களிமண் - 8
ஆகிரா
கிராமமே களிப்பில் ஆழ்ந்திருந்தது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் அதிகாலையில் துயிலெழுந்து, காவிரியாற்றில் நீராடி, புத்தாடை உடுத்து கிராமத்தில் அன்று நடந்த கோவில் கும்பாபிஷேகத் திருவிழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆலயத் திருப்பணி அனைவரும் திருப்தியடையும் வகையில் நிறைவுற்று, கோவில் கம்பீரமாக வானை அளாவி நின்றது. கோவிலின் கோபுரம் கிராமத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வண்ணம் போதிய உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன் வண்ணமயமான சுதை வேலைப்பாட்டு முறையில் வடிக்கப்பட்ட சிற்பங்களுடன் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. கரகாட்டம், கச்சேரி, வாண வேடிக்கைகள் என்று ஊரே அமளிதுமளிப்பட்டது.
இதில் மிக விசேஷமான அம்சம் களிமண் என்று எல்லோராலும் கேலி செய்யப்பட்ட குணா தன் கையாலேயே செய்திருந்த வெண்கலத்திலான நடராஜர் சிலைதான். சிலைக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செவ்வனே நிறைவேறி பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நிறைவேறின. குணாவின் தாய் தந்தையர் தங்கள் மகன் இவ்வளவு விரைவில் இத்தகைய திறமை வாய்ந்த சிற்பியாக உருவானது குறித்து அகமகிழ்ந்தனர். அவனது நண்பர்கள் அனைவரும் அவனை மிகவும் வியந்து பாராட்டினர். "உன் மண்டையிலென்ன களிமண்ணா இருக்கிறது?" என்று அவனைப் பள்ளி நாட்களில் கடிந்துகொண்ட ஆசிரியரும் அவனது கலைத்திறமை குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து, அவனை மேலும் வாழ்வில் உயர ஆசீர்வதித்தார். அவன்மேல் அவர் ஒரு கவிதை பாடினார்.
களிமண் என்றுனை எளிதாக எண்ணிய கற்றரிந்த மாந்தர் பலரும்
களிப்புறக் காணும் வகையில் வெண்கலச் சிலைதனை வடித்து வந்தாய்
மிளிருமுன் புகழினி மேதினியதனில் மென்மேலும் சிறக்கவே
ஒளிதரும் ஞாயிறு போலச் சிறந்தென்றும் ஓங்கி வளர்ந்திடுகவே
அதைக்கேட்ட குணா மகிழ்ச்சிப் பெறு வெள்ளத்தில் மூழ்கினான். தன் ஆசிரியர் தன்னை இவ்வளவு உயர்வாகக் கருதியதைப் பெரும் பாக்கியமாகக் கருதினான் அவன். குணா அவரை நோக்கி, "ஐயா, இவ்வெண்கலச் சிலை களிமண்ணிலிருந்துதான் பிறந்தது என்பது தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டுப் பின்னர் வெண்கலச் சிலை ஸ்தபதியின் பட்டரையில் உருவாகும் விதம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஆசிரியரும் மற்றவர்களும் குணாவின் சாதனையை எண்ணி ஆச்சரியத்தால் ஒன்றும் பேசமுடியாமல் மலைத்து நின்றனர்.
அங்கு வந்திருந்த குணாவின் கும்பகோணத்து நண்பன் மாணிக்கமும் மல்லிகாவும் மிகவும் நட்புடன் பழகினர். அவளது பாடல்களில் சிந்தையைப் பறிகொடுத்த மாணிக்கம் அவளது இசைத்திறமையை வியந்து பாராட்டினான். அவள் கும்பகோணம் வந்து அங்கு தனக்குத் தெரிந்த சங்கீத வித்துவான் ஒருவரிடம் முறைப்படி இசைப் பயிற்சி பெற்றால் மிகப்பெரிய பாடகியாக உருவாகும் வாய்ப்புள்ளதாக அவன் கூறினான். அதைக்கேட்ட மல்லிகா தன் மனதுக்குள் தான் உண்மையாகவே ஒரு பாடகியாகிக் கச்சேரி செய்வது போலவும் அதை முன் வரிசையிலிருந்து குணா, மாணிக்கம் இருவரும் கேட்டு ரசிப்பது போலவும் கற்பனை செய்து மகிழ்ந்தாள். அச்சமயம் அங்கு வந்த ஸ்தபதி, "மாணிக்கம் கூறுவது முற்றிலும் சரி. மல்லிகா ஒரு சிறந்த இசைப்பாடகியாகும் அதிர்ஷ்டம் அவளுக்கு இருக்கிறது." என்று கூறி அவளும் அவள் பெற்றோர்களும் தன்னுடன் குடந்தை நகருக்குக் குடியேறி அங்கே எதிர்கால வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.
கூலி வேலை கிடைத்தால்தான் சோறு எனும் திண்டாட்ட நிலையிலிருந்து தன் குடும்பம் நல்ல நிலைமைக்கு உயரக் காரணமான தன் மகனை ராமு மனதார வாழ்த்தினான். அம்மகிழ்ச்சியில் சீதாவும் கலந்துகொண்டு குணாவை அணைத்து உச்சிமோந்த்தாள்.
பள்ளிப்படிப்பு எதுவாயினும் அதைத் தவிர நம் ஒவ்வொருவருக்கும் மனதுக்குப் பிடித்த கலைகளிலும் பிற செய்தொழில்களிலும் பயிற்சியடைவது வாழ்வில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை குணாவின் இக்கதையிலிருந்து உணர்ந்து கொள்வோம்.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ?
நிறைவு
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













