-
சங்கர விஜயம் - 2
- கீதா சாம்பசிவம்
வெளியே சென்ற சீடர் உள்ளே வருகின்றார். வந்து பார்த்தால் மற்ற மாணாக்கர்களைக் காணவில்லை. வெறும் சாம்பல் தான் எஞ்சி இருக்கிறது. தப்பித்து வெளியே சென்ற இந்தச் சீடர் அவ்வளவு புத்திமானும் இல்லை. வங்காளத்தில் இருந்து வந்தவர். பரதகண்டம் அந்நாட்களில் விந்தியத்தை நடுவாக வைத்துக் கொண்டு விந்தியத்துக்கு வடக்கே உள்ள தேசம் கெளட தேசம் எனவும், விந்தியத்திற்குத் தெற்கே உள்ள தேசம் திராவிடம் எனவும் வழங்கப் பட்டு வந்தது. மக்களும் கெளடர், திராவிடம் என்றே வழங்கப் பட்டு வந்தனர். இது அந்நாட்களில் இருந்த பிராம்மணர்கள் எனப்படுவோருக்கும் பொருந்தும். கெளடர்கள் ஐந்து பிரிவாகவும், திராவிடர்கள் ஐந்து பிரிவாகவும் இருந்தனர். கெளடரில் மூலப் பெயரான கெளடர் என்னும் பெயரிலேயே உள்ள வங்காளிகள், ஸாரஸ்வதர்கள் என அழைக்கப் பட்ட காஷ்மீரிகள், பஞ்சாப், உ,பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கான்ய குப்ஜர்கள், நேபாளமும், பிஹாரிலும் உள்ள மைதிலர்கள், ஒரிசாவில் உள்ள உத்கலர்கள் ஆகியோர் கெளடர் எனும் பொதுப் பெயரால் அழைக்கப் பட்டனர்.
திராவிடர்களில் குஜராத்தில் உள்ள கூர்ஜரர்கள், மஹாராஷ்டிரத்தின் மஹாராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகாவில் உள்ள மக்கள், திராவிடர் என்ற மூலப் பெயருள்ள தமிழர்கள் ஆகியோர். இவர்களில் சேரநாட்டு மக்களும் அடங்குவார்கள். மலையாள மொழியே ஆயிரம் வருஷத்துக்குள் தான் தோன்றியது. அதற்கு முன்னால் அங்கே தமிழே பேசப் பட்டு வந்தது. சங்கரர் காலத்திலும் சேர நாட்டில் தமிழே வழங்கப் பட்டிருக்கிறது. பின்னாட்களில் திராவிடர் என்றால் தமிழர் மட்டுமே எனச் சொல்லப் படுகின்றது. ஆனால் இந்த திராவிடர் என்னும் மூலப் பெயரைக் கொண்ட தமிழராலும், கெளடர் என்னும் மூலப் பெயரைக் கொண்ட வங்காளிகளாலுமே ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள முடிந்தது. இவர்களே பெரும்பான்மையாக அரசு உத்தியோகங்களையும் பின்னாட்களில் ஆக்கிரமித்தார்கள். இதை இந்திய வரலாற்றில் காண்போம். இப்போ சங்கரர் வரலாறு மீண்டும்.
