மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
செபரா
|
|
உள்ளே
இணையப் பாட்டி ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management
|
15. திருவண்ணாமலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே நற்பலன் கிடைக்கும்!அசையாத ஒன்றாகி, அசலமாய் நின்ற ஈசன் அடியார்க்கருளஇசைந்தான் எழுந்தருள்வான்; இக்கோயில் நிற்குமந்த திசை நோக்கிக் கைதொழு, திருவருள் செய் அண்ணாமலையென இசைந்திங்கே தொழுகுவையே இனிதிங்கென் மனமே!! ஈசன் தனது அடியவர்களுக்கருளத் திருவுளம் கொண்ட காரணத்தால், அசையாத பெரும் கற்பாறையாக இறுகி நிற்கும் இந்தப் பெரிய மலையுருவாகக் காட்சியளிக்கிறான். அவனைத்தேடி வேறெங்கும் செல்ல வேண்டாம். இந்தக் கோவில் இருக்கும் திசையினை நோக்கிக் கை தொழுது, அண்ணாமலையே எனைக் காப்பாயென்றே வேண்டினால் போதும்; நமக்கருள்வான். இனியாவது மனமுவந்து வணங்குவையே எனது மனமே. 16. மும்மலங்களை அழித்து, நல்வாழ்வை அருளுவான் அண்ணாமலைமுளைவிடும் வித்தென மும்மல ஆசையால் முப்பொழுதும்உளையுமென் மனதிற்கு உய்யும் வழியுணர்த்துமவன் அருளால் விளைவதும் சிறப்பாகும் அவனருள் வேண்டுவாரவர் பிறவித் தளையதும் அறுக்கும் அண்ணாமலையான், தாள் பணிந்தாரவர்க்கே!! (பொதுவாகத் தேவையில்லாத காட்டுச் செடிகளின்) விதைகளைக் கண்ணில் படாதபடி, மண்ணிற்கடியில் ஆழத்தில் போட்டு வைத்த பொழுதும், முளைப்பதற்கான ஆதாரங்கள் ஒரு சிறிது கிடைத்தால் கூட, உடன் முளைத்தெழுவது போல (ஆணவம், கன்மம், மாயை ஆகிய) தேவையில்லாத மும்மலங்கள் மனதிற் குடியேறி, வெளிப்பார்வைக்கு, அவை அடக்கப்பட்டது போலத் தோன்றினாலும், வாய்ப்பு கிடைக்கும் பொழுது, வெளி வந்து நேரம் காலம் இல்லாது எனக்குத் தொல்லை தந்து, என் மன உளைச்சலுக்குக் காரணமாகின்றன. அவற்றிலிருந்து உய்ய வழியருள்பவன் அண்ணாமலையே!. அவனை வேண்டிப் பணிந்தால், நல்ல வழி காட்டுவான். இந்த மும்மலங்களும் தொல்லை தரக் காரணமான, இப்பிறவி எனும் தளையதனை நீக்குவான். அவன் தாள் பணிவோம். 17. மலையே சிவமாக வலம் வருவது, மனம் வேண்டும் நலமது தருமென்பார்சித்தர்கள் ஞானியர்கள், சிவமாகிய சீலர்கள் உலகில்உத்தமர்கள் உயர்ந்தவர்கள் உலவிடுமோர் மலையீது!! நித்தமும் மனமொன்றி நினைவெல்லாம் சிவமேயாகி பக்தியுடன் வலம் வருவார் பரமனருள் பெற்றுய்வரே!! எண்ணற்ற பல சித்தர்கள், மெய்யறிவு பெற்றவர்கள், விருப்பு வெறுப்பு இல்லாத சிவஞானச் செம்மல்கள், உத்தம குணமுடைய பெரியவர்கள், நல்ல மனதுடைய பெரியோர்கள் இவர்களெல்லாம் விரும்பி உறையும் புண்ணிய பூமி இது. அவர்களெல்லோரும் இந்த மலையின் பல பகுதிகளிலும், இருப்பிடமாகக் கொண்டு, அந்த அண்ணாமலையானை வேண்டித் தவமிருந்து, மெய்யறிவு பெறுகிறார்கள். அதனாலேயே, இந்தத மலையினை வலம் வரும்பொழுது, சிவனை மட்டுமே நினைத்து, ஐந்தெழுத்தினை ஓதி, அதுவே நினைவாக, மற்ற நினைப்புக்களைத் தவிர்த்து, பக்தி சிரத்தையாக வலம் வருபவர்கள், அண்ணாமலையானை மட்டுமன்றி இந்தப் பெரியோர்களையும் சேர்த்து வலம் வரும் புண்ணியமும் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்டவன் அருள் முழுமையாகக் கிடைக்கும் (ஆண்டவனே கருணை வடிவானவன்; அருளினை அள்ளித் தருவான்; இந்தப் பெரியோர்கள் ஆசியும் சேர்ந்தால், கிடைக்காத நற்பேறுகள் உண்டோ?). 