மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஆகிரா
|
|
"ஏண்டா, உன் மண்டையிலென்ன இருக்கு? களிமண்ணா இருக்கு? எதைக் கேட்டாலும் பேந்தப் பேந்த முழிக்கறயேடா, இஞ்சி தின்ன குரங்கு போல, நீ எப்படா உருப்படப் போறே?"
ஆசிரியர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்தையே பதிலாய்த் தந்துவிட்டு மரம் போல் நின்றான் குணசீலன் என்ற குணா. அவன் பெயர் என்னமோ நல்ல பெயர்தான், அவன் குணமும் பெயருக்கேற்றாற் போல் நற்குணம் தான், இருப்பினும் "மக்குராஜா" என்று எல்லோரும் கேலியாக அழைக்குமளவிற்கு குணா படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தான். அவன் மண்டையில் களிமண் இருந்ததோ இல்லயோ, அவன் வீட்டைச் சுற்றி நிறையக் களிமண் இருந்தது. அந்தக் களிமண்ணில் தண்ணீர் சேர்த்துக் குழைத்து அதனால் பல பொருட்களை உருவாக்குவது குணாவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. தஞ்சை மாவட்டத்தில் காவேரி ஆற்றுப் படுகையிலிருந்த கிராமமொன்றில் குணா, அவனது தந்தை ராமு, தாய் சீதா, மற்றும் அவன் உடன்பிறப்பான தங்கை மல்லிகா ஆகியோர் வசித்து வந்தனர். ராமு "அன்றாடங்காய்ச்சி" இனத்தைச் சேர்ந்த மண் "வெட்டிக் கூலி தின்னலாச்சே" எனும் மஹாகவி பாரதியாரின் சொற்களுக்கேற்ப ஒரு விவசாயத் தொழிலாளி. சீதாவும் முடிந்த போது நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடை முதலிய விவசாயக் கூலித் தொழிலையே செய்துவந்தாள். காவேரி ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் இல்லாவிட்டால் இல்லை. தண்ணீர் வந்து பயிரிட்டும் பல முறை அதன் பின்னர் பருவம் தவறிப் பெய்யும் கனமழையால் முளைத்த பயிர்கள் முக்காலே மூணுவீசம் அழுகிவிடும். இப்படி வாழ்க்கைப் போராட்ட வெள்ளத்தில் மூழ்கி வெளிவர முடியாமல் தவிக்கும் விவசாயிகள் நிறைந்த ஊர் தான் காவேரிக் கரையிலமைந்த அவர்களது அந்த அழகிய ஊர். காவிரியில் தண்ணீர் ஓடினால் இயற்கை எழில் கொஞ்சும் ஊர். காலை, மாலை இரு வேளைகளிலும் ஆற்றங்கரையிலுள்ள பல சிறு மரங்கள், மற்றும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகொடிகள் புடைசூழ, சூரியன் உதிப்பதும் அஸ்தமிப்பதும் கண்கொள்ளாக் காட்சி. காவேரியில் நீர் ஓடவில்லை என்றால் அது ஒரு வரண்ட பூமி. ஆற்றங்கரையில் ஒரு கோவிலும் அதனருகில் ஒரு அகலமான படித்துறையும் இருந்தன. அவ்வூர்ச் சிறுவர்கள் ஆற்று நீரினுள் கரையிலுள்ள பாறைகள் மீதிருந்தும் படித்துறையின் படிகளிலிருந்தும் சீறிப் பாய்ந்து நீந்தி விளையாடுவதும், ஊரிலுள்ள ஆண், பெண், சிறுவர், சிறுமியர் பலரும் அன்றாடம் ஆற்று நீரில் இறங்கி ஆனந்தமாய் நீராடுவதும் வழக்கம். "குணா, இமயமலை எங்கே இருக்கு? சொல்" என ஆசிரியர் கேட்க, "தெரியாது சார்" என்று குணா சொல்ல, "பென்ச் மேலே ஏறி நில்லு" என்றார் ஆசிரியர். "அப்போ தெரியுமா சார்" என்று குணா கேட்கவே வகுப்பில் பெரிய சிரிப்பொலி எழுந்தது. ஆசிரியர் முறைக்கவே குணா தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். களிமண்ணால் வீட்டில் செய்த பொருட்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று சக மாணாவர்களுக்குக் காட்டி மகிழ்வதில் குணாவுக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஒரு சிறிய தென்னங்குச்சியின் இரு முனைகளிலும் கோலிகுண்டு அளவிலான சிறு களிமண் உருண்டைகளை ஒட்டி, களிமண்ணாலான