தாயென்று கும்பிடடி பாப்பா
- ஞானத் தங்கமே!
ஜோதிடர் காயத்ரி
இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி!
மனிதனின் வாழ்நாளில் பெரும்பாலான பகுதி தேடலிலேயே கழிந்து விடுகிறது. அப்படி என்னதான் தேடுகிறான்? மகிழ்ச்சியையும், அமைதியையும் தேடுகிறான். வாழ்க்கை கண்ணாடி போன்றது. நாம் என்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறோமோ வாழ்க்கையும் நமக்கு அதைத்தான் திருப்பித்தரும். காலச் சுவட்டில் தன் பெயரைப் பொறித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். தன் மேல் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியது. ஆனால் நம்மில் பலர் தாழ்வு மனப்பான்மை என்னும் சேற்றில் சிக்கித் தவிக்கிறோம். நம்மால் இந்த வேலையைச் செய்ய முடியுமா என்ற சந்தேகமே நம் திறமையைப் பாதியாகக் குறைத்து விடுகிறது. அன்றாட வாழ்க்கையும் நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஆனால் நாம் அதனையெல்லாம் பார்ப்பதில்லை. இல்லாத ஒன்றைப்பற்றியும், சிறு சிறு குறைகள் பற்றியும் அங்கலாய்ப்பதிலேயே நேரம் வீணாகிப் போகிறது.உதாரணத்திற்கு பிடிக்காத உணவை உண்ணுதல், நினைத்தபடி தேர்வு செய்து வைத்திருந்த ஆடைகளை அணிய முடியாமல் போதல், இன்னும் எவ்வளவோ. இவை யெல்லாவற்றையும் நினைத்துப் புலம்புவதால், நம் ஆக்கப் பூர்வமான சக்தி வீணாகிவிடுகிறது. குறைகளைப் புறம் தள்ளி விட்டு, நிறைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். நம்மால் முடியும் என்ற எண்ணமே நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும். இதுவே மிகப்பெரிய உந்துதல் சக்தியாகி நம்மை வெற்றியை நோக்கிச் செலுத்தும். இன்பம்-துன்பம், ஏற்றம்-இறக்கம், நன்மை தீமை இரண்டும் கலந்ததே வாழ்க்கை. இயற்கையும் இதனைத்தான் நமக்கு உணர்த்துகிறது. நமக்குப் பயன்படாத விஷச் செடிகள் மற்றும் தாவரங்கள் பல இருக்கிறது. ஆனால் அவற்றிலிருந்துதான் மனித குலத்தை காக்கும் பல மருந்துகள் தயாராகின்றன.
மகிழ்ச்சியாக இருக்க இன்னொமொரு பாடத்தை நாம் இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது நமக்கு நிர்ணயம் செய்யப்பட்டதை நிறைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும். காலையில் பூத்து மாலையில் வாடும் மலர்களைப் பாருங்கள். மாலை வருகிறதே என்று அது வருந்துவதில்லை. மாறாகத் தனக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திற்குள், தேனைத் தயார் செய்து அதனை வண்டுகளுக்குத் தருவதோடு நமக்கும் நறுமணத்தைத் தருகிறது. அடுத்தது சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து நடந்து கொள்ளுதல் மற்றும் இருப்பதை வைத்து நிறைவு அடைதல். இந்த இரண்டு பாடத்தையும் நம் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். யாரேனும் விரட்டி விட்டால் ஆட்டம் அப்படியே திண்ணைக்கு, கண்ணா மூச்சியாய் மாறி விடும். அவர்களுக்கு எந்த விளையாட்டு என்பதை விட அதன் மூலம் பெறும் மகிழ்ச்சியே போதுமானதாக இருக்கிறது. அவர்களின் விளையாட்டுப் பொருள்களைப் பாருங்கள். தீர்ந்து போன தீப்பெட்டி, பளபள வென மின்னும் சாக்லேட் உறைகள், மற்றும் கலர்க் காகிதங்கள். அவர்கள் இல்லாதவறைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு பளபள காகிதமே விளையாட்டுக்கேற்றவாறு பணமாகவோ, உணவாகவோ, டிக்கெட்டாகவோ மாறி விடும்!
இருப்பவற்றை வைத்தே நிறைவாக விளையாடி விடுவார்கள். இந்த பால பாடத்தைக் கற்றுக் கொண்டு விட்டால் போதும். ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சிதான். எனவே மகிழ்ச்சி என்பது நம்முள் தான் இருக்கிறது. அதற்கான திறவு கோலும் நம்மிடம்தான் இருக்கிறது. ஆனால் நாம் தான் அதனை வெளியில் எங்கோ தேடிக்கொண்டிருகிறோம்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















