ஜோதிடம்
ஒரு நாள் அவர் ஜோதிடப்புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிவந்தார். அந்தப் புத்தகத்தில் ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற பல பூக்களுக்குரிய ஜாதகப் பலங்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. அப்போது எனக்கு 10 வயது, என் அண்ணனுக்கு 12 வயது. நானும் என் அண்ணனும் அப்புத்தகத்தைப் படித்துவிட்டு எங்கள் கைச்செலவுக்கான பொருளை ஈட்ட ஜோதிடத் தொழிலில் இறங்குவதென்று முடிவு செய்தோம். அதன்படி இருவரும் நெற்றியிலும் மேனியெங்கும் திருநீரைக் குழைத்து இட்டுக்கொண்டு அப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிற்கும் இடத்தில் தெருவோரத்தில் ஒரு துண்டை விரித்து அதில் இருவரும் அமர்ந்தோம். முன்னால் வேறொரு துண்டை விரித்து அதில் ஜோதிடப் புத்தகத்தையும் ஒரு கடவுளின் உருவப் படத்தையும் வைத்து வணங்கி, அதன்பின் எங்கள் ஜோதிடத் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கினோம்.
இரு சிறுவர்கள் ஜோதிடத் தொழிலில் மிக முனைப்பாக இறங்கியுள்ளதைக் கண்டு எங்களிடம் ஜோதிடம் கேட்க அங்கிருந்த பலர் முன்வந்து நாங்கள் கேட்ட காசைக் கொடுத்துவிட்டு எங்களிடம் ஜோதிடம் கேட்கலாயினர். அருகில் அமர்ந்திருந்த கிளி ஜோசியன் எங்களது போட்டியால் அவன் தொழில் போணியாகாததால் சற்று நேரத்தில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு தன் இடத்தைக் காலி செய்துவிட்டான். சற்றேறக்குறைய 10க்கும் மேற்பட்டவர்கள் ஜோதிடம் கேட்டதனால் ஒரு கணிசமான தொகை எங்களிடம் சேர்ந்திருந்தது. எங்களைச் சுற்றி ஒரு மிகப்பெரிய கூட்டமே கூடியிருந்தது.
அந்த சமயத்தில் சிவபூஜையில் கரடி நுழைந்தாற்போல் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரத்திலேயே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என் தந்தை, நாங்கள் ஜோதிடம் பார்க்கச் சென்ற செய்தியைக் கேள்விப்பட்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு அவ்வழியே வந்தவர் எங்கள் இருவரையும் பார்த்து பார்வையாலேயே மிரட்டிவிட்டு நிற்காமலேயே சென்றுவிட்டார். தந்தையைக் கண்டதும் அவரிடம் வாங்கும் பூசை முதலில் நினைவுக்கு வரவே, இருவரும் கலவரத்தில் அனைத்தையும் உடனே சுருட்டிக்கொண்டி வீடு திரும்பினோம். எங்களை அதிசயிக்க வைக்கும் வகையில் அவர் எங்கள்மேல் சற்றும் கோபப்படவில்லை மாறாக நாங்கள் இருவரும் மேனியெங்கும் திருநீரணிந்து அமர்ந்திருந்த அழகை மிகவும் ரசித்து, நாங்கள் செய்த தவறைப் பொறுத்துக்கொண்டார்.
தொடரும்...
அத்தியாயம் 3