-
இறைவனைக் காண்போம் - 16
- நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (16) ஆலா
ஆலா என்று ஒரு பறவை. இதை ஆங்கிலத்தில் டெர்ன் (Tern) என்பார்கள். இந்த இனப் பறவையில் உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள் ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும் ஆர்டிக் ஆலாவிலிருந்து நம் நாட்டிலேயே வாழும் இருபத்து மூன்று வித ஆலாக்களோடு, கிட்டத் தட்ட நாற்பத்தைந்து ரக ஆலாக்கள் அடக்கம்.
ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும். நீண்டு, அகலக் குறைவான, வளைந்த இறக்கைகளைக் கொண்டது ஆலா. அதன் வால் சிரகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும். இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும். இப்பறவையின் கால்கள் குட்டையானவை. தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? இப்படிச் செய்யவில்லை என்றால் மீனின் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மீன் உள்ளே போகாது.
வேடர்கள் துப்பாக்கியால் சுட்டால் துப்பாக்கித் தோட்டாக்களினால் அடி படுகிறதோ இல்லையோ ஐந்தாறு ஆலாக்கள் அடிபட்டு செத்து விட்டது என எண்ணும்படி சிறிது தூரம் கீழே விழுவது போல போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பறந்து போய்விடும். இவ்வாறு செய்வது பயத்தினாலா அல்லது ‘செத்து விழும்’ என நம்பி ஆலாக்களைப் பொறுக்குவதற்காக துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு விறையும் வேடனை ஏமாற்றவா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை நம் ஊர்களில் ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம். இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.
உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா
ஆலாக்களின் இறக்கைகள் நீளமாகவும் பின்புறமாக வளைந்தும் இருப்பதால் அவை தரையில் உட்கார்ந்திருக்கும் போது வலது இறக்கையின் நுனி உடலின் இடது பக்கமும், இடது பக்க இறக்கையின் நுனி உடலின் வலது பக்கமும் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.
இயற்கையின் எழிலை ரசியுங்கள். இறைவனைக் காண்பீர்கள்.
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















