-
கிருஷ்ணா முகுந்தா - 01
- கீதா சாம்பசிவம்
நம்ம பேரிலே ஒரு பெரிய குற்றச்சாட்டு இருக்கே. பிள்ளையார், அவரோட அப்பா சிவனைப் பற்றியும், சிவனடியார்கள் பத்தியும், முருகன், ஐயப்பன், போன்ற இறைவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவாங்க. விஷ்ணு பக்தர்களைக் கண்டுக்கவே மாட்டாங்கனு. அதை மாத்திடறதுனு முடிவு பண்ணிட்டோம். அதான் இப்போ ஆரம்பம். இது பத்தி இன்னும் எழுதலாம், விஷ்ணு புராணம், சுய புராணம் ஆயிடும். அதனாலே இத்தோட நிறுத்திக்கிறேன். தெரிஞ்சவரைக்கும் சில ஆழ்வார்கள் பத்தியும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் எடுத்த சில முடிவுகளும், பாண்டவர்கள் ஐந்து பேரும் திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் (உடனேயே இதை எழுதுனு யாரும் சொல்லக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய் வரும்) ஒவ்வொன்றாய் எழுதப் போகின்றேன். நடு, நடுவிலே ட்ராக் மாறிக்கும். சிக்னல் கிடைக்கிறதைப் பொறுத்து. மொக்கை ஆதரவாளர்களுக்கும் ஏத்தாப்போலேயே எழுத எண்ணம். ஆதரவு அளிக்கலைனாலும் கவலைப் படலை! (நறநறநறநறநற, வேறே வழி??)
"ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய
உலகெல்லாம் உய்யவேண்டும் ஓம் நமோ நாராயணாய"
மனைவியோடு காட்சி தரும் ஒரே ஆழ்வார் இவர் தான்னு நினைக்கிறேன்.
"வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்."
மேற்கண்ட பாசுரம் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பட்டது. ஒரு சிற்றரசனாக இருந்து பின் வழிப்பறிக் கொள்ளையனாக மாறி விட்ட ஒருவனின் கதை இது. அந்த ஸ்ரீமந்நாராயணனையே வழிப்பறிக்காக விரட்டி விரட்டித் துரத்தி அவனைப் பாடாய்ப் படுத்தி அத்தனையும் தன் பக்தனுக்காகப் பொறுத்துக் கொண்டான் அந்த மாயக் கண்ணன். ஒவ்வொரு வருஷமும் இந்தச் சம்பவம், "வேடுபறி" என்ற பெயரில் திருநாங்கூர் திவ்ய தேசங்களில் முக்கியமான இரு நகரங்களில் நடந்து வருகின்றது. தொலைக்காட்சியில் அதைப் பார்த்தப்போவே இருந்து இந்தக் கோயில்களுக்குப் போகணும்னு ஒரு ஆசை. அது செப்டெம்பரில் தான் முடிந்தது. ஆஹா, இறைவன் குதிரையில் ஏறித் திருமணக் கோலத்துடனே தன் துணைவியுடனும், பரிவாரங்களுடனும் வரும் கோலத்தின் அழகைச் சொல்வதா? நல்லதொரு வேட்டை கிடைச்சுருக்கு. இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு பார்த்துடணும்னு திருமங்கை மன்னன் தயார் ஆகும் அழகைச் சொல்லுவதா?
திருமங்கை மன்னன் குதிரையிலே துரத்தத் துரத்த, இறைவனின் பயந்து ஓடும் அழகு! குதிரை அப்படியே தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துக் கொண்டு வந்துவிடும்போல இருந்தது. அத்தனை வேகம்! நம்மாலே நேரிலே சென்று பார்க்க முடியாத குறையே இல்லாமல் தொலைக்காட்சியில் இதை எல்லாம் பார்க்க முடிகின்றது, கூட்டத்தில் சென்று நசுங்காமலும் பார்க்கலாம் இல்லையா?? என்றாலும் நேரில் செல்வது தனி ஆனந்தம் தான். ஆனால் பார்க்க முடியுமா சந்தேகமே!
சோழவளநாடு. அங்கே ஒரு சிற்றூர் திருக்குறையலூர் என்ற பெயரில். ஊரில் தான் குறை என வருதே தவிர, முற்றிலும் குறையற்ற அந்த ஊரில் ஆலிநாடர் என்ற ஆண் மகன் ஒருவர் சோழநாட்டின் படையில் இருந்தார். அவரின் மனைவி பெயர் வல்லித் திரு ஆகும். இருவருக்கும் பிள்ளைக்கலி தீர்க்கத் தோன்றினான் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளை வளர்ந்து பெரிய மனிதன் ஆகி அந்த ஈசனையே ஆட்டி வைக்கப் போகின்றான் என அறியாத பெற்றோர் அவனுக்கு நீலன் எனப் பெயரிட்டனர். மகன் வளர்ந்தா. ஒரு குறையுமின்றி அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்தான், முக்கியமாய்ப் போர்க்கலை. மொழியறிவும், நூலறிவும் மிகுந்திருந்த அந்தப் பிள்ளைக்கு இயல்பாகவே கவி பாடும் திறனும் சேர்ந்து கொண்டது. சோழநாட்டு மன்னன் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவனைச் சும்மா விடலாமா என எண்ணிக் கொண்டு அவனைத் தன் படைத்தலைவனாகவும் ஆக்கிக் கொண்டான்.
