மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

அண்ணாமலையான்

பாகம் 1 - செபரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
A website full of English poems
Thiruvannamalai Temple, Image courtesy: Wikipedia இது அண்ணாமலையான் திருப்புகழ், மற்றும் ஊர், மலைவலம் வருதல் போன்ற பல சிறப்புகளைப் பலவாறாகப் பாடித் துதிக்க ஏற்ற வகையில், எளிய இனிய தமிழில் இயற்றப்பட்ட கவிதைத் தொகுப்பு. எளிமையாகப் பொருளுணர வேண்டி, சொற்கள் பிரித்து எழுதப்பட்டிருக்கின்றன. எனவே பஜகோவிந்தம் கூறியபடி, தளை, அடி, தொடை, சீர் என்று இலக்கணம் இருக்கிறதா எனப் பாராமல், இறையருளே நம்மைக் காக்க வல்லது என்று எண்ணுபவருக்கு, இது ஏற்றது. அண்ணாமலையான் அடியார்களுக்கு, இது எனது பிறந்த நாள் பரிசு.

- அன்புடன் செபரா

(பதிவு செய்யப்பட்டது. எந்த விதப் பிரதி எடுக்கவும், முன் அனுமதி பெறப் பரிந்துரை செய்யப்படுகிறது)

அண்ணாமலையானின் அருள் வேண்டித் துதி!!

சுவாமி பெயர் - அண்ணாமலையார்
தேவியார் – உண்ணா முலையம்மை
தலம்: திருவண்ணாமலை
பாடியவர்கள் – சமயக் குரவர், நால்வர், சித்தர்கள், யோகியர்கள்

காப்புச் செய்யுள்

அண்ணாமலையாரே! ஆண்டவரே உனை நாளும்
எண்ணாத பேர்களுக்கும் இனியது செயும் சிறப்பைப்
பண்ணாலே பாட அருள்! (உன்) பதம் பணிந்தோருரை செய்ய
உண்ணாமுலையம்மை உடன் உதவ உள்ளுவையே!!

தன்னை பக்தியுடன் நித்தமும் நினைக்காத மனிதர்களுக்கும் அருள் புரியும் வள்ளல் அண்ணாமலையின் சிறப்பைத் தமிழினிலே பாட விழைந்து, அவனடி பணிந்து உரை செய்ய, எனதன்னை உண்ணாமுலை அம்மையும் உடன் உதவ (தனது கணவன் புகழைச் சொல்பவருக்கு மனமுவந்து அவன் மனைவியும் உதவுவாள் என எதிர்பார்ப்பதில் தவறில்லையே) இறைவன் எனக்கு நல்லாசி புரிய மனதார நினைக்க வேண்டுகிறேன்.

1. அடியவர்களுக்குத் தானாக உதவும் தன்மை உடையவன் இறைவன்

உள்ளத்தால் உள்ளுவதும் உயர்ந்த நன்நிலையென்றாக
கள்ளமில்லா மனத்துடன் நின் கழலினைப் பணிபவர்க்கே
வள்ளல் நீயருளுவை என்றே நின் நாமம் வந்தித்தேன்!
பள்ளத்துள் பாயும் நீரனெவே, பரம நீயருளுவையே!!

உள்ளம் கலந்து ஒருநிலைப்பட்டு, மனதில் எந்த ஒரு வேண்டுதலும் இல்லாது (இது வேண்டும், அது வேண்டும் என்று எண்ணித் துதிப்பதுவும், பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவதால் சிறப்புடையதாகாது) இறைவனை நினைப்பதே உயர்ந்த நிலை என்பர் பெரியோர். ஆனால் இறைவன் கருணாமூர்த்தி என்பதால், நான் வேண்டாத பொழுதும், எனக்கென்ன வேண்டுமோ அதனைத் தானாகத் தருவான் என்பதால், அவன் புகழைப் பாடுகிறேன். நீரின் இயல்பு, பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதானே (உள்ளுதல் – மனமார நினைத்தல்).

