இறைவனைக் காண்போம் - 3
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்
வண்ணாத்திக் குருவி
ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி. வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்? வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடயதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ? அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ? வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும். மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும். பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும். முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள். ராதை வேறு யாரும் இல்லை. சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான். இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காதல்லவா? எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும். இறு ஆண்களுக்கிடையே சண்டை நடக்கும். வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும். வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை. நீங்களாகக் கூட இருக்கலாம். ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள். அது உங்களையும் தாக்கும். நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில் தான் இதைச் சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும். வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள். அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.
வண்ணாத்திக் குருவியை 1965ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ. பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம். அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர். நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம். மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா, அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன். அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!
இன்னமும் பார்ப்போம்.
தொடரும்...
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












