சிந்துக்குத் தந்தை
கைலாசபதி
பாரதியார் சிலை முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் (வலப்புறம்) திறந்து வைககிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் (இடதுபுறம்), முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (நடுவில்)
தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், கந்தரலங்காரம், திருவருட்பா முதலிய பனுவல்கள் பெரும்பாலான தமிழ் மக்களால் பொருளறிந்தும் பொருளறியாமலும் சடங்கு முறையிற் பாடப்பெறுவன. பாரதி அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு காலத்திற்கேற்ற வகையில் பொருள் மாற்றஞ் செய்து உருவ ஒருமைப்பாடு கண்டான்; தேசபக்தியைத் தெய்வ பக்தியாக உருமாற்றஞ் செய்த புலவன் பழைய இசைத் தமிழிலக்கிய வடிவங்களைப் புதிய பொருளைப் பாடப் பயன்படுத்தினான். ஒருதாரணம் போதுமானது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் விடியற்காலத்தே இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் பனுவலைப் பாடினர்; பாரதியோ பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடினான். அன்னை பராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்டு பாடிய பாரதி சாக்த வழிபாட்டின் மூலம் தேசபக்தியைத் தெய்வ பக்தியாக மாற்றும் இரஸவாதத்தைச் செய்தான். இதனை இருமகாகவிகள் என்ற நூலில் விளக்கியுள்ளேன். இப்பொருள் குறித்துப் பேராசிரியர் துரஜதிபிரசாத் முகர்ஜி கூறுவன உன்னிக்கத் தக்கவை:
"இலௌகிக உலகில் அன்றைய சக்தியானது தேசிய உணர்ச்சியாக இருந்தது. இத்தேசிய உணர்ச்சியை ஒரு சமயமாக ஏற்றுக்கொள்ள மக்கள் ஆயத்தமாக இருந்தனரென்றால், அது அன்றிலிருந்த சமய வாழ்வின் தரக்குறைவையே காட்டுகிறது. தாம் இழந்த ஆன்மீகப் பொருளுக்கு ஈடு செய்யுமுகமாகத் தேசிய உணர்ச்சியைத் தழுவினர் மக்கள். இழந்த தெய்வீக வாழ்க்கைக்குப் பதிலாகத் தேசபக்தியை அதற்கீடாக்கிய எமது தேசியத்தின் இந்த அம்சத்தை நாம் அலட்சியஞ் செய்யலாகாது."
பழைய சமய இலக்கியங்களை-சிறப்பாகப் பக்திப் பாடல்களைப் பாரதி எவ்வாறு அணுகினான் என்பதனையும் அதனடிப்படையையும் இது தருக்கரீதியாக உணர்த்துகிறது. இவை யாவற்றிற்கும் முதல் தேவையாகப் பாரதியின் இளம்பிராயச் சூழலை நாம் சிறிது ஆராயவேண்டும். ஐந்தில் வளைந்ததுதான் ஐம்பதிலும் வளையுமல்லவா? பாரதி பிறந்த எட்டையபுரம் சிறிய சுதேச சமஸ்தானம். சென்னை முதலிய பட்டினங்களைப் போலன்றி 'நாகரிகம்' ஊடுருவாத பிரதேசம். பாண்டி நாட்டின் பழம் பெருமையின் மிச்சசொச்சங்களாக இப்பகுதிகளில் தமிழிலக்கிய மரபு குற்றுயிராகவேனும் ஊசலாடிக் கொண்டிருந்தது. 