2. அரியும், அயனும் அடி முடி காணாது, இறைவன் அழல் வடிவாக நின்றது.

அயனொடு அரியும், அடிமுடி கண்டிலர் என்றாங்கே
வியந்திட நின்றான் விரிசடைக் கடவுள் அன்னாள்!
நயந்தொரு பொய்யினை நான்முகன் சொலவும் துணையாய்
இயைந்த தாழையும் இங்கென் இறைவன் ஒறுத்தனனே!!

அயனும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று அறிய நாரதர் உரைத்தபடி, இறைவனின் அடியினை மாலவனும், முடியினை நான்முகனும் காண முயற்சிக்க, அழல் வடிவாக மேலும் மேலும் உயர்ந்து நின்ற இறைவனின் முடி காணாத பொழுதும், பொய்யுரை புகன்ற நான்முகனுக்குத் துணையாக, இறைவனின் முடியிலிருந்து கீழே விழுந்த தாழம்பூ பொய்ச்சாட்சி சொன்ன காரணத்தினால், இனி தாழை மடலுக்கு, சிவனின் முடி சூடும் தகுதி இல்லையென இறைவன் தண்டனை அளித்தது (ஒறுத்தல் – தண்டித்தல்; நெருப்பின் தன்மை எந்த நிலையிலும் மேல் நோக்கி எரிவதே.).

 

3. எனைக் காக்கும் இறைவன் எனது உள்ளத்தினுள் உறைபவன்

பிறைமதி சூடிய பெம்மான்; பேரருளின் எனையாளும்
இறைவன் இங்கு காக்குமென்பார் ஈசன் திருநாமம் ஒன்றே
மறையவர் ஓதிட அண்ணா மலையென மகிழ்ந்து நாளும்
உறைகுவன் எந்தன் உள்ளத்தினுள்ளே உவந்தே!!

வளர்கின்ற, மூன்றாம் பிறையினைத் தலையில் சூடியவன். மிக்க அருள் மிகுந்தவனாக, எனை ஆள்பவன். அவன் பெயரைச் சொன்னாலே எல்லா நலனும், தீமைகளுக்கு எதிரான பாதுகாப்பும் கிடைக்குமென்ற வேதியர்கள் அந்த அவனது சிறப்பு மிக்க நாமம் அண்ணாமலை எனச் சொல்ல, அதுவே கட்டளையாக நானும் நினைத்து எனது மனதினில் ஏற்றதனால், எந்தன் உள்ளத்தினுள்ளே அவனும் மகிழ்ந்திருக்க, இங்கு வாராதிடர்!! (உள்ளம் உவந்து தன்னை ஏற்றவர்கள் உள்ளத்தினுள்ளே இறைவன் மகிழ்ந்து உறைவான். அவர்களுக்குத் துன்பம் வராது.)

4. ஞானத்தை நல்கும் இறைவனவன் திருநாமம் ஓதுவது சிறப்பு

எல்லாமறிவான் இறைவன் எனையிங்கு எனக்குணர்த்த
வல்லான் அவன் புகழை வணங்கியே நாளும் சொன்ன
சொல்லால் மகிழ்ந்தான்; சுகமெலாம் தந்தானவன் இன்று
கல்லால மரத்தடி நின்ற காட்சியதே களிப்பு!!

முக்காலமும் அறிந்தவன் இறைவன். கல்லால மரத்தினடியில் அமர்ந்த ஞான மூர்த்தியான அந்த இறைவன், நான் யார் என எனக்கு ஞானத்தை உணர்த்திடும் காரணத்தால், அவன் புகழைப் பாடி மகிழ்வது அவனுக்கு மகிழ்ச்சியளிக்கும். அதனால் நமக்கு வேண்டிய, இன்பம் தரும் எல்லா வளமும் தானாகத் தருவான். அவனது திருக்கோலம் காண்பதே மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

5. பஞ்ச பூதங்களின் வடிவான இறைவன் எனது விருப்பம் அறிய விழைதல்.

