பாரதியின் பாரதம்
விஷி
பாரதியும் பாரதமும்
வெள்ளைக்காரச் சூரியனின்
வெப்பம் சிறிதும் தாளாமல்
அனலில் இட்ட புழுவினைப் போல்
அழுதே கரைந்த வேளையிலே,
சிங்காரச் சீமான்கள்
கொலைகாரப் பித்தர்கள்
அயல் நாட்டு அரக்கராம்
ஆங்கிலேயக் கயவர்களின்
அக்கிரமப் பிடியிலே
அளவில்லாமல் தொடர்ந்த
அட்டகாசச் செயல்களிலே
அடிபட்டு மிதிபட்டு
அமைதியாக பாரதமே
அழிந்து வந்த நேரத்திலே,
புரட்சி வெள்ளத்தை
புவிதனிலே ஓட விட்டான்,
புத்துணர்ச்சி முகத்தில் மிளிரும்
புனித மாந்தன் பாரதியாம்.
பாரதியின் பாட்டெல்லாம் வெறும்
பாட்டாக இராமல்
பாடுபட்டு பாரதத்தை துளி துளியாய் வளர்த்த
பாட்டாளி வர்க்கத்தின்
பஞ்சு போன்ற இதயத்தில்
பசுமரத்தாணி போல
பசுமையாக நிலைத்தனவாம்
அவை-
பாரதத் தாயின்
பச்சிளங் குழந்தையின்
பிஞ்சு போன்ற உளத்திலும்
பத்திரமாய்ச் சென்று
பதுங்கிக் கொண்டனவாம்
பாட்டுக்கொரு புலவனாம்
பாரதியின் 'கவிதை'யெல்லாம்
'கதை'யாக இராமல்
கறைபட்ட எண்ணம் கொண்ட
பாவிகளின் நெஞ்சங்களில்
பயம் என்னும் 'விதை'யை
நறுக்கென்று 'தை'த்தனவாம்.
பைந்தமிழன் பாட்டைக் கேட்டு,
பட்டுப் போன மரமெல்லாம்
துளிர் விட்டு வளர்ந்தனவாம்
பரங்கியரை அழித்து விட
சபதம் ஏற்று வந்தனவாம்
அத் தந்திரத்தைக் கண்ட
அந்நியர் கண்களோ
ஆச்சரிய அச்சத்தில்
ஆயிரம் அடிகள்
அகல விரிந்தனவாம்
இங்ஙனம்,
இந்நாட்டு மக்களின்
இழி நிலைப் போக்க
இனிய கவி பல இயற்றி
இமைப்பொழுதும் சோராதுழைத்த
இப்பெரும் புலவனின்
இணையற்ற உயிரை
இருந்த காலம் போதுமென்று
இழுத்துக் கொண்டு சென்றதையா
இயற்கை.
இனி வரலாறு காணாது
இவனையொப்ப கவியை.
1942-
இருக்கும் இடம் போதாதென்று
இந்தியாவும் என் நாடென்று
சொந்தம் பாடி வந்து விட்ட
பிக்சைக்கார நாய்களை
புரட்சியெனும் தீயினிலே
புரட்டியெடுத்து நசுக்கி விட
வீட்டைக் கடந்து நாட்டைக் காக்க
இந்திய இளைஞர் போர்க்கோலம் பூண்டனர்
சிங்கம் போல் சீறியெழுந்து
சீமான்களைச் சாடினர்
கொதிக்கும் பாலை
நீர் விட்டு அடக்கலாம்
கொந்தளிக்கும் கடலை?
1947-
அந்நிய நாட்டவர் பெரிதும்
அச்சம் கொண்டனர்
இனி இந்நாட்டை
நொடிப் பொழுது ஆண்டாலும்
இங்கு நம் தலையிராது என்று
கூடி முடிவெடுத்தனர்
விடுதலையை நமக்கும்
விரைவிலேயே அளித்தனர்
சுதந்திரச் செடிதனை
செழித்து வளர
சத்தியக் கவிதைகளால்
சுலபமாய் வித்திட்ட
சுப்பிரமணிய பாரதியை
சத்தியமாய் எவரும் அன்று
சிறிதும் நினைக்கவில்லை
இன்றோ அவன் நாமத்தை
இமயம் வரை இசைக்கின்றார்
"தமிழ் மகனின் கவிதைகளோ முத்து
தமிழிலக்கியத்தின் பரம்பரை சொத்து"
என,
இனிய விழா பல நடத்தி
இவன் புகழ் பாடுகின்றார்
இருந்தபொழுது மறந்து விட்டு
இறந்த பின்பு இசைப்பதுதான்
இந்தியப் பெரும் நாடு
இவ்வினிய நாட்டைச் சார்ந்தவர்தான்
இந்தியப் பெரும் மக்கள்
p.s. மேலே இருக்கும் கவிதையை எழுதியது ஆகஸ்ட் 1983 அன்று. ஆதலால், இக்கவிதையை "அப்பொழுதிருந்த" விஷி எழுதியதாகவே கருத வேண்டும். :)
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












