தாயென்று கும்பிடடி பாப்பா
- பழமொழி விருந்து!
ஜோதிடர் காயத்ரி
நாடோடி போல் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், நதியின் கரையைக் கண்டதும் தனக்கென்று ஒரு வாழிடத்தைத் தேடிக்கொண்டான். அதற்குப்பின் தான் கற்ற செய்திகளை, பெற்ற அனுபவங்களை விட்டுச்செல்ல அடையாளமாய் அவன் உருவாக்கியதுதான் கலை, இலக்கியம் எல்லாம்! இதில் முதலிடம் பெறுவது அவன் பழகிய மொழியான பழமொழிகள்! ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள். இவை அன்றாட வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளோடு பின்னிப்பிணைந்துள்ளன.
"பால் புளித்தாலும், பழமொழி பொய்க்காது" என்பதே இதன் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. அன்றாட வாழ்வில் மக்கள் பெறும் அனுபவங்கள், படும் துன்பங்கள், கசப்பான உணர்வுகள், கண்ணீர்க் கதைகள் யாவும் பழமொழி பிறப்பதற்கு மூல காரணமாய் அமைகின்றன. அதுமட்டுமல்ல. பாமர மக்களின் வலிமை வாய்ந்த வாய்மொழியும் இதே! பட்டி தொட்டி, நாடு நகரம், மூலை முடுக்கு ஆகிய எல்லா இடங்களிலும் பரவி நிலைத்து விட்டது இந்த வாய்மொழி இலக்கியம். இவை சிந்தைக்கும், செவிக்கும், இனிமை தருவதுடன், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனும் பெற்றுள்ளன. இவற்றில் உணவோடு உறவாடும் பழமொழிகள் பல கருத்துகளை நம் முன் வைக்கின்றன.
தாய் என்பவள் இருந்தாலே உணவு என்பது நிலைக்கும். தந்தை என்பவர் தயவாலேதான் கல்வி அறிவு பெற முடியும். அதற்கான பழமொழி இதோ "அன்னையோடு அறுசுவை உணவு போம்; தந்தையோடு கல்வி போம்". மனிதனை வாழ் வைப்பதில் உணவுக்கு பெரும்பங்கிருக்கிறது என்பது தெரிய வேண்டுமா? "அகிலத்தில் தெவிட்டாதது அன்னமும், நீரும்". எதைப்பற்றியும் கவலைபடாதவர்களுக்கும் ஓர் சாடல். "அகவிலை ஏறினால் அவளுக்கென்ன? அகமுடையான் இருக்கிறான் ஆக்கிப்போட." வீடு என்றாலே செலவுகள் இருக்குமே? கூடவே மாடும் சேர்ந்து கொண்டால்?" "அசைந்து தின்னும் மாடு; அசையாமல் தின்னும் வீடு" வாய்ப்புக்கள் எப்போதும் வரா என்பதை நாசுக்காக சுட்டிக்காட்ட வேண்ட விரும்புவோர்க்கு வேண்டியது இதுதான். "அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?"
அரிசிக்கும், உறவுக்கும் முடிச்சுப்போடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. "அரிசி உண்டானால் வரிசையும் உண்டு. அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு". நல்ல பழக்கங்களைக் கெடுக்க ஒரு தீய பழக்கம் போதுமே. அந்த ஆற்றாமை இதோ, "ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப் பூச்சி போதும்" எந்த சூழலையும் சமாளிக்கக் கை கொடுக்கும் பழமொழி வேண்டுமா? "ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்" என்னதான் சாக்கு போக்கு சொன்னாலும் தப்பு தப்புதான்! "உறியிலே கட்டித்தூக்கினாலும், அழுகற் பூசணிக்காய் அழுகலே" .. பிறந்த பிறவிக்குணம் மாறாதே. அதன் பதிவு இதோ" ஐங்காயம் போட்டு அரைத்தாலும், கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்"
எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் இளைக்க வில்லை. எவ்வளவுதான் உண்டலும் உடல் பருக்கவில்லை. அதற்கு வைத்தியம் என்ன? "கொழுத்தவனுக்குக் கொள்ளும், இளைத்தவனுக்கு எள்ளும்" மழலைச் செல்வத்துக்கும், சீரகத்துக்கும் தொடர்பு ஏற்படுமா? படியுங்கள் இதை "சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல; சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறியல்ல". எங்கு போனாலும் மனிதனை ஆசைகள் விடுவதில்லை. அதன் வெளிப்பாடு. "சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கத்தில் அட்சய பாத்திரமா?" திடமான உடம்பு வேண்டுவோர் என்ன சாப்பிடலாம்? "தரைப்பசலைக் கீரை யுண்டால் தங்க பஸ்பம் சாப்பிட வேண்டாம்".
மனக்குழப்பத்தை அழகாக வெளிப்படுத்த வேண்டுமா? "மத்திட்ட தயிர்போலப் புத்தி குழம்புது' விருந்து எவ்வளவு நாள் வரை எப்படியிருக்கும்? "தலை நாள் வாழையிலை; மறு நாள் தையிலை; மூன்றாம் நாள் கையில; நாலாம் நாள் வெளியில" எந்த சூழலுக்கும் ஏற்றவாறு பழமொழிகளை அடுக்கிகொண்டே போகலாம்.
பழமொழிகள் தொடாதது ஒன்றுமில்லை எனலாம். அப்படி தொட்டதை அழகு படுத்தாமல் விட்டதுமில்லை. அதில் ஒரு சிறு துளியே இது!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















