தாயென்று கும்பிடடி பாப்பா
- உணவே மருந்து
தமிழ்த் தேனீ
அன்புள்ள நண்பர்களே,
உணவே மருந்து, மருந்தே உணவு, "மிகினும் குறையினும் நோய்செய்யும்."
என்று நம் ஆன்றோர்கள் மிக அழகாகத் திட்டமிட்டு அறுசுவையையும் சேர்த்து அளித்தனர். சாதாரணமாக நாம் உண்ணும் உணவில் நம்முடைய பெரியவர்கள் எல்லாவித மருந்துகளையும், அதாவது இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அளிக்கக்கூடிய அத்துணை காய் கறிகள், பழங்கள், இலைகள், அனைத்தையும் நம் உணவோடு இரண்டறக் கலந்து அவைகளையே உண்டு வந்தனர். தலை வாழை இலையில் உணவு உண்ணும்போது அதில் பறிமாறப்படும் சூடான சாதம், காய்கறிகள், கூட்டுகள் ஆகிய உணவு வகைகள் இயற்கையாகவே தங்களுடைய சூட்டினால் வாழை இலையில் இருக்கும் வாழைச் சாற்றை க்ரகித்துக் கொண்டு அதுவே நமக்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் விஷத் தன்மையை நீக்கிவிடும்.
மற்றும் நம்முடைய உணவு வகைகளில் நமக்குத் தேவையான அத்துணை சக்தியையும் அளிக்குமாறு சமைத்தனர்.
1. பொங்கலில் பாசிப்பருப்பு குளிர்ச்சியையும், நெய் கொழுப்பையும், அரிசி மாவின் ஊட்டச் சத்தையும் அளிக்கும். அவைகள் நமக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லவை. ஆனால் மிகைப்பாடாக நம் உடலில் சேரும் கொழுப்பு போன்றவைகளைக் கரைக்க அந்த உணவிலேயே இஞ்ஜி, மிளகு, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நம் புரதச் சத்துக்களை நமக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும்படி செய்தனர்.
2. அனைத்துக் காய்கறிகளையும் போட்டுச் செய்யும் கூட்டுகளில் நமக்குத்தேவையான அத்துணை புரதச் சத்துக்களும் கிடைக்கும்.
3. குழம்பு, அல்லது சாம்பார் என்று சொல்லப்படும் வகைகளில் மிளகு, சீரகம் வெந்தயம், போன்றவை கலக்கப் படுவதால் அவைகளும் நமக்கு நல்லதே செய்யும்.
4. ரசம் என்று எடுத்துக் கொண்டால் ரசம், அதில் பலவகை ரசங்கள் உள்ளன, மிளகு ரசம், வேப்பம்பூ ரசம், தேசாவர ரசம், சீரகரசம், திப்பிலி ரசம், பூண்டு ரசம் போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. அதேபோல் நம் காய் கறிகளில், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவை மருந்தாகவே உபயோகமாகின்றன.
மரம், செடி, கொடிகளிலிருந்துதான் அனைத்து மருந்துகளும் மூலிகை என்னும் பெயரில் கண்டு பிடிக்கப்பட்டன. மரம் என்னும் வார்த்தையிலிருந்து மருந்து என்னும் சொல் ஏற்பட்டிருக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்ஜீரகம், கருவேப்பிலை, போன்றவைகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வாழை மரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு பாம்புக்கடிக்கும் மருந்தாக உபயோகப்பட்டிருக்கிறது. அதேபோல சர்ப்பகந்தி என்னும் செடி பாம்ப்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதி மதுரம் என்னும் ஒரு பட்டை தொண்டைப் புண் போன்றவைகளை குணப்படுத்தும் மூலிகையாகும். மற்றும் தூதுவளை போன்ற செடியின் இலைகள் மருந்தாகின்றன. துளசிச் சாறும் தேனும் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் சளி போன்றவைகளை கொடுத்து குணப்படுத்தி இருக்கிறார்கள். வேப்பிலை ,மஞ்ஜள், இவைகளை அரைத்து உஷ்ணத்தால் ஏற்படும் தோல் வியாதிகளுக்கும் பயன் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.
கொழுந்து வேப்பிலையை அறைத்துக் கொடுத்து குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் தேவை இல்லாத பூச்சிகளைக் கொன்று ஆரோக்கியத்தை மீட்டிருக்கிறார்கள்.
அதுவும் தவிர பண்டிகைக் காலங்களில் நமக்குத் தேவையான அளவைவிட அதிகமாக நம் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள் போன்றவற்றைக் கரைக்க உபவாசங்கள், பத்திய உணவு வகைகள், தகுந்த காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணைக் குளியல் போன்றவற்றைக் கண்டு பிடித்து நம் உடல் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருந்தார்கள். காலப்போக்கில், நாம் அனைத்தையும் மறந்து விட்டு வைத்தியரிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். மறந்தும் வைத்தியரிடம் போகாமல் மரம், செடி, கொடிகளில் கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியம் காப்போம்.