வளியொளி வானொடு நித்தம் வளர்நில நீருமாகிக்
களிறதன் தோல் உடுத்தானவன் கழலடி பணிந்தேத்த,
ஒளிரும் சூலம் ஏற்ற உமையாள் பங்கினன் உவந்து
விளிக்குமெனை அன்பா நின் வேண்டுதல் என்னவென!!

காற்றும், ஒளியாகிய நெருப்பும், ஆகாயமும், நாளும் வளருகின்ற நிலமும், நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நீர்ப் பரப்பும் (இப்பூமியானது, உள்ளுரை வெப்பத்தால், நாளுக்கு நாள் விரிவடைந்து, ஒரு நாள் வெடித்துச் சிதறும் என்பதும், முன்பு சொன்ன அதே காரணத்தாலும், சூரியனின் வெப்பத்தாலும், பனி உருகி, நீர்ப்பரப்பு அதிகமாகி உலகம் அழியும் என்பதும் மற்றொரு அறிவியற் கூற்று. இதனால், வளர் நிலம், நீர் என்னல்) ஆக, பஞ்ச பூதங்களும் அவனேயாக, அறியாமையாகிய யானையின் தோலை உரித்து, இடையில் உடுத்தியவனை நாளும் பணிந்து பாட, ஒளி பொருந்திய சூலத்தை ஏந்திய அன்னையைத் தனது இடப்பாகத்தில் ஏந்தி, ஆணொடு பெண்ணும் அரனவன் உருவமென மாதொரு பாகனாக நின்ற இறைவன் என்னை நோக்கி, அன்பனே உனக்கென்ன வேண்டுமெனக் கேட்டான்.

6. அண்ணாமலையானை நித்தம் நினைக்கக், குறையேதுமுண்டோ

முப்புரமெரித்தான் முக்கண்ணன் புகழை நாளும்
செப்பிட முடிவதுண்டோ; சிறப்பினிங்கு நமக்கருளும்
அப்பனை எனையாளும் அண்ணாமலையான் நாமம்
எப்பொழுதும் நினைக்கக் குறையேது என் மனமே!!

மூன்று புரங்களையும் எரித்தவன்; மூன்று கண்களை உடையவன்; அவன் புகழைச் சொல்வதென்பது அவ்வளவு எளிதல்ல. அவனுடைய சிறப்பே, கேட்காவிட்டாலும், தானாக வந்து அருளாட்சி செய்பவன். அவன் நமது தந்தை; தந்தைக்குச் சிறப்பு மகனான நம்மை அவயத்து முந்தியிருக்கச் செய்வதல்லவோ. எனவே எல்லாச் சிறப்புக்களும் தருவான் அவன் நம்மை ஆள்பவன். அவன் நமக்கருள்வான் என்று நம்பிய பிறகு, அவனை நினைத்து எப்பொழுதும் பாடும் நமக்குக் குறைகள் இருக்க முடியுமா? (முடியாது) மனமே உனக்குப் புரியாத ஒன்றா இது?

7. திருவண்ணாமலையினை நினைத்தாலே முக்தி என்பார்

பிறப்பது சிறப்பும் தருமே, பேசுமோர் ஆரூர்தன்னில்,
இறக்கவும் ஏற்றதென்பார் இறையருள் காசிதன்னில்;
சிறக்கவும் கண்டார் இறையவன் சிற்சபை தில்லைதனிலே
மறக்காது நினைக்கவும் மகிமை என் மனமுவந்த அண்ணாமலையே!!

