வாழும் முறைமை - கடிதம் 18
அசலம்
ஓம்
அருள் வாக்கு
Date: 15/07/2008
கடிதம்
From
அசலம்
தர்மசங்கடம் - பாகம் 1
அருமை செல்வங்களே,அதென்ன “தர்ம சங்கடம்", அப்படி என்றால் என்ன? நாம் நினையாமல் நம்மை ஒரு இக்கட்டான நிலையில் தவிக்கவைக்கும் நிகழ்சிசிகள் அல்லவா? அதாவது ஒரு காரியம் செய்யப் பல வழிகள் இருக்கலாம். எந்த வழியில் காரியம் செய்தாலும் அது நமக்கோ அல்லது மற்றவர்க்கோ தொல்லையாக அமைந்துவிடும். ஆனாலும் அந்தக் காரியம் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இருக்கும். அப்படியிருக்க நாம் எப்படி யாருக்கும் பாதகமில்லாமல் தர்மப்படி செயல் புரியலாம்? காரியம் செய்தால் யாரையாவது பாதிக்கும். செய்யாவிட்டால் அதில் நஷ்டம் ஏற்படும். என்ன செய்ய? இதைத்தான் தர்மசங்கடம் எனச் சொல்கிறோம். ஆனால் இந்த தர்ம சங்கட நிலையிலிருந்து எப்படி வெளிவருவது? அதை எப்படிச் சமாளிப்பது? இதைத் தெரிநதுகொள்ள நம் புராணங்கள், முக்கியமாக இராமாயணம், மஹாபாரதம் போன்றவை பல தர்மசங்கடமான சந்தர்ப்பங்களைச் சுட்டிக்காட்டி, அதைத் தவிர்க்க அல்லது அதைச் சமாளிக்க வழியை அதிலுள்ள முக்கியக் கதாபாத்திரங்களுடைய செயல் மூலம் காண்பிக்கின்றன. அதிலிருந்து ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
அயோத்தியா சாக்ரவர்த்தியாகிய தசரத மஹாராஜா தன் தர்பாரில் இருக்கும்போது அங்கு விச்வாமித்திர மஹர்ஷி வருவதைக் கண்டு ஓடி அவரை பஹுமானபூர்வம் அழைத்து, இருக்கை தந்து அமரச்செய்து, அவருக்கு அதிதி மரியாதைகள் செய்து இவ்வண்ண்ம் கூறினார், “ஹே முனிச்ரேஷ்டா! தங்கள் வரவு அயோத்தியைக்கு நலம் தருவதாக அமையட்டும். தயைகூர்ந்து என்ன வேணுமானாலும் கேட்கவும். தங்கள் இச்சையை சிரமேற்கொண்டு ஏற்றுப் பூர்த்தி செய்யக் காத்திருக்கிறேன், கேளுங்கள்”.
இதை கேட்ட விச்வாமித்திரர், “ஹே ஸூர்யகுல திலகமே! உமது பணிவிடையினால் நாம் சந்தோஷம் அடைந்தோம். ஆனாலும் நாம் கேட்பதை உம்மால் தர இயலாது. கேட்ட பிறகு நீர் இக்கட்டான ஒரு நிலைக்கு ஆளாக வேண்டாம்” என கூறி நிறுத்தினார். சன்யாசிகள் கோரி, தாம் இல்லையென்றால் அது நாட்டற்கே கேடு விளைவிக்கும், அதுவும் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செயவது ஒரு அரசனின் கடமை எனக் கருதி இவ்வண்ணம் உரைத்தார்: “அஹோ முனிபுங்கவா! நீர் என்ன கேட்டாலும் தரக் காத்திருக்கிறேன், அது என் கடமை, உங்கள் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் போனால் நான் இராஜ்யம் பரிபாலிப்பது பொய்யாகும். ஆகவே தயங்காமல் கேளுங்கள். எனன கேட்டாலும், எத்துனை பொருள் அல்லது இராஜ்யம் கேட்டாலும் தருகிறேன்” என்றார். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட முனிவர் இங்ஙனம் கோரினார்: ”ஹே ராஜச்ரேஷ்டா! நான் ஒரு யாகம் நடத்துகிறேன். அதைப் பூர்த்தி செய்ய விடாது அரக்கர்கள் அதைத் தடுத்து நிறுத்துகிறார்கள். எமக்கு அவர்களை அழித்து அந்த யாகத்தைப் பூர்த்தி செய்ய உதவ உனது மூத்த புத்திரனான இராமனைக் கொடு” என்றார்.
