பிரதாபன் கதை - 3
வெற்றி வளவன்
பாட்டியார் ஞானாம்பாளின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி, பிரதாபனின் தாயாரைப் போல ஞானாம்பாளும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவளாக இருப்பாள் என்று சொல்கிறார்.
பிரதாபனின் தாயாரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியையும் கூறுகிறார். அவளின் இளமைப் பருவத்தில் அழகையும் அறிவையும் கண்டு வியந்து நிறையப் பேர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அது போலவே தூரத்து உறவினரான பேராவூர் நீலகண்டன் என்பவனும் அவரைத் திருமணம் செய்ய முயன்றான். முடியாமல் போனதால் அவளைச் சிறை எடுத்துக் கொண்டு போய்த் திருமணம் செய்யத் திட்டமிட்டான்.
ஒரு நாள் வீட்டிலுள்ள ஆண்கள் எல்லோரும் வெளியூர் சென்றிருந்த போது அவனது குதிரை பூட்டிய ரதத்தை அனுப்பி அவளது தகப்பனார் வெளியூர் போன இடத்தில் மாரடைப்பு வந்து சுகவீனம் ஆனதால் அவளை உடனடியாக அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவிக்க ஏற்பாடு செய்தான். அதன்படி வண்டியோட்டி வந்து சொன்னதைக் கேட்டு அவளும் ஒரு தோழியுமாக வண்டியில் ஏறிச் சென்றார்கள். வண்டி முழுக்க மூடி இருந்ததாலும் தகப்பனார் உடல் நலம் குறித்த கவலையோடு இருந்ததாலும் வண்டி செல்லும் பாதையை கவனிக்கவில்லை.
வண்டியோட்டி வழியில் தன் வெற்றிலை பாக்குப் பெட்டியைத் தவற விட்டு விட்டான். திடீரென்று தான் தன் வெற்றிலைப் பெட்டி விழுந்ததை அறிந்தான். அதனால் வண்டியை நிறுத்தி இறங்கினான். வண்டி நின்றதை அறிந்து வண்டியிலிருந்த பெண்கள் என்னவென்று பார்த்தபோது வெற்றிலைப் பெட்டி விழுந்து விட்டது தேடிக் கொண்டு வருகிறேன். என்று சொல்லி விட்டு வந்த வழியே நடந்தான். அவள் கீழே இறங்கிப் பார்த்த போது வண்டி நீலகண்டனுடையது என்பதையும் அவனுடைய ஊருக்குப் போகும் பாதையில் தான் வண்டி போகிறது என்பதையும் கண்டாள்.
உடனே அவள் வண்டியோட்டி அமரும் இடத்தில் உட்கார்ந்து வேகமாக வண்டியைத் திருப்பி ஓட்டினாள். வண்டியோட்டி வழியில் கண்டு தடுக்க முயல குதிரைச் சவுக்கால் அவனை அடித்துத் தள்ளி விட்டாள்.
அப்போது நீலகண்டனும் குதிரையில் விரட்டிக் கொண்டு வந்தான். அவன் முன்னால் வந்து மறித்த போது வண்டிக்குதிரைகள் நிற்காமல் அவனை நோக்கிப் பாய்ந்து வேகமாகப் போயின. அதனால் அவன் குதிரை மிரண்டு அவனைப் படுகுழியில் தள்ளி விட்டது.
இதையெல்லாம் அறிந்து நீலகண்டனின் உறவினர்கள் எல்லோருமாக அவனைக் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள்.
அதன் பிறகு பிரதாபனின் தந்தைக்கும் தாயாருக்கும் திருமணம் நடந்த கதையும் பிரதாபனின் தாயாரின் அன்பைப் பற்றியும் பாட்டியார் விளக்கமாகச் சொன்னார்.
-oOo-
ஒரு நாள் தோட்டத்தில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்த போது ஞானாம்பாள் இரண்டு பழங்களைக் கொண்டு வந்து பிரதாபனுக்கும் கனகசபைக்கும் கொடுத்தாள். பிரதாபன் அவளிடம் தனது கணக்குத் திறமையைக் காட்டுவதற்காக இது எத்தனை பழம் என்று கேட்டான். ஞானாம்பாள் இரண்டு என்று சொன்னாள். பிரதாபன் இல்லை மூன்று என்றான். அவள் எப்படி என்று கேட்டதற்கு, பழத்தை எண்ணும் படி சொன்னான். அவள் ஒன்று, இரண்டு என்று எண்ணியதும் ஒன்றும் இரண்டும் மூன்று தானே என்றான். அவள் உடனே ஆம் என்று சொல்லி விட்டுக் கனகசபையிடம் அண்ணா நீங்கள் ஒன்றைச் சாப்பிடுங்கள். நான் இரண்டாவதைச் சாப்பிடுகிறேன். அத்தான் மூன்றாவதைச் சாப்பிடட்டும் என்று சொல்லி அவளும் கனகசபையும் பழங்களைச் சாப்பிட்டார்கள். தன் கணக்குத் திறமையைக் காட்டப் போய், பிரதாபன் பழத்தை இழந்து ஏமாந்தான்.