நம் உடலில் எதையும் மிகவிடாமலும், குறையவிடாமலும் சமநிலையில் நம்மை வைத்திருக்க உதவும் காரணிகளை நம் முன்னோர் உணவு வகைகளிலேயே வைத்திருந்தனர்.
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."
என்று மஹாகவி பாரதியார் சொன்னதன் பொருள் நம்மிடம் இருக்கும் திறமைகளை அயல்நாட்டாரும் மதிக்கும் வண்ணம் அவைகளை நாம் முறைப்படுத்த வேண்டும் என்பதே.
ஆனால் நாம் அதைத் தவறாக அர்த்தம் கற்பித்துக் கொள்கிறோம், அயல்நாட்டார் மதித்தால்தான் நாமும் மதிக்க வேண்டுமென்று. நமக்கு எப்போதுமே நம் நாட்டவர் சொன்னால் மதிக்காத குணமும், அதையே வெளிநாட்டவர் சொன்னால் மதிக்கும் குணமும் உண்டு.
ஒரு பழமொழி உண்டு, தோட்டத்துப் பச்சிலை மூலிகையாகாது என்று நம் தோட்டத்தில் இருப்பதே தகுதிக் குறைவாய்ப் போகிறது. நம் தோட்டத்தில் இருக்கும் பச்சிலையை எதேச்சையாகப் பார்த்த வெளி நாட்டார் சொன்னால் உடனே அந்தப் பச்சிலைக்கு வேலி போடுவது நம் வழக்கம். மஞ்ஜள் நம் முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்ட கிருமி நாசினி, இங்கு அதை நாம் அதை உபயோகிக்கிறோமே தவிற, அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்வதில்லை, ஆனால் அமெரிக்கா அதற்கு உரிமை கொண்டாடினால் மட்டும் நமக்கு கோவம் வரும். அப்போதுதான் அந்த மஞ்ஜளின் மகிமையே நமக்கு தெரியும். நம் முன்னோர்கள் விக்ஞானம் என்று சொன்னால் புரியாதே அக்காலத்தில் என்றுதான் மெய்ஞானம் என்றும், மூலிகை வைத்தியம் என்று சொல்லிச் சென்றார்கள்.
என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
ஒருமுறை என் தாயாருக்கு தென்னைமரத்துத் தேள் கொட்டிவிட்டது. நட்டுவாக்களிஎன்று சொல்வார்கள், அது கொட்டினால் பிழைப்பதறிது. வயது அவருக்கு 60 க்குமேல், மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்று, ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்தும் கடைசியில் மருத்துவர் சொன்னார், "உறுதியாக எதுவும் சொல்ல முடியாது, உடல் முழுவதும் விஷம் பரவி இருக்கிறது, பிழைத்தால் அதிசயம்" என்று.
கவலையோடு உட்கார்ந்திருந்தோம் செய்வதறியாமல். வாசலில் ஒருவர் வந்து, "பசிக்கிறது ஏதாவது இருந்தால் உண்ணக் கொடுங்கள்" என்றார். நானோ கவலையில் இருந்ததால், "போய் பிறகு வாருங்கள்" என்றேன். உடனே என் தாயார் அப்போதிருந்த நிலையிலும் "அப்படிச் சொல்லாதே, உள்ளே சென்று அவருக்கு ஏதேனும் உண்ணக் கொடு" என்றார்கள். நான் வேண்டா வெறுப்பாக ஒரு இலையில் அவருக்கு என் வீட்டில் இருந்ததை அளித்தேன். அவரும் உண்டார், கை கழிவிவிட்டு என்னிடம், "இந்த அமாவுக்கு என்ன?" என்று கேட்டார். நடந்ததை சொன்னேன், அவர், "தம்பீ, ஏழை சொல் அம்பலம் ஏறாது" நான் சொல்வதைக் கேட்கிறாயா என்றார்.
நானும் சரி என்றேன். அவர், "உடனே ஓடிப்போய் படிகாரம் பெரிய கட்டியாய் வாங்கி வா" என்றார், வாங்கி வந்தேன். பத்து பெரிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார், அதையும் கொண்டு வந்தேன். என் தாயாரின் கையில் தேள் கொட்டிய இடத்தில் படிகாரத்தை வைத்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கச் சொன்னார். அரைமணி நேரத்தில் என் தாயாரின் உடலில் நீலம் குறையத் துடங்கியது, என் தாயார் பிழைத்தார்- மருத்துவரால் கைவிடப்பட்ட என் தாயார் பிழைத்தார்.
இப்போது சொல்லுங்கள், நம் முன்னோர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்தவராக இருந்தனர், அவர்கள் செய்த ஒரே தவறு நுணுக்கத்தை அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமல் சென்றதுதான். நாமும் நம் பெரியோர்கள் சொன்ன எளிய வைத்திய முறைகளை ஆராய்ந்து பரிசோதனைக்குட்படுத்தி, பிறகு நிறைய மருந்துகள் இயற்கையாகவே பக்க விளைவில்லாத மருந்துகள் செய்யலாம் என்பதே என் கருத்து.
அன்புடன்
தமிழ்த்தேனீ
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||



