18. அண்ணாமலையானை அறிந்தால், அனைத்தும் அறிந்ததாமே!!தன்னையறிவாய்; வேதப் பொருள் தானறிவாய்; தனித்தாங்கேமுன்னையினும் சிறப்பாக முன் நிற்கும் சிவத்தை அறிய அன்னையென எனையாளும் அண்ணாமலையானை நினைக்க! இன்னமும் தாமதமேன்; (இன்றே) இசைவாய் இனிதென்றென் மனமே!! நான் யார்? என்று அறிவதே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய அரிய பணி. தன்னை அறிந்தவன் ஞானி; மெய்யறிவு பெற்றவர்கள் வேதம் உரைத்ததீதென்று (அதன் உட்பொருளை) அறிந்தால், ஆண்டவனையே அறிந்ததாகும்; ஞானம் வரப்பெற்றால் ஆண்டவனை அறிவது எளிது. பற்றுகளகற்றி, தனித்திருந்து, இது வரையிலும் முழுமையாக அறியாத சிவத்தை இன்னமும் சிறப்பாக அறிவதற்கு (ஆண்டவனை அறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவன் இயங்கிக் கொண்டே இருப்பவன் நேற்று அறிந்தது இன்று வேறாகும். எனவே அவனை அறியத் தினம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும், அதாவது இதைத் தவிர வேறெந்த நினைப்பும் இல்லாது இருத்தல் வேண்டும்) இதையெல்லாம் அறிய எளிதான வழி, எனது அன்னையினும் மேலாகப் பரிவுடன் என்னைக் காக்கும் அண்ணாமலையானை மனதால் நினைப்பதே போதும். இதனை உணர்ந்தும், உனக்கு இன்னும் என்ன தயக்கம்? மனமே இன்றே, இப்பொழுதே, ஏற்றுக் கொள். இது உனக்கு இனியதோர் அனுபவமாகும். 19. நால்வரும் பாடிய சிறப்பின் நலம் தரும் திருவண்ணாமலைசேல்விழி நங்கை அன்னை சிவகாமி உவந்த நாமம்சீலத்தால் உயர்ந்தார் அவர்தம் சிந்தையினில் உணர்ந்த நாமம் நால்வரும் ஓதிய நாமம் நலம் தரும் என்றே நம்பும் மால்வரையின் நாமம் இதுவே எந்தன் மனமுவந்த அண்ணாமலையே மீன் போன்ற அழகிய கண்களை உடைய எனதன்னை சிவகாமியின் மனதிற்குகந்த ஒரு பெயர். ஒழுக்கத்தால் உயர்ந்த தவ சீலர்கள் நாளும் மெய்யறிவூட்டும் என்று அதன் சிறப்புணர்ந்து உரைக்கும் ஒரு பெயர் சமயக்குரவர்கள் நால்வரும் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிப் பாடிய ஒரு பெயர். சொல்பவருக்கு மட்டுமல்ல, மனதாலே நினைத்தாலே நல்வழி காட்டும் என்று நான் நம்பும் அந்தப் பெயர் இந்தப் பெரிய மலையின் பெயரே. இதுவே எந்தன் மனதிற்குகந்த அண்ணாமலை எனும் பெயர். 20. இறையருளைப் பாட ஏற்றது ஆறறிவுடைய, இம்மானுடப் பிறவி என உணர்வீர்.இல்லையென்றுரைப்பார் இறையருளை, (தம்) இதயத்து உணராதார்;நல்லதனை உரைக்கும் எங்கள் நாதனே அண்ணாமலையாய் எல்லையில்லாக் கருணையின் இங்குற்றான்; அறியாதே இப்பிறவித் தொல்லையெனத் தொடர்பறுக்கக் கை தொழுதிங்கே வேண்டி நிற்பார்! இறைவனே இல்லை என நாத்தீக வாதம் பேசுபவர்கள் இந்தக் கலியுகத்தில், இறைவனை உள்ளத்தில் உணரத்தான் முடியும். நேரில் காண்பது அவ்வளவு எளிய செயலல்ல என்பதனை அறியாதவர்கள். அதனாலேயே, எல்லோருக்கும் நல்லதையே