திருவாரூரில் பிறப்பது முக்தி தரும்; காசியினில் இறப்பது முக்தி தரும்; சிதம்பரத்தில் இறைவனை ஆடும் கோலத்தில், காண்பது முக்தி தரும்; இவையனைத்திற்கும், அங்கே நாம் நேரில் போனால்தான் அங்கு (பிறப்போ அல்லது இறப்போ) அந்த நிகழ்ச்சி நடந்தால்தான், அந்தப் பலனை அடைய முடியும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. இங்கு இந்த இடத்தில்தான் பிறக்க வேண்டும் அல்லது இறக்க வேண்டுமென நாம் எப்படி உறுதி செய்ய முடியும் எனவே இதெல்லாம் ஆசைகளே. ஓரிடத்திற்குச் செல்வது கூட, உடலுறுதி, பணம் நேரம் இதுவெல்லாம் வேண்டுவதொன்று. ஆனால், நினைப்பது நம்மால் முடியும். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. திருவண்ணாமலையினை இருந்த இடத்திலிருந்தே, மனதாலே நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பதால், உலகின் எந்த மூலையிலிருந்தாலும், திருவண்ணாமலையினை நினைப்பது புண்ணியம் தரும். மறக்காமலிருக்க முடியும்; அதனாலே எனது மனதிற்கு உகந்தது.

8. பஞ்ச பூதங்களில், இறைவன் அழல் வடிவாக நின்றது திருவண்ணாமலை

வானொடு வளியுமாகி வளந்தரும் நிலமும் நீருமாய்
ஆனதொரு சிறப்பினிங்கு அழலெனவும் நின்ற ஈசன்
தானே என் பிழை பொறுத்தான்; தமியனிவன் அழைத்திலேனென்
ஈனம் மறந்திங்கென் பிறவிக்கு ஏற்றது அருளினானே!!

ஆகாயம், காற்று, நல்ல வளங்களெல்லாம் தரும் நிலம், அதற்குதவும் நீர், நெருப்பு என இவ்வாறு எல்லாச் சிறப்பும் உடைய பஞ்ச பூதங்களில், அழல் (நெருப்பு) வடிவாக நின்ற இறைவனாகிய அண்ணாமலையானை, நித்தமும் அண்ணாமலையானே எனை ஆட்கொள்ளும் என்று அழைக்காத பொழுதும், அதை ஒரு குறையாக எண்ணாது, என்னை அவனாக முன்வந்து எனது பிழைகளெல்லாம் பொறுத்து, ஆட்கொள்கிறான். எனது குறைகளை மறந்து புண்ணியம் எனைச் சேர, எனக்கு ஏற்றது அருள்கிறான். (இதனாலன்றோ புண்ணியம் தரும், இத்தொகுப்பை எழுதும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்தது.)

9. அருள் தரும் அண்ணாமலையானைப் பாடச் செந்தமிழறிவு தருவான்

அருள் புரிந்தெமை ஆளும் அண்ணாமலையானை அனுதினமும்
பொருள் பொதிந்த வாழ்வருளும் புண்ணியனை; பொன்னார் மேனியனை
மருள் நீக்கி எனையாட்கொண்ட மாமணியை; மனதினில் துதித்தே
வருநாளும் பாட நல்ல வளமார் செந்தமிழறிவை வழங்கவே!!

எனக்கருளும் இறைவன் அண்ணாமலையானின் திருநாமத்தை தினமும் பாடும் என் வாழ்விற்கு சிறப்புத் தருவான். புண்ணியங்கள் அனைத்தும் ஒரு வடிவமாகி என் முன்னே வந்த செம்பொன்னைப் போன்ற மேனியினை உடைய இறைவனை, எனது மாயை மற்றும் மனமயக்கம் தெளிவித்து என்னை ஆட்கொண்ட விலை மதிக்க முடியாத மாணிக்கம் போன்றவனை, மனதினில் எண்ணி, அவனருள் பெறப் பாட, நல்ல செந்தமிழறிவினை எனக்கு அருள வேண்டுமென, நித்தமும் வேண்டுகிறேன். (அருள்வான் என்பதில், எனக்கு எந்தவித ஐயமும் இல்லை)

10. இறைவன் உமையவளை இடப்பாகத்து ஏற்றது, திருவண்ணாமலையில்

மாதொரு பாகமேற்றானை; மதயானை தோல் (இடை) உடுத்தானை
வேத முழுப்பொருளாய் விளங்கும் மெய்ஞான வேதியனை;
காதலினால் கசிந்து கண்ணீர் மல்கி, மனம் கலந்திங்கே பாடுவார்
கோதிலா நிறை குணத்தார் குறையகற்றி வாழக் கும்பிடவே!!

