அறூபத்து மூவர் - 3
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
வளம் பொருந்திய சோழநாட்டில் திருநரையூர் என்னும் ஓர் ஊர் இருந்தது. தற்சமயம் இது "நாச்சியார் கோயில்" என அழைக்கப் படுகின்றது. இந்த ஊரிலே, வேதங்கள் ஓதி இறைவனைத் துதிக்கும் ஒலியும், இறைவன் வீதி உலா வரும் வேளையில் சிவனடியார்களின் விண்ணை எட்டும் வாழ்த்தொலிகளும், எந்நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த ஊரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. விநாயகருக்கு "பொள்ளாப் பிள்ளையார்" என்று பெயர். இந்த விநாயகரை வழி, வழியாக அந்த ஊரில் இருந்து வந்த ஒரு ஆதிசைவக் குடும்பம் வழிபாடுகளை நடத்திப் பூஜித்து வந்தது. அந்த விநாயகரின் வழிபாட்டிலே விளைந்த நற்பயனாய் அந்தத் தம்பதிகளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தை விநாயகர் திருவருளால் நல்லொழுக்கத்துடன் வளர்ந்து வந்தான். பள்ளிக்குச் சென்று பல கலைகளையும் கற்று வந்த அந்தப் பாலகனுக்குப் பெற்றோர் உரிய பருவத்தில் உபநயனமும் செய்து வைத்தனர்.
ஒரு நாள் பெற்றோர் வெளி ஊர் செல்ல நினனத்த போது விநாயக பூஜை செய்ய மாற்று ஆள் ஏற்பாடு செய்ய நினைத்துப் பையனிடம் விநாயருக்கு நாங்கள் திரும்பி வரும் வரையிலும் வழிபாடுகள் நடத்தி வரவேண்டும் என்று தங்கள் மகனிடம் அன்புக் கட்டளை இட்டு விட்டுச் செல்கின்றனர். பெற்றோர்கள் சொல் கேட்டு மனம் மகிழ்ந்த அந்தப் பிள்ளையும், பின்னர் உவகையுடன் மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, முடித்துப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றான். கோபுரத்தை வீழ்ந்து வணங்கி விட்டுப் பின்னர் உள்ளே சென்று விநாயகர் சன்னதியை அடைந்து, விநாயகருக்குப் பழைய மலர்கள், வஸ்திரங்கள் அகற்றிப் புதியதாய் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, தீப ஆராதனன செய்து, பின்னர் தான் கொண்டு வந்த நைவேத்தியத்தை விநாயகருக்குப் படைக்கின்றான்.
விநாயகர் முன்னே, திருவமுதினை வைத்து விட்டுப் பின்னர் வணங்கி எழுந்து சற்று நேரம் ஐம்புலன்களையும் அடக்கிய ஞானியைப் போல் நிஷ்டையில் ஆழ்ந்தான். பின்னர் கண் திறந்து பார்த்தான். அவன் வைத்த அமுது அப்படியே இருந்தது. பையன் திகைத்துப் போனான். தன் வழிபாட்டில் தவறு நேர்ந்து விட்டதோ என அஞ்சினான். தகப்பனார் விநாயகருக்குத் திருவமுது செய்யும்போது ஏற்கும் விநாயகர் இப்போது ஏன் மறுக்கின்றார் என்று கவலை அடைந்தான். பெரும்பிழை செய்துவிட்டோமே என வருந்தினான். அழுது, புலம்பினான். என்ன குற்றம் செய்தேன், எம் இறைவா எனக் கதறினான். ஆனால் விநாயகர் கல்லாகவே இருந்தார். பிள்ளை மனம் மிக வருந்தினான். வேதனையும், வருத்தமும் அதிகரிக்க, தன் தலையைக் கல்லில் மோதிக் கொள்ள முயன்றான். அப்போது நேர்ந்தது ஒரு அதிசயம்!
பொள்ளாப் பிள்ளையார் பாலகனைத் தன் எல்லையற்ற பெருங்கருணையைக் காட்டித் தடுத்தாட்கொள்ள நினைத்தார். பாலகனின் சிரம் கல்லில் மோதி சிதறுவதற்குள், "நம்பி" பொறு" எனக் குரல் கேட்டது. நம்பி எனத் தன்னை அழைப்பது யார் என வியந்த பாலகன் திரும்பிப் பார்த்தான். விநாயகர் பாலகன் படைத்த திரு அமுது அனைத்தையும் தன் துதிக்கையால் எடுத்து உண்பதைக் கண்டான் பாலகன். பாலகனின் முகத்தில் மகிழ்ச்சி ஒளி பரவியது. முகத்தில் புன்னகை பூத்தது. இறைவன் பால் மாறாக் காதல் ஏற்பட்டது. விநாயகனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் கூப்பிய கரத்துடன் அசைவற்று நின்றான். இப்படியே நேரம் கடக்க நம்பி பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்துவிட பள்ளிக்குத் தாமதமாய்ச் சென்றால் ஆசிரியர் அடிப்பாரே என எண்ணிப் பயந்த நம்பி, பயத்துடனேயே பள்ளி சென்றான்.
பள்ளியில்???????
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














