திருக்குறளைப் படிக்கணும்!
திருக்குறளைப் படிக்கணும்
படிச்சபடி நடக்கணும்
தினந்தோறும் படிக்கணும்
மனப்பாடம் செய்யணும்!
'கடவுள் வாழ்த்து'ப் படிக்கணும்
கடவுளரை நம்பணும்
மனிதனாக வாழணும்
தெய்வமாக மாறணும்!
'அருளுடைமை' படிக்கணும்
அருள் மிகுந்து வாழணும்
'அவையறிதல்' படிக்கணும்
அவையறிந்து பேசணும்!
அறிவுடைமை' படிக்கணும்
அறிவைப் பெருக்கிக் கொள்ளணும்
'அன்புடைமை' படிக்கணும்
அன்பு காட்டத் தெரியணும்!
'இனியவை கூறல்' படிக்கணும்
இனிமையாகப் பேசணும்
'அடக்கமுடைமை' படிக்கணும்
அடக்கத்தோட இருக்கணும்!
'ஈகை'தன்னைப் படிக்கணும்
கொடுத்து வாழக் கற்கணும்
'ஊக்கமுடைமை' படிக்கணும்
ஊக்கம் மிகுந்து வாழணும்!
'ஒழுக்கமுடைமை' படிக்கணும்
ஒழுக்கத்தோடு பழகணும்
'வாய்மை' தன்னைப் படிக்கணும்
வாய்மை பேசி வாழணும்!
'கல்வி'தன்னைப் படிக்கணும்
கசடறவே கற்கணும்
கற்றபடி நிற்கணும்
கருணையோடு வாழணும்!
'பண்புடைமை' படிக்கணும்
பண்போட வாழணும்
'புறங்கூறாமை' படிக்கணும்
கோள் சொல்லாம இருக்கணும்!
'பெருமை' தன்னைப் படிக்கணும்
பெருமை மிகுந்து வளரணும்!
'பொறையுடைமை' படிக்கணும்
பொறுமையோடு வாழணும்!
திருக்குறளைப் படிக்கணும்
படிச்சபடி நடக்கணும்
தினந்தோறும் படிக்கணும்
மனப்பாடம் செய்யணும்!
சுப்பராமன்