ஆணும் பெண்ணும் சமம் என்ற அரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்த, இறைவியினைத் தனது இடப்பாகத்தில் ஏற்றவன். சக்தி இல்லையேல் சிவனுமில்லை. மனைவி என்பவள் கணவனின் ஒரு பகுதி; அவளுக்குரிய மதிப்பினைத் தரவேண்டுமென்ற உண்மையினை உணர்த்தியவன். அறியாமையாகிய யானையினை வென்று, அதன் தோலை அரை ஆடையாக உடுத்தவன் வேதத்தின் உண்மையான பொருளை முழுவதுமாக உணர்ந்த மறையவன். அவன் மேல் மிக்க அன்புடையராகி, மனங்கலந்து, அவன் நாமம் சொல்பவர் எந்தவிதக் குறைகளும் இல்லாதவர்; எல்லா நல்ல குணங்களும் நிறைந்து உள்ளவர். அவரைப் பணிந்து கும்பிட்டால், நமது குறையும் அகலும் (அடியார் பெருமை சொல்லவும் அரிதே).

11. இறைவனின் கண்ணை இறைவி மூடியதால் உலகே இருண்டது

உலகு இருண்டது; முக்கண்ணை உமையவள் கை மறைக்க,
அலகிலா விளையாட்டுடையான் அண்ணாமலை வெகுள,
விலகித் தனித்திருந்து, அவனருள் வேண்டியே தவமிருந்தாள்!
நிலவுலகில் நின்ற இடம், மேலோர் நிறைந்திருக்கும் காஞ்சியாமே!!

இறைவன் அருட்பார்வை படாது, உலகிற்கு நலம் கிடைக்காது என்று உணர்த்த, எல்லையில்லாத் திருவிளையாட்டு நடத்தும் இறைவனின் முக்கண்ணை இறைவி கைகொண்டு மூட, உலகம் இருண்டது. (தன் கணவனின் சிறப்பைப் பலறறியச் செய்ய, அன்னையே முன் வந்து தவறிழைத்து, தண்டனையையும் ஏற்றனளோ எனும்படி) தன் விளையாட்டில் இதுவும் ஒன்றாக, இறைவன் இறைவியின் மேல் சினங்கொண்டு அனையினைத் தனித்துத் தவமிருக்கப் பணிக்க, அன்னையும் அதனை ஏற்று, மேலோர்கள், தவமுனிவர்கள் வாழும் காஞ்சீபுரம் அடைந்து, தவமிருந்து, இறைவனைச் சேர்ந்தார்கள் (திருவண்ணாமலையில் தவமிருந்துதான், இறைவனின் இடமேற்றாள் என்பாரும் உண்டு).

12. அண்ணாமலையானைப் பாடுவது, பொன்னையும், மாணிக்கத்தையும் விடச் சிறப்பு.

அருள் புரிந்தெமை ஆளும் அண்ணாமலை நாமம் சொல்ல
பொருள் பொதிந்த வாழ்வதனைப் புவிமிசை எமக்கருள்வான்!!
பொன்னும் மணியும் சிறப்பாமோ போற்றியவன் அருள் வேண்ட
மன்னு புகழ் நிலைக்க வரமருள்வான் மாதேவன் அண்ணாமலையே!!

