தாயென்று கும்பிடடி பாப்பா
- பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பாட்டி
அத்தியாயம் 16
ஒரு முறை சிவ கணங்களில் ஒருவர் மகாவிஷ்ணுவின் சங்கை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். செய்வதறியாது திகைத்த விஷ்ணு, சிவனிடம் சென்று முறையிடச் சென்றார். அப்போது தன் சங்கின் ஒலி அவருக்குக் கேட்டது. சங்கொலி கேட்ட திசை நோக்கிச் சென்றார் அவர். சிவ கணங்களில் ஒருவர் அந்தச் சங்கை ஊதிக் கொண்டு இருப்பதைக் கவனித்தார். உடனே சிவனிடம் சென்று முறையிட, அவரும் விநாயகரைத் துதித்து வேண்டச் சொல்ல, விஷ்ணுவும் அவ்வாறே விநாயகரைத் துதிக்கின்றார். விநாயகர் அந்தச் சங்கை சிவகணத்திடம் இருந்து வாங்கித் தான் ஊதி விட்டு, விஷ்ணுவிடம் கொடுக்கின்றார். இந்தச் சங்கு ஊதும் கோலத்தில் ஆன விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கின்றது. இந்த விநாயகருக்கு வேண்டிக் கொண்டால், சிறு குழந்தைகளுக்கு வரும், "பாலாரிஷ்டம்" என்னும் நோய் தீரும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. இந்த விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலின் பிராகாரத்தில் அர்த்தஜாம சுந்தரர் சந்நிதிக்கு அருகே காணப்படுகின்றது.
காக்கும் கடவுள் ஆயிற்றே விஷ்ணு?? அவருக்குக் கூடவா இப்படி விநாயகரைத் துதிக்க வேண்டி இருந்தது என்று தோன்றுகிறது அல்லவா? விஷ்ணுவுக்கு மட்டுமல்ல. விநாயகரின் தந்தை ஆன சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனே விநாயகரைத் துதிக்காமல் சென்றதால் கஷ்டப் பட்டான். ஏற்கெனவே பார்த்திருப்போம் என்றாலும், திரும்பப் பார்ப்போமா?? அருணகிரிநாதர் தன் திருப்புகழில் முதலில் பாடிய விநாயகர் வாழ்த்தில் கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கெல்லாம்???
"முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" என்று சொல்கின்றார் அருணகிரியார். முப்புரத்தையும் எரித்து, திரிபுர சம்ஹாரம் செய்ய சிவன் தேரில் ஏறிவிட்டாராம். அதுவும் எப்படி???? தேவர்கள் அனைவரும் ஆயுதங்களாகவும், வாகனங்களாகவும் மாறி நிற்க, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாக அந்த வில்லில் கட்டி, அந்த ஸ்ரீமந்நாராயணனையே அம்பாக மாற்றிக் கொண்டு, சூரிய, சந்திரத் தேரிலே புறப்பட்டாராம் ஈச்வரன். ஆனால் கிளம்பிய தேர் நின்று விட்டதாம். ஏன்? அச்சு முறிந்து விட்டது. அதனால் தேர் நின்றுவிட்டது. அப்போது தான் புரிந்ததாம் பரமேஸ்வரனுக்கு. விநாயகனை வழிபடாமல் தான் கிளம்பியதும், தேவர்கள் அனைவருமே விநாயக வழிபாடு செய்யாததும் புரிந்ததாம். உடனேயே விநாயகரை வழிபட, தேர் அச்சு மீண்டும் பொருத்தப் பட்டு சிவனார் தேரிலேறித் தன்னுடைய அட்டஹாசம் என்னும் சிரிப்பால் திரிபுர சம்ஹாரம் செய்தாராம். இந்தத் தேர் முறிந்த இடம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள அச்சிறுபாக்கம் என்னும் சிறு ஊர் ஆகும் என்றும் சொல்கின்றனர்.
இது தவிர, பாற்கடலைக் கடையும்போதும், தேவர்களோ, அசுரர்களோ விநாயக வழிபாடு இல்லாமலேயே கடைய ஆரம்பித்தனர். வாசுகி பாம்பு தான் கயிறு, மேரு மலை, மத்து. மேரு மலையில் வாசுகியைக் கட்டி இரு பக்கமும் இழுக்கின்றனர். பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவேண்டியதற்குப் பதிலாக வாசுகி கக்கும் விஷம் தான் வருகின்றது. அந்தச் சூடு தாங்காமல் தேவாசுரர்கள் அலறுகின்றனர். வெண்மையாக அன்று வரை இருந்த மகாவிஷ்ணுவோ, இந்த விஷக் காற்றுப் பட்டதும் நீலமாகிவிட்டார். திடீரென ஒரு பெரும் சத்தம்!! வாசுகியால் முடியவில்லை, கயிறு தளர, மேரு மலை சரியத் தொடங்கியது. கலங்கினர் அனைவரும். அப்போது தோன்றியதாம் விநாயகரை வழிபடாமல் தொடங்கி விட்டோம் எனத் தேவேந்திரனுக்கு. உடனே விநாயகரை வழிபட எண்ணினான். ஆனால் திரு உருவம் கிடைக்கவில்லையே?? கடல் நுரையையே விநாயகராய்ப் பிரதிஷ்டை பண்ணினான். அந்தக் கடல் நுரையிலே விக்னேஸ்வரனை ஆவாஹனம் செய்து பூஜை, வழிபாடுகள் செய்ய வாசுகியும் மீண்டும் தயார் ஆனான். பொங்கிய ஆலகாலத்தையும் விஷ்ணு, பரமசிவனுக்குக் கொடுக்கச் சொல்ல, அந்த விஷத்தை ஆலகால சுந்தரர் ஏந்தி வந்து சிவனிடம் கொடுக்க சிவன் அதை ஒரே வாயாக முழுங்க, விஷம் உள்ளே போனால் அண்ட சராசரங்களுக்கும் ஆபத்து நேரிடும் என உணர்ந்த அம்மையோ, சிவன் கழுத்தைத் தன் திருக்கரங்களால் பிடிக்க, சிவன் "திருநீலகண்டன்" ஆகி ஆசிகள் புரிய, பாற்கடல் கடையப்பட்டு, அமிர்தம் கிடைத்தது. கடல் நுரையால் ஆன விநாயகர் திரு உருவம் கும்பகோணம் சுவாமி மலைக்கு அருகே திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இன்றும் திருவலஞ்சுழியில் விநாயகரைக் கடல் நுரை உருவில் காணலாம்.
விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்,. இன்னும் தொடரும்.
அன்புடன்
கீதா சாம்பசிவம்
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