எப்பொழுதும் உரைக்கும் இறைவன், இங்கு கண்ணெதிரே, அண்ணாமலையாய், அருள் பாலிக்க அமைந்துள்ளான். இதனை உணர்ந்தும், பிறப்பிலேயே, இறைவனைக் குறித்து எண்ணமிடவும், பாடவும், பேசவும், வாய்ப்புத் தரும் ஆறறிவுடைய மானுடப் பிறப்பின் சிறப்பினை அறியாது, அண்ணாமலையானுக்கு ‘அரோஹரா’ அருணாசல சிவமே என்று இரு கை கூப்பித் தொழாமல், இப்பிறவித் தொல்லை விடுபட வேண்டும் என்று மட்டும் வேண்டுகிறார்கள் (இறைவனிடம் எதுவும் வேண்டத் தேவையில்ல. அவனே நமக்கு வேண்டியதைத் தருவான்). அறிய வேண்டுவது: நாமெல்லாம் நடிகர்கள். ஆட்டுவிப்பான் இல்லையேல், நாமெல்லாம் “ஜடம்”. முதல் நாள் அரசனாக வேடமிடப்பட்டவருக்கு, மறு நாள் ஆண்டி வேடமிடப்படலாம். அதனால் நான் அரசனென்றோ, ஆண்டியென்றோ நினைத்துக் கொண்டால் அது நமது அறியாமை. இதுதான் நம் அனைவரின் நிலையும். அந்த நாடகத்தின் மூலம் சொல்லப்படும் மூலக்கருத்து என்ன, அதன் முடிவெப்படி இருக்கும் என்பதெல்லாம், நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான இறைவனுக்கு மட்டும்தான் தெரியும். இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியினைச் சிந்தனை செய்துதான் இங்கு நம்மைப் பிறப்பித்திருக்கிறான். ஆட்டி வைக்கிறான். அது முடியும் வரை நமக்குப் பிறவித் தளையினின்றும் விடுதலை கிடையாது. எனவே நம்மைக் கடைத்தேற்றுவதும் அவன் முடிவென எண்ணி, இந்தப் பிறவி தொடருமா, தொடராதா என்றெல்லாம் குறித்த கவலையினை விட்டு, இறைவனைப் போற்றிப் பாடுவதே, நமது பணியென நினைப்பதுவே, சிறந்த வழியாகும். உரிய காலம் வந்தபின் முக்தி தானே கிடைக்கும். 21. அண்ணாமலையானின் திருவுருவம் கண்டபின் வேறெந்தக் காட்சியதும் சிறப்பில்லைதண்ணார் வயல் புடை சூழ் தனிச்சிறப்பின் நடு நாட்டு வளர்பெண்ணாகி, ஆணாகிப் பேருருவ மலையாகி நிற்குமெங்கள் அண்ணாமலையானை அழல் நிறத்து மேனியனை எந்தனிரு கண்ணாரக் கண்ட பின்னே மற்ற காட்சிக்கும் சிறப்பேது!! முன்னூறுக்கும் மேற்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த, செழிப்பு மிக்க வயல்கள் சூழ்ந்த தனிச்சிறப்பு வாய்ந்த நடுநாட்டில் இத்திருத்தலம் உள்ளது. இங்கே பெண்ணும் ஆணும் ஒன்றான அர்தநாரீச்வரர் எனும் மாதொருபாகன் அண்ணாமலை எனும் பெருமலையாக இருக்கிறான். அந்தத் தீபிழம்பின் நிறமாகிய செவ்வண்ண மேனியனை, எங்கள் சிவ பெருமானை இந்தப் பிறவியிலே, எந்தனது இரு கண்களாலும் பார்த்த பேறு பெற்றேன். இனி மேல் காண்பதற்குச் சிறப்புடைய காட்சி வேறென்ன இருக்கிறது (ஒன்றுமில்லை). 22. அண்ணாமலையானைப் பாடுபவருக்கு, உண்ணாமுலையம்மை அருளும் உண்டுஅண்ணாமலையானை, அருளாளன் திருப்புகழை,பண்ணாலே பாடிடவும் பரமனருள் வேண்டுவதாய் எண்ணுவாரவர் மனம் இசைந்த நற்பேறும் பெற உண்ணுவாள் அருள் செய எங்கள் உமையே!! திருவண்ணாமலையில், தீப்பிழம்பாய் நெடிதுயர்ந்து நிற்கும் எங்கள் அண்ணாமலை ஈசனின் திருப் புகழை (தேவாரம், திருவாசகம் போல) நல்ல இசையமைத்துப் பாடவும் அவனது அருள் வேண்டும். (மற்றவருக்கு இப்புண்ணியம் கிடைக்காது என்பதாக) இப்படிப் பாட வேண்டும் என்று நினைத்தாலே, அவர் மனம் நாடிய நல்ல வாழ்வும், எல்லாப் பேறுகளும், அவர்களுக்கு உண்டாக, எங்கள் உமையம்மை (உண்ணாமுலையம்மை) விழைந்து அருள் செய்வாள் (தன் கணவனைப் புகழ்ந்து நல்ல வார்த்தை சொல்ல விழைபவருக்கு, மனைவி, நல்லது நடக்க வேண்டுமென நினைக்க மாட்டாளா? நினைப்பாள். எனவே சொல்லுவீர்). 