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் மெல்ல மெல்ல அரும்பிவந்த பழகுதமிழ், இலக்கியங்கள் எட்டையபுரம் பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு உயிர்த்துடிப்புடன் விளங்கின. திருநெல்வேலி அன்றும் இன்றும் தமிழ் மணம் கமழும் பிரதேசமாகவே திகழ்கிறது. மாவட்ட ரீதியில் அதன் பெருமை தமிழோடு கலந்ததாயுள்ளது. எட்டையபுரம் பாரதிக்குப் பிடிக்கவில்லையாயினும், பாலோடும் உணவோடும் பைந்தமிழை அவர் கற்றது அங்கேதான். பாரதிக்குமுன் புலவர் மரபு அங்கு இருந்தது. எட்டையபுரம் அரண்மனைப் புலவராக விளங்கியவர் கடிகைமுத்துப்புலவர்; அவரியற்றிய நூல்களுள் காமரமஞ்சரி ஒன்று. மற்றொரு அவைப்புலவர் முத்து வீரப்பக் கவிராயர்; எட்டையபுரம் கடிகை முத்துசாமிப் புலவரின் மாணவர். சேவற்குளம் கந்தசாமிப் புலவர் முத்துவீரப்பக் கவிராயரின் புதல்வர்; கீர்த்தனங்களும், சுரகிருதிகளும் பாடியவர். எட்டையபுரம் கடிகை நமச்சிவாயப் புலவர் கழுகுமலை முருகன்மீது பாடிய வல்லீபரதம் இசைத்தமிழ்ச் செல்வமாகும். இத்தகைய பகைப்புலத்திலேயே பாரதி பிறந்து, தன்னை யறியாமலே வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இந்நூல்களையெல்லாம் பாடிப் பதம் பார்த்திருந்தான். வையாபுரிப்பிள்ளை கூறுவதுபோல, "இக்கவிதைகளெல்லாம் பழைய நெறிகளையே பின்பற்றிவை. காதல், மடல் முதலிய சிருங்காரப் பாடல்களே பெரும்பாலும் சமஸ்தானத்தில் வேண்டியவையாய் இருந்தன." பாரதி இவற்றிற் சிற்சில நல்லம்சங்களைக் கிரகித்துக் கொண்டான். ஆயினும் சமஸ்தானக் கவிஞரைவிட, தனியார்களாக இருந்த கோபால கிருஷ்ணபாரதியார், அண்ணாமலைரெட்டியார், இராமலிங்கர் முதலியோரையே பாரதி கூடியளவு உட்கொண்டான். கோபாலகிருஷ்ண பாரதியாரைக் குறிக்குமிடத்து உ.வே.சாமிநாதையர் இவ்வாறு கூறுகிறார்:
"தமிழிசைப் பாரம்பரியத்தின் முதல்வர்களின் ஒருவரும், சுப்பிரமணிய பாரதியாருக்குப் பல வழிகளில் ஆதர்ஷ புருஷராக இருந்தவருமான கோபால கிருஷ்ண பாரதியார் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியிருந்தார்." சுப்பிரமணிய பாரதியாருக்குச் சின்ன வயதிலேயே நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் உணர்ச்சியூட்டுவனவாக இருந்தன. காசியிலிருந்த சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இதனைச் சித்தரிக்கும். திருவாதிரை உற்சவக் கொண்டாட்டத்தின்போது, ஒருமுறை ஓதுவார் வரத் தாமதமாகிவிட்டது. பாரதியின் அத்தையின் யோசனைப்படி பாரதியாரைப் பாடுமாறு பணித்தார் கிருஷ்ணசிவன். "முறைப்படி திருவெம்பாவையைப் பாரதியார் பாட, தீபாராதனை முடிந்தது. பின்பு பாரதியாரும், அவர் உறவினரான மூதாட்டி ஒருவரும் சேர்ந்து.