மன்னன் சேவையிலும் குறையேதும் வைக்கவில்லை, குறையலூர்ப் பிள்ளை. மிகத் திறத்துடனேயும், வீரத்துடனேயும் இருந்து வந்தான். பகைவரை எளிதில் வென்ற அவனுக்கு மன்னன் "பரகாலன்" என்ற பட்டப் பெயரையும் அளித்துச் சிறப்பித்ததோடு அல்லாமல், அவன் பிறந்த அந்த நிலப் பகுதிக்குத்திருவாலிநாடு என்ற பெயரோடு அந்த நீலனையே சிற்றரசனாக்கி மகிழ்ந்தான். சிற்றரசன் ஆன நீலனும் மன்னன் சேவையில் மனமகிழ்ந்திருந்த நேரம். எல்லாமும் நன்றாக எத்தனை நாட்கள் இருக்கும்?? மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா??
மேலும் நீலன் "நாற்கவிப்பெருமாள்" என்பவரை வாதத்திலும் வென்று அவனுடைய நாற்கவி என்ற பட்டத்தையும் தனக்குரியதாக்கிக் கொண்டு விட்டானே?? இனி என்ன பாக்கி?? திருமணம் தான் பாக்கி. நீலனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு நிகரான பெண்ணரசி எங்கே பிறந்துள்ளாளோ?? சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா?? தெய்வீக மங்கை ஆன சுமங்கலை என்பவள் ரிஷி ஒருவரைக் கேலி பேசியதால் கிடைத்த சாபத்தால் பூலோகப் பெண்ணாக வாழ வந்தாள். அவள் தாயின் கருவிலே தோன்றாமல் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு அல்லித் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இருந்தாள். அவளை மருத்துவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார். அல்லி மலரில் தோன்றிய அல்லியை விட மென்மையான மங்கைக்குக் குமுத வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார் மருத்துவர். குமுதவல்லியை ஒருநாள் பார்த்தான் திருவெள்ளக் குளம் வந்த நீலன். குமுதவல்லி தேவலோகப் பெண்ணாய் இருந்த போது வைகுந்தவாசனின் வைகுந்தத்தில் அவனருகில் சாமரம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தமையால் இப்போதும் அவளுக்குத் திருமாலின் மேல் அளவு கடந்த பற்று இயல்பாகவே இருந்து வந்தது.
குமுதவல்லியைக் கண்டதும் அவள் மீது கரைகாணாக் காதல் கொண்ட திருமங்கை மன்னனோ மணந்தால் குமுதவல்லி, இல்லையே திருமணம் வேண்டாம் எனச் சொல்ல, குமுதவல்லியின் வளர்ப்புத் தந்தையிடம் பெண் கேட்டுச் சென்றனர். குமுதவல்லியோ, தான் தீவிர வைணவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், பன்னிரு திருமண் தரித்து, வைணவ இலச்சினையும் பெற்று, வந்தால் திருமணம் செய்து கொள்வதாய் நிபந்தனை விதிக்க, நீலனும் அதற்குக் கட்டுப்பட்டு திருநரையூர் நம்பியிடம் வைணவ இலச்சினைகள் பெற்று, பன்னிரு திருமண்ணும் தரித்து வைணவக் கோலத்தில் வர, குமுதவல்லியோ, தான் மேற்கொண்டிருக்கும் நோன்பு முடிய ஓராண்டு ஆகும் எனவும், அதுவரை தினமும் ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும்படியும் நீலனிடம் சொல்ல நீலன் குமுதவல்லியின் மீதுள்ள மிதமிஞ்சிய ஆசையில் அதற்கும் கட்டுப் படுகின்றான். விருந்துகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் நீலனின் அரண்மனையில் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து.
குமுதவல்லியின் ஆசை திருமங்கை மன்னனின் கண்களை மறைக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணம் தீர்ந்து கஜானா காலியாகின்றது. மன்னன் ஆனாலும் விருந்தை நிறுத்தவில்லை. ஓராண்டு முடிவதற்குள்ளேயே அனைத்தும் காலி! ஆஹா, குமுதவல்லி என்ன சொல்லுவாளோ, தெரியலையே?? கப்பமும் கட்டவில்லை, மன்னனோ அழைக்கின்றான், என்ன காரணம்னு? இப்போ கப்பத்தைக் கட்டறதா? இல்லை, ஆயிரம் பேருக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்ணறதா?? பணத்துக்கு எங்கே போகிறது? மன்னன் யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவு! கொள்ளை அடிப்பது! இன்னும் சொல்லப் போனால் வழிப்பறிக் கொள்ளை அடிப்பது. வேறே வழியே இல்லை!
கீதா சாம்பசிவம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