சிறு பீடம் ஒன்றைச் செய்து அதன் உச்சியில் ஒரு முள்ளைப் பதித்து, களிமண் உருண்டைகளுடன் கூடிய குச்சியின் மையப் பகுதியை அம்முள்ளின் மீது சமநிலையாக அமரச் செய்து குச்சியைச் சுற்றி விட்டால் அது களிமண் உருண்டைகளுடன் சேர்ந்து ராட்டினம் போல் சுற்றும். சுற்றிலும் அமர்ந்துள்ள சக மாணவர்கள் அதனை வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் சட்டைப் பைகளுக்குள் சிறு சிறு களிமண் உருண்டைகளைப் போட்டுவிடுவான் குணா. களிமண் காய்ந்து இருகி சட்டைப் பையைத் திறக்க முடியாமல் அவர்கள் திணறுவதைப் பார்ப்பதில் ஒரு சிறு மகிழ்ச்சி அவனுக்கு. ஊரில் வருடந்தோறும் விநாயக சதுர்த்தி, நவராத்திரி முதலிய பண்டிகைகள் வந்தால் குணாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான். களிமண்ணைக் குழைத்து, அதைக்கொண்டு பிள்ளையார் முதலிய கடவுளர் உருவங்களும், செட்டியார் மற்றும் பிற ஆண், பெண் மனித உருவங்களும் ஆடு, மாடு, சிங்கம், புலி போன்ற விலங்குகள் உருவங்களும் செய்து மிகச்சொற்ப விலைக்கு விற்றுக் காசாக்கி விடுவான். அவ்வாறு ஈட்டிய பணத்தைத் தாயிடம் தந்து விடுவான். அவன் தாய் அப்பணத்தில் அவனுக்கும் மல்லிகாவுக்கும் பிடித்த துணிமணிகள் வாங்கித் தந்தது போக மீதமாவதைக் கொண்டு கணவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, தனக்கும் எடுத்துக் கொள்வாள். குணா முறையாகப் படிக்காதது அவன் பெற்றோர்களுக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை. அவன் பெரும்பாலும் வீட்டிலிருக்கையில் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டும் களிமண்ணைக் கொண்டு அவளுக்கு பொம்மைகள் செய்து கொடுத்துக் கொண்டும் பொழுதைக் களிப்பான். மல்லிகா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் நன்றாகப் படிப்பவள். அத்துடன் இனிமையாகப் பாடுவாள். அவள் தேனினும் இனிய குரலில் உரக்கப் பாடம் படிப்பதையும் பாடுவதையும் கேட்டுப் பெற்றோர்களும் குணாவும் மிகவும் மகிழ்வர். குணா தட்டுத் தடுமாறி மூன்று வகுப்புகளில் இரண்டிரண்டு ஆண்டுகள் படித்த பின் ஒரு வழியாகப் பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்து, படிப்பதாகப் பாவனை செய்துகொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள் மேலே படிக்க அடுத்திருந்த ஒரு சிறு நகருக்குத் தான் செல்ல வேண்டும். குணாவுக்கு பத்தாம் வகுப்பில் தேர்வோம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை, அவனது ஆசிரியர்களுக்கும் அவன் தேருவான் என்று தோன்றவில்லை. பாதிக் கிணறு தாண்டிய கதையாய், தானும் தன் தகப்பனாரைப் போல கூலி வேலை செய்வதுதான் வழி என்று எண்ணிக் கொண்டிருந்தான் குணா. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வும் வந்தது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே குணாவைத் தவிர மற்றவர் அனைவரும் தேறிவிட்டனர். குணாவுக்குத் தான் பரிக்ஷையில் தேறாதது சிறிதளவு கவலையைத் தந்தாலும் அவன் மனதைத் தேற்றிக்கொண்டான். இந்நிலையில் அவர்கள் ஊரில் ஒரு சிவாலயம் கட்டுவதாக ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். கோவில் கட்ட இடம் தேர்வு செய்து கும்பகோணத்திலிருந்து ஒரு ஸ்தபதியை அழைத்து வந்து விரைவிலேயே ஆலயத் திருப்பணியைத் தொடங்கினார்கள். தொடரும் .... |
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |