பாடங்கள்
தமிழ்த் தேனீ
குரு என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவர்கள் நமக்கு வழி காட்டியவர்கள், அல்லது சரியான நேரத்தில் நம்மை ஆட்கொண்டு மனித வடிவிலே வந்து நம்மைச் சரியாக வழி நடத்தி ஆபத்திலிருந்தோ, நோயிலிருந்தோ நம்மைக் காப்பாற்றும் வழிகாட்டிகள், இவர்கள்தான்; ஆனால் கற்றுக் கொள்ள, உண்மையிலேயே கற்றுக் கொள்ள விழைபவனுக்கு உலகத்தில் அத்தனை பேருமே குருதான்.
நம்மை விட வயதில் சிறியவர்களாயினும் பலமுறை நம்மை அறிவுறுத்தி நாம் விழித்துக் கொள்ள, அல்லது உணர அவர்கள் காரணமாயிருக்கும் பல
சிறுவர்கள் உண்டு, ஔவைக்கே சுட்ட பழமா, சுடாத பழமா என்று கேட்டுப் பாடம் சொன்ன முருகன், அப்பனுக்கே மந்திரோபதேசம் செய்த
முருக்னைப் போல. அது போல என் வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது மீண்டும் தொடர்கிறேன்.
ஒரு முறை என் பேரன் பள்ளிக் கூடத்தில் இருந்து வந்தவுடனே அம்மா எங்கே தாத்தா என்றான். நான் உடனே உண்மையாக அவள் சென்றிருக்கும் இடத்தைச் சொல்லாமல், அம்மா வைத்தியரிடம் சென்றிருக்கிறாள் என்றேன். அதற்கு அவன், "தாத்தா, அம்மா நான் வரும் வழியில் என்னுடைய வேனில் இருந்து பார்த்தேன். அம்மாவும் அப்பாவும் யாரோ ஒருவர் வீட்டில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். நீங்கதானே எனக்குப் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுத்தீர்கள். நீங்களே பொய் சொல்லலாமா?" என்றான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது (அவனிடம் சொல்ல முடியாத ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர் இருவரும். ஆமாம் ஒரு பெண் பெரியவளாகிவிட்ட நிகழ்ச்சி அது). ஆனாலும் நாம் சொல்லிக் கொடுக்கும் நல்ல பண்புகளை நாமே கடைபிடிப்பதில்லை என்னும் பெரிய உண்மையை என் பேரனிடமிருந்து கற்றேன். ஆக்வே நாம் அனுபவப்படும் அத்தனை விஷயங்களிலும் ஒரு சிறுவன் கூட ஒரு குருவாயிருக்க முடியும் என்று உணர்ந்தேன். பெரியவர்களை விடச் சிறு குழந்தைகளிடம் நாம் மிக ஜாக்கிறதையாகப் பேச வேண்டியிருக்கிறது.
ஒரு முறை நான் வழக்கமாகச் செல்லும் உண்வு விடுதிக்குச் சென்றிருந்தேன். வாசலில் என்னுடைய இருசக்கர விசை வாகனத்தை நிறுத்திவிட்டு உணவகத்துக்கு உள்ளே செல்லத் திரும்பினேன். ஒரு 12 வயதுள்ள சிறுவன் என் வாகனத்துக்கு அருகே வந்து அதைச் சுத்தமாக துடைத்தான். நான் அவனையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வாகனத்தைத் துடைத்துவிட்டு என்னிடம் வந்து, "அய்யா, எனக்கு ஏதேனும் காசு உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்" என்றான். நான் அவனைச் சீண்டிப்பார்க்க வேண்டுமென்றே, "நான் உன்னை என் வாகனத்தை துடைக்கச் சொன்னேனா? நீயாகவே துடைத்து விட்டு என்னிடம் பணம் கேட்கிறாயே?" என்றேன். அவன் அய்யா முடிந்தால் கொடுங்கள் என்றான். நான் அவனிடம், 'நான் யாருக்கும் பனம் கொடுப்பதில்லை, வேண்டுமானால் உணவு வாங்கித் தருகிறேன்" என்றேன். அவனும் சரி என்று சொல்லிவிட்டு என்னுடன் வந்து என் எதிரே உட்கார்ந்தான். நான் ருசிக்கு உண்பவன், அவனோ பசிக்கு உண்பவன். அதனால் அவனுக்கு ஆறு இட்டிலிகள், எனக்குப் பொங்கல் வடை கொண்டு வரும்படிப் பணியாளரிடம் சொன்னேன். அதே போல் அவரும் கொண்டு வந்தார்.
நான் சாப்பிடத் துவங்கினேன், ஆனால் அவன் சாப்பிடவில்லை. "ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்" என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிறுவன் கூறிய பதில் என்னை யோசிக்க வைத்தது, "அய்யா இதை நான் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாப்பிடுகிறேன். அங்கு வீட்டில் என் தங்கையும், அம்மாவும் பசியாய் இருக்கிறார்கள் என்றான். ஒரு கணம் நான் நெகிழ்ந்து போனேன். சரி, அவர்களுக்கும் நான் வாங்கித் தருகிறேன் என்று பணியாளரிடம் இன்னும் இருபது இட்டிலிகள் கட்டச் சொன்னேன், அப்போதும் அந்தச் சிறுவன் சாப்பிடவில்லை. இருபது இட்டிலிகள் கட்டி வந்தவுடன் சாப்பிடத் துவங்கினான். அந்தச் சிறு வயதில் அவனுக்கு இருந்த பாசமும், உழைத்து உண்ண வேண்டும் என்னும் அவன் கொள்கையும் எனக்குப் பாடமாக அமைந்தன. ஆகவே சிறுவன் என்று அலட்சியப் படுத்த முடியவில்லை.
பல சமையங்களில் அவர்கள் நமக்கே பாடம் சொல்லும்படியான பேறறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். முருகன் எங்கும் நிறைந்திருக்கிறான்
இறைவன் குழந்தைகளிடத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறான்.
எனக்கு இதுவும் ஒரு பாடமே.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














