சங்கர விஜயம் - 1
பிள்ளையார் பாட்டி
அது ஒரு இருண்ட காலம், களப்பிரர்களின் காலம் என்றும் சொல்லலாம், அப்போது பாரதம் எங்கும் ஒரு மன இருட்டு ஏற்பட்டு மக்கள் தங்கள் தர்மத்தை மறந்து ஓர் அறியாமையில் உழன்று கொண்டிருந்த காலம். சநாதன தர்மம் என்ற பெயரில் அழைக்கப் படும் இந்த மஹா தர்மத்திற்கு ஆபத்து உருவாகிவிட்டதோ எனக் கொஞ்சம் கொஞ்சம் இருந்த ஞானிகளும், தபஸ்விகளும் எண்ணிக் கலங்கினார்கள். அந்தக் காலங்களில் 72 விதமான மதங்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஆகவே சநாதன தர்மத்தை நிலைநாட்டவும் மக்களின் அறியாமையைப் போக்கி அஞ்ஞானத்தை நீக்கி அவர்களை நல்வழிப்படுத்தவும் ஈசனிடம் அனைவரும் பிரார்த்தித்தனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி ஈசனே அவதாரம் எடுத்துப் பூமியில் பிறக்கவும் நிச்சயித்தார்.
அதற்கு முன்னால் நடந்த சிலவற்றை இப்போது பார்த்து வைத்துக் கொண்டோமானால் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கும். சாக்ஷாத் அந்த ஈசனே அவதாரம் செய்யப் போவதென்றால் அதற்குத் தகுந்தாற்போல் குரு பரம்பரையும் சாமானியமாய் இருக்க முடியாதே. அவருக்குக் குருவாகவென்றே சிலரை முன் கூட்டியே அனுப்பி வைக்க வேண்டி இருந்தது. அப்படி வந்தவர்களில் ஒருவர் பதஞ்சலி முனிவர். இந்தப் பதஞ்சலி எப்படி வந்தார் என்பதற்கு ஒரு சிறு கதையை இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. ஆகவே கொஞ்சம் பொறுமையாகவும் படிக்க வேண்டும்.
ஒரு சமயம் மஹாவிஷ்ணு, யோக நித்திரையில் இருக்கையில் அவரின் மூச்சுக்காற்று உள்ளேயும், வெளியேயும் சென்று கொண்டிருக்கையில், திடீரென விஷ்ணுவின் கனம் தாங்க முடியவில்லை ஆதிசேஷனால். மஹாவிஷ்ணுவைப் பார்த்து, "தேவரீர் திடீரென இத்தனை கனம் காட்டுவதின் காரணம் என்னவோ?" என்று கேட்க, மஹாவிஷ்ணு பதில் சொல்லுகின்றார், "என்னுள்ளே இருதயத்தில் வாசம் செய்யும் நடராஜ மூர்த்தி என் உள் மூச்சுக்கும், வெளி மூச்சுக்கும் ஏற்ப நடனம் ஆடுகின்றார். அது தான் காரணம்." என்று சொல்லுகின்றார். இதற்கு அஜபா நடனம் என்று பெயர். ஜபம் என்றால் உரக்க மந்திரங்களைச் சொல்லி ஜபம் செய்வது. அஜபா என்றால் மனதிற்குள்ளேயே மந்திரங்களைச் சிறிதும் சலிக்காமல் தியானம் செய்வது. உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றையும், வெளியே விடும் மூச்சுக்காற்றையும் மந்திராக்ஷரங்களாய்ச் சொல்லுவது. இதற்கு அஜபா என்று பெயர். இத்தகைய நடனம் ஆடிய நடராஜ மூர்த்தியைத் தானும் கண்டு களிக்க எண்ணினார் ஆதிசேஷன். விஷ்ணுவை வேண்ட அவரும் உடனே ஆதிசேஷனுக்கு பூமியில் பிறந்து ரிஷியாகத் தவம் செய்து இதைக் காணும்படி சொல்லி அருளினார். ஆதிசேஷன் நேரே மஹாவிஷ்ணுவிடம் இருந்து இரு கைகளையும் கூப்பிய வண்ணம் ஒரு குழந்தை வடிவில் அத்திரி மஹரிஷியின் மனைவியின் கரங்களில் வந்து விழுந்ததாகவும் சொல்லுவார்கள். அத்திரி மஹரிஷியின் மனைவியின் கர்ப்பத்தின் மூலம் பிறந்ததாய்த் தெரியவில்லை. கூப்பிய கரங்களுடன் பிறந்ததால் பதஞ்சலி என்ற பெயர் என்றும் இன்னொரு பெயர் ஆத்திரேயர் என்றும் சொல்லுவார்கள்.
இந்தப் பதஞ்சலி நாளடைவில் வியாகரணத்தில் மிகவும் புலமை பெற்று, பல்வேறு மாணாக்கர்களுக்கு அதை உபதேசித்து வந்தார். ரிஷியின் பிள்ளையாக இருந்தும் பூர்வாசிரமத்து வாசம் போகவில்லை. ஆயிரம் மாணாக்கர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் சொன்னார். எந்த சிஷ்யன் எந்தக் கேள்வி கேட்டாலும் தாமதமில்லாமல் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பூர்வாசிரம உருவையும் எடுத்துக் கொண்டார். ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனாக உருமாறிப் பாடம் சொன்னதால், தனக்கும், சீடர்களுக்கும் நடுவே ஒரு திரையை விட்டுக் கொண்டார். ஏனெனில் பாம்பின் உருவத்தோடு இருக்கும் அவர் கண்களால் மாணாக்கர்கள் யாரையாவது பார்த்தால் உடனே அவர்கள் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே காரணம்.
இது சிஷ்யர்களிடம் மிக்க ஆவலைத் தூண்டி விட்டது. ஆசிரியர் திரைக்கு மறைவிலே இருப்பதும், அனைவருக்கும் ஒரே சமயம் சந்தேகங்களைப் போக்குவதும், பாடம் சொல்லுவதும், என்ன இது நம் ஆசிரியர் என்ன உருவில் இருப்பார்? ஏன் மறைவிலேயே பாடம் சொல்லுகின்றார் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. பதஞ்சலியோ மேலும் மாணாக்கர்களைத் தான் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும், அப்படிப் போகின்றவர்கள் பிரம்ம ராக்ஷஸாய்ப் போய்விடுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார்.
ஆனால் சிஷ்யர்களுக்கோ ஆவல் மீதூற, என்ன தான் நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற துடிப்பு. ஒரு நாள் பாடம் நடக்கையில் ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் வெளியே செல்ல, மற்ற மாணாக்கர்கள் திரையை விலக்க அனைவரும் சாம்பலாகிப் போனார்கள். வெளியே சென்ற மாணாக்கன், ஆசிரியருக்குத் தான் சென்றது தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற பயம் மீதூற அவன் மெதுவாய் உள்ளே வருகின்றான்.
கீதா சாம்பசிவம்
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