23. அண்ணாமலை அண்ணலைத் தீந்தமிழ்ப் பாடல் தன்னில், பாடுவதே சிறப்பு தரும்.வானுலகும் மண்ணும் வாழ்த்தியே தினம் பாட,ஆனதொரு சிறப்பின் அண்ணாமலை அண்ணலை தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாடல்தன்னில், ஊனுடன் உயிரும் கலந்து உவந்திங்கே பாடுவமே!!! வானுலகத்து தேவர்களும், மண்ணுலகில், சமயக் குரவர்கள் நால்வரும், யோகியரும், சித்தர்களும், முனிவர்களும், நல்லோர் பலரும் போற்றிப் பாடுகின்ற சிறப்புடையவன் அண்ணாமலை ஈசன். அவனை நாமும் தேனினும் இனியதான தீந்தமிழ்ப் பாடல்களில், நமது உடலும் மனமும் ஒன்றிப் பாடுவது நலம் தரும். 24. அண்ணாமலையானைப் பாடுவதால், தேவர்கள், முனிவர்கள் ஆசிர்வதிப்பர்கண்ணாரக் கண்ட காட்சியே களிப்புத் தரும்; கசிந்துருகிப்பண்ணாலே பாட, பரமனருள் தானே கிட்டும். விழைந்திங்கு விண்ணாள்வார், முனிவர், வேதவித்துக்கள் ஆசி நல்கும்! எண்ணிடவும் தாமதமேன் இனிதே இங்கென் மனமே!! அண்ணாமலையானை இரு கண்ணாலும் பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். மனமொன்றிப் பாடிடவோ, அவன் அருள் தன்னால் நமக்கு உண்டாகும். அதனாலே மகிழ்ந்து தேவர்களும், முனிவர்களும், நான்கு வேதங்களையும் கற்று அதன் பொருளை உணர்ந்தவர்கள் தானாக முன் வந்து ஆசி வழங்குவார்கள். இதைவிட வாழ்வில் பெருமை தரும் நிகழ்ச்சி வேறேதும் உண்டோ? இனிமேலும் தாமதிக்க, மனமே உனக்கு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா? (இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கசிந்துருகிப் பாடுவயே). 25. இடர் உண்டாகாமல் என்னைக் காக்கும் ஈசன், என் உள்ளத்தினுள் உறைகிறான்இடர் களைந்தெமையாள்வான் இறைவனவன் என்றே சொல்லி,மடமங்கை நல்லாள் உவந்த மாதேவன் கழலினைப் பற்ற, படங்கொள் நாகமொடு பாயும் கங்கையும் மதியுமேற்ற பசுபதியிங்கு இடங்கொண்டான் நாளுமென் இதயத்து வாழ்வானென்பேன்!! எனக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் நிவர்த்தி செய்து, என்னை ஆளுகின்றவன் எனது இறைவன் என்ற நம்பிக்கையில், தேவையில்லாத செயல்களுக்கு, ஒரு பொழுதும் முக்கியத்துவம் தராதிருக்கும், பெண்ணினத்திற்கே பெருமை தரும் என் அன்னை உமையாளை இடப்பாகம் ஏற்ற பெருமைக்குரியவனின் திருவடிகளைப் பற்றியதால், படமெடுத்தாடும் பாம்பும், இளம்பிறைச் சந்திரனும், வற்றாது பாயும் கங்கையும் தன் திருமுடியில் தாங்கி நிற்கும் பசுபதி, என் மனதில் இடம் பெற்றான். எந்நாளும் என் இதயத்தில் நிலைத்திருந்து என்னை நல்வழிப்படுத்துவான் (மடம் என்பது சில வேண்டப்படாத செய்கைகளைக் கண்டும் காணாதது போலிருத்தல். மடமை – அறியாதது போல இருப்பது. அதற்கு முக்கியத்துவம் தராதிருப்பது. உத்தமப் பெண்களுக்கு இது ஒரு அணிகலம். இதனால், தேவையில்லாத குழப்பங்கள், பிரச்சினைகள் வராதிருக்கும்). 