இவர்களோடு வளர்ந்த கனகசபையும் புத்திசாலியாக வளர்ந்து வந்தான். ஒரு முறை சென்னை கவர்னர் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது சத்தியபுரியில் கூடாரமிட்டுத் தங்கினார். ஒரு நாள் அவர் மட்டும் தனியாக ரதத்தில் ஏறிக்கொண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கப் போனார். பிறகு அவருக்கு கூடாரத்துக்கு திரும்பிப் போக வழி தெரியவில்லை. வழியில் நின்று கொண்டிருந்த கனகசபையைக் கூப்பிட்டு வழிகாட்டும்படிக் கேட்டுக் கொண்டார். கனகசபைக்கு அவர்தான் கவர்னர் என்று தெரியாததனால் அவ்வளவு தூரம் நடந்து வந்து வழிகாட்ட முடியாது என்று சொன்னான். கவர்னர் அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்.
வழியில் அவருடன் பேசிக் கொண்டே போன கனகசபை, "கூடாரத்தில் நிறைய துரைமார்கள் இருப்பார்களே? அவர்களில் கவர்னரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?" என்று கேட்டான். "கவர்னரைக் கண்டவுடனே எல்லோரும் தம் தொப்பியைக் கழற்றி நின்று கொண்டு வணங்குவார்கள். கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார். இது தான் அடையாளம்" என்றார்.
வண்டி கூடாரத்துக்கு அருகில் போனதும் எல்லோரும் தொப்பியைக் கழற்றி வண்டியை நோக்கி வணங்கினார்கள். அப்போது கவர்னர், "இப்போது யார் கவர்னர் என்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்டார். கனகசபை உடனே, "ஒன்று நீங்கள் கவர்னராக இருக்க வேண்டும் அல்லது நான் கவர்னராக இருக்க வேண்டும். நாமிருவர் மட்டும் தானே உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். நம்மைக் கண்டுதானே எல்லோரும் எழுந்து நின்று வணங்குகிறார்கள்" என்றான். அவனது புத்திசாலித்தனம் கண்டு வியந்த கவர்னர் அவனுக்குப் பொன்பொருள் கொடுத்து அனுப்பினார்.
புத்திசாலியாகவும் நகைச்சுவையாகப் பேசிச் சிரித்துக் கொண்டும் இருந்த கனகசபை சில நாட்களாக யாரிடமும் பேசாமலும் அதிகமாக விளையாடாமலும் சோகமாக இருந்து வந்தான். பிரதாபன் கேட்ட போதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு நாள் அவர்கள் சற்று தூரத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கனகசபை தவறிக் குளத்தில் விழுந்து விட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கிக்கொண்டு இருந்தான். பிரதாபனுக்கும் நீச்சல் தெரியவில்லை. வீட்டுக்குப் போய் யாரையாவது உதவிக்கு அழைத்து வருவதற்குள் கனகசபை மூழ்கி விடுவான். ஞானாம்பாள் தோட்டத்துக்கு வெளியே ஓடிப்போய், தெருவில் நின்று கொண்டிருந்த சன்னியாசியைக் கூப்பிட்டு, சிறுவன் குளத்தில் விழுந்ததைச் சொன்னாள். சன்னியாசியும் அவளுடன் தோட்டத்துக்கு ஓடிவந்து கொண்டே ஞானாம்பாளிடம் அவனைக் காப்பாற்றினால் நீ காதில் போட்டிருக்கும் வைர நகையைத் தருவாயா என்று கேட்டார். அவள் உடனே தருவேன் என்றாள்.
சன்னியாசி குளத்தில் குதித்து கனகசபையைக் காப்பாற்றினார். அவனுக்கு முதலுதவி செய்து வயிற்றுக்குள் இருந்து வெள்ளத்தையும் வெளியேற்றி அவன் உயிரைக் காத்தார். உடனே ஞானாம்பாள் தன் காதில் இருந்த நகையைக் கழற்ற ஆரம்பித்தாள். சன்னியாசி அவளைத் தடுத்து சும்மா உன்னைச் சோதிப்பதற்காகவே கேட்டேன். ஒரு உயிரைக் காத்த புண்ணியம் இன்று எனக்கு உன்னால் கிடைத்தது என்று பாராட்டினார். ஞானாம்பாளைப் புகழ்ந்து ஆசீர்வதித்துச் சென்றார்.
வெற்றிவளவன்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












