காந்தி தந்த நாடு
நீல. பகவன்
காந்தி ஜெயந்தி
உலகமெலாம் போற்றுகின்ற உன்னதநந் நாடு!உண்மையன்பு தெய்வமென்றே உணர்ந்தொளிரும் நாடு!
பலகலைகள் பாங்காக பரந்துயர்ந்த நாடு!
'பாரதமாம்' நந்நாடாய்ப் பண்பட்ட நாடு!
இலகிடுமோர் இமயத்தால் இசைபெருகும் நாடு!
இதிகாச காவியங்கள் இனிதொளிரும் நாடு!
நலங்கொழிக்கும் நம்நாட்டின் நயம்பெருகப் பாடு!
நாமார்க்கும் குடியல்லோம் நறும்புகழைப் பாடு!
வேதங்கள் சாத்திரங்கள் விரிவடைந்த நாடு!
விருட்சமென உபநிடதம் விண்ணுயர்ந்த நாடு!
நாதத்தின் ஓங்கார நலமறிந்த நாடு!
நாநிலத்தில் வியப்பளிக்கும் நாரதமுனி நாடு!
தீதிலாத புத்தபிரான் திறமுயர்ந்த நாடு!
தேசாபிமானத்தால் தேர்ந்ததிந்த நாடு!
ஆதிசங்கர முனிவர் அவதரித்த நாடு!
அத்வைதம் ஒன்றேதான் அழகென்ற நாடு!
மலையரணால் காட்டரணால் மதிப்புயர்ந்த நாடு
மன்னவர்கள் பலநூறாய் ஆண்டதிந்த நாடு
அயல்நாட்டார் வருகையினால் அவதிக்குள்ளாகி
அல்லலெல்லாம் உருவாகி அறங்குலைந்து போக
நிலையான செல்வமெலாம் நீசர்களின் கையில்
நிர்கதிக்கே ஆளாகி நிமிருவதும் எங்கே
அலைமோதும் நெஞ்சத்தால் அமைதியிலா நாடு
அம்மம்மா இதுஎன்ன அதிதுயரம் கூறு.
அந்நியரில் வெள்ளையரே அடிமை செய்தார் நம்மை
அன்றாட வாழ்வினிலே அளவிலாத நீளம்
தன்நிலைமை தாழத்தான் தவித்தாளே தாயே
தயவில்லா வெள்ளையரின் ஆதிக்க வெம்மை
பன்நூறு ஆண்டுகளாய் பரிதவித்தோம் நாமே
படாதபாடு பட்டுத்தான் பயந்துபோ னோமே
இன்னவாறு நடந்ததுதான் இந்தியத்தின் வாழ்வு
இதற்கோர்நல் விடிவுண்டோ எண்ணத்தின் கேள்வி.
இந்தியத்தில் குஜராத்தாம் மாநிலமாம் தன்னில்
எழுந்ததுவே புதியநிலா சத்தியவான் தன்னில்
சிந்தைகோர் இதமான விருந்தாக வந்த
செழித்தவொரு குடும்பத்தின் காந்தஒளி யாக
வ்ந்தவரே காந்தியென விவரிக்கும் தன்மை
வாதாடப் பிறந்தவொரு வழக்குரைஞர் ஆனார்
விந்தையிது விடுதலைக்கே விடிவெள்ளியாக
வேகமுடன் கரம்சந்த் காந்தியென நின்றார்.
அடிமைநிலை அகற்றிடவே அன்பேதான் ஆயுதம்
அறவழியே திறமுயர்ந்த அறிவாளர் ஆயுதம்
கொடுமைபல செய்தவர்க்கும் குளிர்முகமே ஆயுதம்
கொடுவாளை எடுத்தவர்க்கும் கும்பிடுதல் ஆயுதம்
விடுதலையாம் வேள்விக்கே விறகாக மாற்றார்
விருப்பத்தை மாற்றுவதே வழியென்று கண்டார்
கொடுஞ்செயல் புரிந்தவரும் கும்பிடத்தான் செய்ய
குவலயத்தில் காந்தியவர் கோமானாய் நின்றார்.
வெள்ளையர்கள் பணிந்திடவே கதராடை கொண்டார்
வேதனைகள் மாற்றிடவே சாதனைகள் செய்தார்
எல்லையிலாக் கொடுமையிலும் எழும்அமைதி காத்தார்
எழிலான ஆயுதமோ சத்தியமோ என்றார்
வல்லமையால் அடித்தாலும் வலிமையுடன் நின்றார்
வாக்குவாதம் செய்யாதே வாய்மையினால் வென்றார்
இல்லாத நிலைமைக்கே இங்கிலாந்து பணிய
இறைஉணர்வால் வென்றவரே இந்தியத்தின் காந்தி.
சத்தியா கிரகத்தின் மூச்சுக்கே அஞ்சி
சஞ்சலித்தார் வெள்ளையர்கள் சமாதானமாக!
உத்திகளை புதியதென உணர்ந்தெழுந்த காந்தி
உறுதிதனை உணர்ந்தவர்கள் வெள்ளையர்கள் தோற்றார்
சத்தியவான் காந்தியவர் கர்மயோகம் கண்டே
கதிகலங்கி காந்தியவர் காலடியில் வீழ்ந்தார்
சத்தியமே வென்றதனால் விடுதலை சாதித்தோம்
சமதர்ம சாதனையால் சரித்திரம் படைத்தோம்.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














