அறூபத்து மூவர்
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
சங்க காலத்துக்குப் பின்னர், பெளத்தமும், சமணமும் தமிழ்நாட்டில் தழைத்து ஓங்கியதால், சைவமும், வைணவமும் இருந்த இடம் தெரியாமல் போயின என்பதோடு மக்களின் வாழ்க்கை முறையும் மாறியது. காதல், இல்லறம், அறவழியில் வாழ்க்கை நடத்துதல் என்றிருந்த சங்ககால வாழ்க்கை முறைகள் மாறி, துறவறத்தை வலியுறுத்தும் சமண மதக் கோட்பாடுகளும், அவற்றின் நீதி நெறிகளைக் குறிக்கும் நூல்களும் தோன்ற ஆரம்பித்தன. "இருண்ட காலம்" என்று சொல்லப் படும் களப்பிரர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பெளத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சமண மதச் செல்வாக்கினால் மங்க ஆரம்பித்து வந்தது. பெளத்தர்களின் பாலி மொழியும், சமணர்களின் மொழியான பிராகிருதம், வடமொழி போன்றவையே பெரும் செல்வாக்குப் பெற்றுத் தமிழின் செல்வாக்கு மங்கி இருந்த நேரம். அப்போது தமிழ்நாட்டின் வடபாகத்தைப் பல்லவ மன்னர்களும், தென்பாகத்தைப் பாண்டியர்களும் பெரும் செல்வாக்குடன் ஆண்டு வந்த நேரம். அப்போது தோன்றியது தான் பக்தி இயக்கம் அல்லது பக்தி இலக்கியம் என்றும் சொல்லலாம். இயற்கையோடு இயைந்த வாழ்வு சங்ககாலத்தில் நடைமுறையில் இருந்ததைச் சமணமும், பெளத்தமும் மாற்றின என்றால், சமண புத்த மதங்கள், இந்தப் பக்தி இலக்கியகர்த்தாக்கள் ஆன அடியார்களால் புறம் தள்ளப் பட்டன. சமணமும், பெளத்தமும் அடியோடு அழிந்தே போயின என்றே சொல்லலாம்.
அடியார்களுக்கும்,அரசர்களுக்கும் முக்கியத்துவம் மிகுந்தாலும் அடியார்களை அரசர்களே பணிந்தமையால், அரசன் மிகவும் மதிக்கப் பட்டான். அடியார்கள் இறைவனைக் குறித்து இயற்றிய பாடல்கள் அனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதோடு அல்லாமல் வழிபாட்டுத் தலங்களில் சங்ககாலப் பண்களில் "மீட்டுரு"ப் பெற்றன. அனைவராலும் விரும்பிப் பாடப் பட்டதோடு அல்லாமல், ஆடலும் ஆடினர். புதிய கோயில்கள் எழும்பின. பக்தியோடு சேர்ந்த இசையும், அதனோடு சேர்ந்த ஆடல், பாடலோடு, சிற்பக்கலை, கட்டிடக் கலை, ஓவியக் கலை, சித்திரக் கலை போன்றவற்றிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் வடமொழிக் கலப்பால் பல்வேறு விதமான புராண, இதிகாசங்களின் கதைகளும், நம்பிக்கைகளும் கலந்து புதியதாய் "வைதீக மதம்" என்ற ஒன்றும் ஏற்பட்டதாயும் சிலர் கூற்று.
தாய்மொழியான தமிழின் புறக்கணிப்புப் பொதுமக்களிடையே கிளர்ச்சியைத் தோன்றுவித்து வந்த சமயம். பல்லவ மாமன்னரான மகேந்திர பல்லவரே சமண சமயத்தைச் சார்ந்தவராய் இருந்ததால் சமணர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் மக்களின் முகச் சுளிப்பு சைவ, வைணவர்களுக்குச் சற்றே ஆறுதலைக் கொடுத்து வந்தது. இவர்களில் தமிழில் பெரும்புலவர்களாய் இருந்து வந்த சிலர் சிவனின் பெருமையையும், திருமாலின் பெருமையையும் போற்றிப் புகழ்ந்து அழகிய தமிழில், இன்னிசைப் பாடல்களைப் பழைய பண்களுக்குப் புத்துயிர் கொடுத்துப் பாடி சைவத்தையும், வைணவத்தையும் தளிர்க்கச் செய்தனர். பெரும் முயற்சியால் மன்னன் மகேந்திரனும், பாண்டியன் கூன் பாண்டியனும், சமண மதத்தில் இருந்து சைவத்துக்குத் திரும்பினார்கள். அது என்ன? ஏன்? எப்படி? யாரால்? எந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்தவை என்பதை வரும் நாட்களில் பார்ப்போமா?
பண்=ராகம்
மீட்டுரு= மறுபடியும் முன்பு இருந்தது போல் கொண்டு வருதல்.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
