"பார்க்க பார்க்கத் திகட்டுமோ -
உந்தன் பாத தரிசனம்"
என்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனையை உருக்கமாகப் பாடினார். கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் உள்ளங் கரைந்து நெக்குருகிப் பரவசம் அடைந்தார்கள்" (தமிழ்ச் சுடர் மணிகள், பக்.275)
இவ்விடத்திலே இன்னொன்றும் நினைவுகூரத்தக்கது. இடைக்கால நாயன்மார் ஆழ்வாராதியோர் நூல்களையும் பாரதி இதே அளவு பரவசத்துடன் பாடுபவன். பொதுமக்கள் பேச்சு வழக்குகளையும், பழமொழிகளையும், நூதனமான சொல்லுருவங்களையும் நாயன்மாரும் ஆழ்வாரும் தமது பாடல்களில் அமைத்துக் கொண்டனர். அது காரணம் பற்றி இலக்கணவாசிரியர்கள் இவற்றைப் புறக்கணித்து வந்தனர். மேல்தட்டு இலக்கிய ஆசிரியரும் ஆதாவது செந்நெறிப் புலமையாளரும் இவற்றைக் கையாள்வதைத் தவிர்த்தனர். பண்பொற்றுமையைப் பாரதி நன்குணர்ந்திருத்தல் வேண்டும். பாரதி புதையல் (இரண்டாம் பாகம்) என்ற தொகுப்பு நூலில் நான்கு பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று திருப்புகழ் நடையிலும், ஒன்று தேவார நடையிலும் இருக்கின்றன. பாடல்களுக்குத் தலைப்புகள் கிடைக்காமையால் "பாரதி திருப்புகழ்" என்றும், "பாரதி தேவாரம்" என்றும் தொகுப்பாசிரியர் அவற்றிற்குப் பெயர் சூட்டியுள்ளார்.
சிறுவயதில் அழியா நினைவுகளாய்ப் பதிந்த இப்பாடல்களும் பிற சாகித்தியங்களும் பிற்காலத்தில் பாரதியார் நட்பு பூண்டிருந்த துறவிகள், யோகிகள், சாமியார் முதலியோரால் மேலும் உறுதியாக்கப்பட்டன; பழைய சமயப்பாடல்களை வெறும் சொற்கோவைகளாக அன்றி மறைபொருளும் தொனிக்கும் ஆன்ம வௌிப்பாடாக உணர்ந்தார் கவிஞர். பாரதியார் எழுதிய கட்டுரையொன்று இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கது. கடற்கரையாண்டி என்பது கட்டுரையில் தலைப்பு. முக்கியமான பகுதி வருமாறு:
"அப்போது, அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின்வரும் பாட்டை ஆச்சரியமான நாட ராகத்தில் பாடினார்.
"சேல்பட்டழிந்தத செந்தூர் வயற்பொழில், தேங்கடம்பின
மால்பட்டழிந்தத பூங்கொடி யார்மனம மாமயிலோன
வேல்பட்டழிந்தத வேலையும் சூரனும் வெற்வுமவன
கால்பட்டழிந்த திங கென்றலை மேலயன கையெழுத்தே!"
கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும்போது, எனக்குப் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய்விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும் முகமும் ஒளிகொண்டு ஆவேசம் ஏறிப்போய்விட்டது. 'வேல் பட்டழிந்தது, வேலை (கடல்)' என்று சொல்லும்போது சுட்டுவிரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவது போல் என் கண்ணுக்குப் புலப்பட்டது."
வெறுமனே மரபு வழிவந்த சமய நோக்கிற் படிப்போருக்கு மேலேயுள்ள பகுதி அனுபூதி நெறிக்கு எடுத்துக் காட்டாகத் தோன்றும். ஆனால் அவ்வாறு கொள்வது பாரதிக்குப் பொருந்தாது. ஏனெனில் அவன் பழைய அனுபூதிமான்களின் பாஷையில் பாடிய பொருள் புதியது. எனவே தான். பி.ஸரீ. கூறுகிறார். "இராமலிங்க அடிகள் பழைய இலக்கிய யுகத்தைப் பூர்த்தி செய்தவரே: பாரதியாரோ புதுயுகக்கவி." (பாரதி நான் கண்டதும் கேட்டதும், பக்.45)>
(Article from the Book on Bharathiar by Sri Kailasapatthy)
ஸ்ரீனிவாசன் (சீனு தாத்தா)
சீனு தாத்தாவின் இணையதளம்:




Your Feedback