உள்ளே நுழைந்த சிஷ்யன் இயற்கை உபாதைக்காக வேண்டி வெளியே சென்றிருந்ததை அறிந்து கொண்டார் பதஞ்சலி. சீடருக்குக் குரு மிகுந்த மனக்கஷ்டத்தில் இருப்பது புரிய வந்தது. இத்தனை நாள் பாடுபட்டு இத்தனை பேருக்குப் பாடம் சொல்லியது எல்லாம் வீணாயிற்றே என மனம் நொந்து கொண்டிருந்தார் பதஞ்சலி. தப்பித்த சீடருக்கோ, “ஆஹா, ஏற்கெனவே மனம் நொந்து போயிருக்கும் குருவிடம் நாம் வெளியே சென்று வந்ததை எங்கனம் தெரிவிப்பது?” என்று தயக்கம் ஏற்பட்டது. பயத்துடனேயே குருவிடம் சென்று வணங்கி நின்றார். வெளியே சென்றுவிட்டு வந்த சீடனைக் கண்டதும் பதஞ்சலிக்கு ஒரு வகையில் நிம்மதி ஏற்பட்டது. அப்பாடா, ஒருவனாவது பிழைத்தானே? ஆயிரம் பேரை வைத்துக் கொண்டு வ்யாகரணத்தைப் பிரசாரம் செய்ய முடியலைனாலும் பரவாயில்லை. இருக்கும் இந்த ஒரு சீடன் மூலமாவது பயன் பெறலாம் என்று ஆறுதல் அடைந்தார். ஆனால்?? ஆனால்??? இவன் மந்த புத்திக்காரனாய்த் தெரிகின்றானே?? சரியாப்போச்சு, போ! பதஞ்சலி ஒரு கணம் யோசித்தார். புத்தியாலும், அதனால் விளையும் சக்தியாலும் இவன் பாடம் படிக்க வெகு நாட்கள், வருஷங்கள் கூட ஆகிவிடும். நம் சக்தியைக் காட்டி இவனுக்கு அனுக்ரஹம் பண்ணவேண்டியது தான். வேளை வந்துவிட்டது. என நினைத்தார். ம்ம்ம்ம்ம்ம்ம்..,,,., பெண்ணை வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுக்கும் தகப்பனைப் போல் இந்த க்ஷணமே என்னுடைய அனுக்ரஹத்தால் இவன் அனைத்தையும் கிரஹித்துக் கொண்டு புத்திமானாக ஆகவேண்டும் என பதஞ்சலி தீர்மானம் செய்தார்.
என்னதான் பதஞ்சலி ஒரு அவதாரமாக இருந்தாலும் மனுஷ ரூபத்தில் வந்ததால் மனுஷ உருவிலேயே மனுஷ சக்தியாலேயே தர்மத்தைக் கடைப்பிடித்து நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும் வாழவேண்டும், வாழமுடியும் என்பதை நிரூபிக்கவேண்டியது அவதாரக் கடமை என்பதை உணர்ந்ததாலேயே ஆயிரம் பேருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபோது மனுஷ குரு எவ்விதம் சீடர்களை நடத்துவாரோ அவ்விதமே நடத்திப் பாடம் சொல்லிக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது ஒரு அசாதாரண நிலைமை. ஆகையால் இப்போது மனுஷ சக்தி மட்டும் போதாது. திவ்ய சக்தியைக் காட்டியே ஆகவேண்டும். கெளடரைப் பார்த்துப் பதஞ்சலி, “எனக்குத் தெரிந்த அனைத்தும் உனக்குத் தெரியக் கடவது!” என அனுக்ரஹம் பண்ணினார். உடனேயே மந்தமான கெளடருக்கு அனைத்தும் தெரிய வந்ததோடு அல்லாமல் வ்யாகரணத்தில் பரிபூர்ண ஞானமும் ஏற்பட்டு, மஹாபாஷ்யம் மனப்பாடமாகவும் ஆகிவிட்டது. ஆனால் இப்போ வேறே ஒரு பிரச்னை முளைச்சுடுத்தே?
பதஞ்சலி ஏற்கெனவே சொன்னது உத்தரவில்லாமல் வெளியே யார் சென்றாலும் அவர்கள் பிரம்ம ராக்ஷஸாகிவிடுவார்கள் என்பதே. அதன்படி இப்போ கெளடர் பிரம்ம ராக்ஷஸ் ஆகவேண்டும். சாபம் கொடுத்தது கொடுத்ததே. அதை மாற்றப் பதஞ்சலியால் கூட முடியாது. ஆனால் ஏதேனும் விமோசனம் இருக்கா? அதையும் பெரிய மனசு வச்சுப் பதஞ்சலியே சொல்ல வேண்டும். சொல்லுவாரா? சொல்லியே ஆக வேண்டும். அவரோட பாடங்களைப் பிரசாரம் செய்யப் பின்னே வேறே வழி? என்ன விமோசனம்???
கீதா சாம்பசிவம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















