-
பட்டிணத்தார்
- தாத்தா சீனு
பட்டினத்தார் பாடல்
இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுபபுராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர்.
கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக உரிய வயதில் ஞானகலாம்பை சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெணகாடருக்கு மணமுடித்தார். இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம் திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.
குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார். திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.
மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்றஞ்சிய அவர் வீட்டினுள்ளே சிறை வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ தம் அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார்.
மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர் ஓலைச்சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை இருந்தது திருவிடைமருதூர் பெருமான்தான் என்பதை உணர்ந்து மனம் வருந்தித் துறவறம் பூண்டார்.
“காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது.
இந்தத் துறவு நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின் வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப் பாடுகின்றார்.
“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”
“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”
“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”
“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”
“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”
“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”
“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”
இது மட்டுமா? இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.
“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”
காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
என்று அழுகிறார்.
நேற்றிருந்தோர் இன்று இல்லை. கண்ணுக்குக் கண்ணெதிரே உடல்களெல்லாம் கட்டையில் வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமானதென்று எண்ணி நிரந்தரமாக இருப்போமென்று எண்ணி ஆங்காரம் கொள்ளுகிறதே, நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே. அரும்பு விழியழகும், குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும்,
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.
கன்னி வனநாதா ! கன்னி வனநாதா!
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
“பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை”
என்று கூறி கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள் என்று கெஞ்சுகின்றார்.
இறைவன் அவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்வாரா என்ன? இன்னும் அவரது அருட்புலம்பலைக் கேட்கும் ஆசைப்பேறும் முதல்வன் முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.
குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ”
“முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி”
“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி”
உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி
உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி
அந்த இறைவன்
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண்
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி”
என்று தாமறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார். இந்தத் துறவியை இனி நாம் பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.
(தொடரும்)
V.Shrinivas (Seenu)
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















