குடியரசுப் பூக்கள்
தமிழ்த்தேனீ







ஆய்ந்தெடுத்து அள்ளி வைக்கையிலும்
அடுத்தடுத்துப் பயணத்திலே அலங்கார ஊர்தியிலும்
பதவிசாய் பயணம் செய்யும் போதினிலும்
அங்காடிதனில் இறக்கி அடியில் ஒரு துணியிட்டு
அழகாய் அடுக்கிவைத்து,ஆணியிலே தொங்கவிட்டு
பன்னீர் தெளிக்கையிலும்
அரசாளும் மன்னனவன் தோள்களிலே
வெற்றிதனை அறிவிக்கும் மாலையாய் தவழ்ந்த போதும்
ஆசையாய் அவனெடுத்து தன்னரசி கழுத்தினிலே
சூடி அவ்வழகு ரசித்த போதும்
அழகாய் தலைசூட அள்ளி எடுத்த மாதர்களும்
தள்ளாத வயதினிலும் தன்மையாய் தன் தலைசூடி
செல்லமாய் எடுத்துச் என்ன அழகு என்ன அழகு
என்றெல்லாம் புகழ்ந்தபோதும்
உலகில் உண்டோ பூக்களுக்கு இணை
ஆளுயர மாலைகளாய் கட்டும்போதினிலும்
தாளுயர்ந்த மாயனவன் மேனியினைத் தழுவத்தானே
என்றெல்லாம் புலவர்கள் தமிழ்ப் பாக்கள் வடித்துவைத்த
போதினிலும், செந்தமிழில் புகழ் மணக்க வார்த்தைகளை
அடுக்கிவைத்த போதினிலும்
அடுத்தடுத்து நான் பரப்பும் அத்துணை மணம் முகர்ந்து
ஆண்டவனை அருச்சிக்கத் தகுதியாக எனைத்தவிர
யாருண்டு என்று தலை நிமிர்ந்து நானிருக்க
ஒரு போதும் நான் நினைக்கவில்லை
என் கதி இப்படி ஆகுமென்று
வெகு நேரமாய் உள்ளுக்குள்ளே அடைபட்டு
மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறேன்
பூப்போல் மெல்லிய என்று வர்ணிக்கும்
மிருதுவான உடலும் மனமும்
எப்படி மனம் வந்தது என்னை
இப்படி அடைத்து வைக்க
மகிழ்ச்சியா? நான் வேண்டும்
துன்பமா? நான் வேண்டும், பிறப்பா? நான் வேண்டும்
இறப்பா? நான் வேண்டும்,
என்னைப் பற்றிக் கவலைகொள்ள
யாருமில்லை பூவுலகில்
மாண்பு மிகு மனிதர்களின் கழுத்தில் நான் விழுந்தால்
மரியாதை அவர்களுக்கு ...எனக்கு....?
அடுத்த நொடி தூக்கி வீசி அவமானப் படுத்துகிறார்
குழந்தை பிறந்தவுடன் நன்றி அறிவிப்பாய்
கடவுளுக்கு என்னைக் கட்டி மாலையாய் சார்த்துவோர்’
மணம் பரப்பும் நான் அன்று மணமிழந்து வாடியதும்
எடுத்தெறிந்து போகின்றார், அடுத்த வேலை பார்த்திடவே
இறைவன் படைப்பினிலே எத்தனை நுட்பம் நான்
சூல் கொண்டு கருவாகி, மொட்டாய் உருவாகி
முகிழ்த்து மல்ர்ந்து மணம்பரப்பும் எனக்கே
இக்கதி யென்றால், காலமெல்லாம் உதவாத
மனிதர்களே உம்கதியை எண்ணித்தான் பார்க்கின்றேன்
முடியரசு முடிந்து புதியதாய் வந்துதித்த
குடியரசுதினமாம் இன்று மனிதருக்கு சுதந்திரம்
விடுதலையைக் கொண்டாடும் மகிழ்ச்சியிலே
மூவர்ணதேசக் கொடிகொண்டு எனை அதில் கட்டி போட்டு
கொடிக்கம்ப உச்சியிலே காற்றிலே கொடியாட
கொடிக்குள்ளே நானாட புழுங்கியே திணருகின்றேன்
மாந்தர்களே, கவனிக்க யாருமில்லை
மந்திரி வருவாராம் முரசு முழங்குமாம்
முப்படைகள் அணிவகுப்பாம், அலங்கார வண்டிகளில்
அத்துணை கலைகளுமாம், ஆனந்தமாய் நடனம்
அவர் கண்டு களிப்பாராம், எனைப்போன்ற குழந்தைகள்
வெய்யிலிலே ஆடுமாம், எனைப்போல வாடுமாம்,
அதிர்வேட்டுக்கள் அலறுமாம் அப்போதுதான்
அவர் கைபட்டுக் கயிறு இழுபட்டு தேசக் கொடியது
காற்றிலே அவிழ்ந்து அப்புறம் பறக்குமாம்
அப்போதும் அந்தரத்தில் அல்லாடுகின்றேன்
எனக்கு விடுதலையாம் ஆதாரமில்லா வாழ்க்கை
அது வரையில் புழுக்கம் தனை நான் தாங்க வேண்டுமாம்
இப்போதே திணறுது மூச்சு எல்லோர்க்கும்
விடுதலை பற்றிய பேச்சு
அன்புடன்
தமிழ்த்தேனீ
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