சிறப்பான வாழ்வைத் தரும் இறைவனின் நாமம் சொன்னால், எனது வாழ்க்கை எல்லாச் சிறப்பும் உடையதாக இருக்கும். அதனைச் சொல்வதை விடுத்து, (அவனிடம்) பொன்னும் மாணிக்கமும் வேண்டுவது சிறப்புத் தருமோ (தராது) அவன் புகழைப் பாடும் எனக்கு, நிலைத்த புகழைத் தருவான், தேவர்களிலே மிக உயர்ந்தவனாகிய அண்ணாமலை (இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என வேண்டுவது உண்மையான பக்தியாகாது. அவன் எல்லாம் அறிந்தவன் என்பதால், நாம் கேட்காமலேயே நமக்கு என்ன நலம் தருமோ, எது வேண்டுமோ அதனை அவனாகவே தருவான்.).

13. எடுத்த பிறவி சிறப்புற ஈசன் இணையடி தொழுதல் வழி என்பர் பெரியோர்

விழலுக்கிறைத்த நீராய் நித்தம் வீணாகிப் போமோ வாழ்வுமென
உழலும் என் மனதறிய ஒரு வழியீதென்று உணர்ந்தேன் இன்று
அழல் வடிவாகி நின்ற அண்ணாமலையானை, அருளாளனிரு
கழல் பற்றியென் நெஞ்சம் கலந்து பூசனைகள் செயவென்றே!!

பிறப்பு ஒரு துன்பம் தரும் அனுபவம் என்பார் பெரியோர்; ஏனெனில், பிறப்பெடுத்த அனைவரும் தவறு செய்யாது, பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாது தப்புவது மிகக் கடினமான ஒரு செயலாகிறது. இதற்கு என்ன செய்வது என அறியாது என் மனம் ஏங்குகையில், பிறப்பில் சிறப்பான, ஆறறிவுடைய மனிதனாகப் பிறப்பெடுக்கும் வாய்ப்புக் கிடைத்த காரணத்தால், பெரியோர் உரைத்தபடி அழல் வடிவாக நின்ற எனையாளும் ஈசன் அண்ணாமலையின் நாமம் சொல்வதே சிறப்பு, அவனடிகளைப் பற்றி, மனமுருகி அவனைப் பூசனைகள் செய்வதே மேலும் சிறப்பென்று இன்று அறிந்தேன்.

14. மலை வலம் வருவது மிக நல்ல பலனைத் தரும்

அண்ணாமலையானை அழலுருவ வண்ணனைக்
கண்ணாரக் காணக் கடைத்தேறும் வாழ்வெனவே;
எண்ணுவார் உவந்து இம்மலை வலம் வருவார்!
திண்ணமாய் உள்ளுவந்த திருவருளும் பெற்றுய்வரே!!

தீப்பிழம்பு என்பதாலே, செந்நிறமுடைய மேனியனை, திருவண்ணாமலை ஈசனைக் கண்ணாரக் காண்பது நல்ல வாழ்வை அளிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனினும், இத்தகைய நல்ல வாழ்வினை வேண்டுபவர், பல்வேறு காரணங்களால், ஆலயத்தினுள் செல்ல முடியாமற் போகும் நிலையிருந்தால், மனமுவந்து, ஈசனையே நினைந்து, (இம்மலையில் சித்தபுருடர்கள், தவயோகியர், முனிவர்கள் நம் ஊனக்கண்ணில் படாதவாறு இன்னமும் உலவி வரும் காரணத்தால்) வெற்றுக்காலுடன், மலை வலம் வர, அவர் மனதில் நினைத்த நற்செயல்கள் யாவும் நடந்தேறி, அதன் நற்பயன்களை அனுபவிப்பார்கள்.

Girivalam at Annamalai - Image courtesy: Arunachaleswarar.com கருத்தாக்கம்: செபரா

அன்புடன்
செபரா

தொடரும்...

பாகம் 2

GIVE YOUR FEEDBACK FOR THIS LITERARY WORK IN THE FORM BELOW
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


editor@mazhalaigal.com