26. பெற்றவளை விடவும் சிறப்பாகக் காக்கும் இறைவனை எந்நாளும் பாட வேண்டும்உற்றதிடர் நீக்கி, உறுவனவும் விலக்கி என்னைப்பெற்றவளினும் மேலாய்ப் பேணியே வளர்க்கும் என்பார்! கற்றவர் உரைத்த நல்ல கருத்தினை மனதில் கொண்டேன்!! இற்றைக்கும் பாடுகின்றேன் இறையருள் வேண்டி நானே!! நமக்கு உண்டான தீமைகளை விலக்கி, இனிமேல் வராது பார்த்துக் கொள்ளும் தாயை விடப் பாசமுடன் எனை வளர்ப்பவன் அண்ணாமலை என நன்கு கற்றுணர்ந்த பெரியோர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை எனது மனதில் ஏற்ற காரணத்தால், அவனை வேண்டிப் பாடுவதொன்றே பணியென்று, இன்றளவும் செய்து வருகிறேன். 27. இறைவனை நினைந்துருகிப் பாடுபவரை, அவன் என்றும் காப்பான்.வள்ளலை, வளமார் செந்தமிழால் பாடுவார் அன்பரவர்உள்ளத்தில் உறைவானை; ஊழ்வலி நீக்குவானைப் பணிய அள்ள அள்ளக் குறையாத அருளமுதை வழங்குவான்! இதில் எள்ளளவும் ஐயமில்லை இசைந்திங்கே பாடுவீரே!! அருளை அன்பரவருக்கு வாரி வாரி வழங்குவதாலேயே சிறப்புற்ற இறைவனது நாமந்தன்னைப் பாடும் அன்பரது உள்ளத்தில் என்றும் உறைபவன். விதி வசத்தால் ஏற்படும் செயல்களின் வேதனையைக் குறைக்க, அருள் புரிவான். அவனைப் பணிந்தால், என்றுமே குறையாத அவனது அருளாகிய அமுதத்தை வழங்குவான். இதிலே ஒரு சிறிதும் கூட சந்தேகப்பட வேண்டாம். அவன் மனமுவந்து நல்லது செய்வான். அவன் புகழைப் பாடுங்கள்(பாணாசுரனிலிருந்து, பல அசுரர் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். தவம் செய்து தன்னைப் பாராட்டிப் பேசுவாருக்கு அருள் வழங்கி அதனால் இறைவனே பல தொல்லைகளுக்கு ஆளானதெல்லாம் நாம் அறிந்ததே. இது இறைவனின் குணம். அந்த அசுரர்களுக்கே வரம் தரும் இறைவன் நமக்கருள மாட்டானா? அருளுவான். மேலும் விதிப்படிதான் எதுவும் நடக்கும் என்பதற்கு இறைவனே விலக்கல்ல என்றும் நாம் அறிகிறோம். அதனாலேயே விதியினால் உண்டாகும் வேதனையின் கடுமையைக் குறைக்கும் வழிதனை, மன வலிமையை ஆண்டவன் நமக்கருளுவான் என்பதாம்). 28. வேதத்தின் உட்பொருளே, இறைவனை அறிதலாகும் என்று உணர்வீர்எல்லா வளமும் எமக்கருள்வான்; இறைவனவன் புகழைச்சொல்ல இது தருணம்; சுகம் தரும் அனுபவம் என்றார் நல்லார் அவருரைத்த நான்மறையின் பொருளதனை மெல்லவே பிறர்க்குணர்த்தும் மேன்மையினைப் பாடுவமே!! நம் மனம் நாடும் எல்லா வளங்களும் நமக்கருளுபவன் இறைவன். அவன் புகழைச் சொல்ல நேரம் காலம் எதுவும் இல்லை. இப்பொழுதே சொல்லலாம். அது ஒரு இனிமையான அனுபவம் என்று சொல்லிய பெரியவர்கள் உரைத்த நான்கு வேதங்களின் உண்மைப் பொருளே, இறையுண்மையினை அறிவதேயாகும். இது மெல்ல அவனோடு அவன் நினைவினில் ஒன்றியவர்கள் உணரும் சிறப்பு. அதனைப் பாடுவோம். இறை நாம சங்கீர்த்தனம் இனியதொரு அனுபவம்.
அன்புடன்
|
GIVE YOUR FEEDBACK FOR THIS LITERARY WORK IN THE FORM BELOW
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |