கண்ணே! மணியே! கதை கேளு
கணினி பிறந்த கதை கேளு
மண்ணில் வாழும் மனிதனுக்கு
அணியாய்த் திகழும் கருவியது!
எண்ணும் எழுத்தும் கண்ணெனவே
அன்றே சொன்னான் வள்ளுவனும்
விண்ணையும் காணப் பயன்படுமே
கணினி என்னும் கருவியது!
எண்ணும் எழுத்தும் கண்ணாக
எழுதித் தந்த புலவரவர்
பண்ணாய்ப் பாடிய பாட்டுண்டு
கல்லில் வடித்த கதையுண்டு
ஓலையில் எழுதிய நாளுண்டு
தாளில் வரைந்த கையுண்டு
விண்ணை எட்டிய அறிவதனால்
கணினியில் பொறிக்கும் நாட்களிவை!
ஓலை வெந்து மடிந்தாலும்
காகிதம் நைந்து இறந்தாலும்
காலையில் பொறித்த கணினியிலே
காலம் காலம் வாழ்ந்திடுமே!
மாலையில் வரைந்த உருவமெலாம்
ஞாலம் முழுதும் பரவிடுமே
நாளை எழுதும் எழுத்தெல்லாம்
இணைய தளத்தில் பறந்திடுமே!
கண்ணே! மணியே! கதை கேளு
கணினி வளர்ந்த கதைகேளு
நாளை நீயும் வளர்வாயே
கணினியில் நீயும் கற்பாயே
வாழும் கணித்தமிழ் வளர்ந்திடுமே
தரணியில் வெற்றி கண்டிடுமே
நாளும் கணினியில் கற்றிடுவாய்
நலமாய் உலகில் உயர்ந்திடுவாய்!
-- என்.வி. சுப்பராமன், சென்னை.