இதைக் கேட்டதும் தசரதன் ஆடிப்போய்விட்டார். தமது உயிருக்கும் மேலாகக் கருதும் இராமனைக் கேட்க்கிறாரே. அவனோ சிறு குழந்தை. அவனால் எப்படி அரக்கர்களைத் தாக்க மடியும்? ஆனாலும் அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் வேண்டும். என்ன செய்ய? யோஜித்து இப்படிச் சொன்னார்: “ஹே குரோ!, இராமன் சிறியவன், குழந்தை, அவனால் அரக்கர்களிடம் யுத்தம் செய்து அவர்களை விரட்டுவது இயலாத காரியம். உங்கள் யாகத்தைக் காக்க நானே தகுந்த சேனைகளுடன் வந்து செர்கிறேன்”. இதைகேட்ட விச்வாமித்திரர், ”ஹே ராஜன், உனக்கு இராமனின் பலத்தைப் பற்றியும் அவன் தன்மையைப் பற்றியும் தெரியாது. ருஷியாகிய எனக்குத் தெரியும். அவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை. அவன் ஒருவனே அவர்களை அழிக்க வல்லவன். உன்னாலும் சேனைகளாலும் இயலாத காரியம். என்ன கேட்டாலும் தருகிறேன், அது எனது கட்மை என்றெல்லாம் வீராப்பாகப் பேசினாயே, இப்போது வாக்கை மாற்றுகிறாயே, இவ்வளவுதானா உனது ராஜ கம்பீரம்? இதுவா உனது ராஜ்ய பரிபாலந்த்தின் முறை? வேண்டுமானால் உனது ராஜகுருவாகிய வஸிஷ்டரிடம் கேட்டுப்பார், நான் சொல்வது சரிதானா என்று. உன்னால் கொடுத்த வாக்கைக் காப்பற்ற முடியாவிட்டால் நான் இதோ திரும்பிச் செல்கிறேன் என்று இருக்கையை விட்டு எழுந்திருந்தார்.
அப்போது வஸிஷ்டர் எழுந்திருந்து முனிவரை அமரச்செய்து, தசரதனிடம் இவ்வண்ணம் உரைத்தார்: “ஹே ராஜச்ரேஷ்டா! விச்வாமித்திரர் சொல்வது முற்றிலும் உண்மை. நீ கவலைப்படாதே. இரமன் பகு பலசாலி. அவன் இதில் வெற்றி பெறுவதோடு உனக்கும் உன் குடும்பத்திற்கும், அயோத்திக்கும் க்ஷேமம் உண்டாகும் வண்ணம் காரியங்கள் மங்களகரமாகவே நடக்கும். தயங்காதே. வேண்டுமானால் இலக்ஷுமணனையும் துணைக்கு அனுப்பு.” என்றார். இதைக் கேட்ட தசரதன் தவித்தான். இரண்டு குருக்களும் ஒரேபோல் சொல்கிறார்களே. கண்மணி இராமனைப் பிரிவது என்பது கஷ்டம்தான். ஆனால் அனுப்பவில்லையேல் விச்வாமித்திரருடைய சாபத்திற்காளாக வேண்டும். அது நன்மையைத் தராது. என்ன செய்ய? இப்படி ஒரு தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்று அங்கலாய்த்தான். தீர்க்க சிந்தனைக்குப் பிறகு, வேறு வழியில்லாமல் கலங்கிய மனதுடன் இராமனையும் இலக்ஷுமணனையும் அனுப்ப முன்வந்தார். இராமனும் இலக்ஷுமணனும் விச்வாமித்திரருடன் புறப்பட்டுச் சென்றார்கள்.
இப்படியாக ஸம்ரக்ஷணாத்திற்காகச் சென்ற இராம இலக்ஷுமணர்கள் விச்வாமித்திரரின் யாகத்தைக் காத்ததோடல்லாமல் பிற்காலத்தில் அயோத்தியைக்கும், ஸூர்ய குலத்திற்கும் பெயர் தேடித் தந்தார்கள். தாடகை வதம், இராக்ஷதர்கள் வதம், யாக ஸம்ரக்ஷணம், அஹல்யா சாப மோசனம், ஸீதாசுயம்வரம போன்ற நற்காரியங்களை விச்வாமித்திரருடைய சொற்படிச் செய்ததோடல்லாமல், விச்வாமித்திரரிடமிருந்து பலா, அதிபலா போன்ற மந்திர சக்திகளும் பல நுட்பமான யுத்த தந்திரங்களும் பெற்றார்கள். இது அவர்களுக்கு இராவண யுத்தhத்தில் பயன்பட்டது.
தசரதர் எப்படி தர்மசங்கட நிலையைச் சமாளித்தார்? தார்மிக புத்தியுடனும் தெளிந்த சித்தத்துடனும் பெரியோர்கள் சொல்லைத் தட்டாமலும் அவர்களின் வாக்கில் நம்பிக்கை வைத்தும் இந்த நல்ல முடிவை எடுத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? நம் சாமர்த்தியத்தில் வீராப்புக் கொள்ளக்கூடாது. பெரியோர்களின் வாக்கில் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்தை நல்லதுபோல் தார்மீக சிந்தனையுடனும், பொது நலத்தைக் கருதியும், ஸூக்ஷ்ம புத்தியுடனும் அலசிப் பர்த்து எடுக்கும் தீர்மானங்கள் எப்பொழுதும் பிசகாது. நல்ல விளைவையே தரும். க்ஷேமத்தையே விளைவிக்கும்” என்பதுதான். இனியும் நிறைய சந்தர்ப்பங்கள் இராமயணத்தில் உள்ளன. அடுதத இதழ்களில் பார்ப்போம்.
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
இப்படிக்கு அன்புடன்
உங்கள் அசலம
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














