பகவத்கீதா சாரம்
அசலம்
ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:
அத்தியாயம் 2 பாகம் 9
தாவான் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத:
ஸ்லோகம் 46 கேளுங்கள்
ஸாரம்:
ப்ரஹ்ம்மத்தை அறிந்துகொண்டவர்களுக்கு (ஆத்மஞானிகள்), எங்கும் பிரளயம் இருக்கும்போது, ஒரு குடிதண்ணீர்த் தொட்டி(Reservoir) எவ்வளவு உபயோகமோ அவ்வளவுதான் வேதங்கள் உபயோகமுள்ளவை யாகும்.விளக்கம்:
இது ஒரு வாக்குவாதத்திற்கு இடம் தரும் ஸ்லோகம். இதைப் பலபேர் எப்படியெல்லாமோ அர்த்தம் கொள்கிறார்கள். ஒரு தேசத்தில் பிரளயத்தால் எங்கும் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது, கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவை காணாமல் இந்தத் தண்ணீர்ப் பரப்பில் கலந்துவிடுகின்றன. அதேபோல் இந்தத் தண்ணீர் தொட்டியும் அதனுடன் கலந்துபோகிறது. அப்படியிருக்க, தண்ணீர்த் தொட்டியிலுள்ள தண்ணீருக்கு என்ன விசேஷம்? அதுவும் பரந்த தண்ணீர்த் தேக்கில் ஒரு பாகம் அவ்வளவுதான். இப்படி அர்த்தம் தந்துள்ளார் ஆதி சங்கரர். இது எதைக் குறிக்கிறது? நம் சாஸ்திரத்தில் தந்துள்ள ஆசாங்கள், (கர்மகாண்டத்தைச் சொல்லுகிறது) ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியம். அதைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த ஆசாரங்களுக்கு அடிப்படையான ப்ரஹ்மத்தை அறிந்தவருக்கு இது ஒரு தனிப்பட்ட ஆசாரமாகப் படாது. அவர் மூலத்தையே பிடித்துவிட்டதால், இந்த ஆசாரங்கள் அவருக்கு உதவாது. அதாவது, ப்ரஹமஞானிகளுக்கு இந்தக் கர்மகாண்டத்தில் சொன்ன ஆசாரங்கள் ப்ரஹம்த்தின் ஒரு கிளையே. முழுதையும் அறிந்த ஒருவன் அதன் ஒவ்வொரு அங்கங்களையும் எப்படி மதிப்பான்? ஒரு கணித மேதைக்கு, கணக்கின் முதல் பாடம் எவ்வளவு முக்கியம்? எல்லாம் தெரிந்தவருக்கு ஞானத்தின் ஒரு சிறு பங்காக விளங்கும் முதல் பாடம் எப்படி உபயோகமில்லயோ அவ்வளவுதான் ஒரு ஞானிக்கு இந்த ஆசாரங்கள் என அர்த்தம் கொள்ளவேண்டும்.இதன் ஸாரமென்ன? ”ஸாதாரண லோகவாழ்க்கையில் இயங்கும் மனிதர்களுக்கு இந்த ஆசாரங்கள் உதவும், அவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஆத்மஞானத்தில் முன்னேற முடியும். இவை அந்த முன்னேற்றத்திற்குள்ள படிகளே. ஆனால் இந்தப் படிகளைத் தாண்டி மேலே சென்றுள்ள ஞானிகளுக்கு இவை பாதகமில்லை அல்லது தேவை இல்லை” என்று அறிய வேண்டும். <ப்>
மாகர்மபல ஹேதுர்பூ: மாதே ஸங்கோSஸ்த்வ கர்மணி
ஸ்லோகம் 47 கேளுங்கள்
ஸாரம்:
கர்மா செய்வது மட்டும் தான் உன் அதிகாரம் (கடமை) அல்லாது கர்மபலதிலல்ல. கர்மபலத்தில் உனது நாட்டத்தைச் செலுத்தாதே, அல்லது கர்மா செய்யாமலிருப்பதில் நாட்டம் கொள்ளாதே.விளக்கம்:
முனனால் சொன்ன இரண்டு ஸ்லோகங்களால் கிருஷ்ணன் தன் சினேகிதனுக்கு அவன் குறிக்கோள் என்னவாயிருக்கணும் என்றும் அது வேதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் விளக்கினார். இங்கு முழுமனத்தையும், செய்யும் கர்மத்தின் நுட்பத்தில் வைத்து செய்வதுதான் முழுப்பலனை தரும் அல்லாது அதன் விளைவில் கவனம் வைத்தால் கர்மம் சரிவரச் செய்ய முடியாது, அது தோல்வியிலேயே முடியும் என வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. கர்மகாண்டத்தில் சொன்ன கர்மங்களை எதிர்த்து இங்கு உபதேசம் தருவதாகக் கருதக்கூடாது. ஒருவன் தன் நிலையில் முன்னேறித் தன் சுய உருவத்தை அல்லது தன் சுய நிலையை அறிந்துகொண்டு முன்னேற, அவன் கர்மங்களைச் சரியான நோக்கத்துடன் செய்ய வேண்டும் அல்லாது அதன் பலனை உத்தேசித்துச் செய்யக்கூடாது என்று வேதத்தில் சொன்ன கருத்தை ஊர்ஜித்ப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.வேதாந்தத்தை அறிந்துகொள்ள முயலும் ஒரு மாணவன் அதன் அர்த்தத்தை கவனக்குறைவுடன் பார்த்தால் அது விபரீத அர்த்தத்தைத் தருவதாக அமையும். இங்கு தந்துள்ள கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டால் பிறகு கர்மத்தில் விசுவாஸம் வராது. இந்த ஸ்லோகத்தில் அர்த்தத்தைத் தவறாக பார்த்தால் ஒரு கர்மம் பலனை உத்தேசித்துச் செய்யக்கூடாது என்று எடுத்துக்கொண்டால் உலகில் யாரும் கர்மம் செய்ய முன்வர மாட்டார்கள். ஏனென்றால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஒரு பலனை எதிர்பார்த்தே செய்கிறோம். அப்படியில்லயேல் தனவானகள் தனவான்களாகவே இருப்பார்கள், தனமில்லாதோர் அப்படியேதான் இருக்க நேரிடும் என்ற தப்பான கருத்து எழும். இங்கு கிருஷ்ணன், வேதத்தில் சொன்ன கருத்தைச் சிறுது விரிவாக்கித் தருகிறார். அதாவது, வேதத்தில் கர்மகாண்டத்தில் சொன்ன ஆசாரங்களைக் கர்மா எனச் சொல்கிறது. இங்கு அதை நாம் ஈடுபடும் எல்லாவிதக் கர்மங்களையும் (குடும்ப, ஸாமுதாயிக, ஸாம்பத்திக கர்மாக்கள் எல்லாமே) உட்படுத்தி அர்த்தம் தருகிறார். நாம் செய்யும் காரியங்களில் நம் முழு கவனமும் இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து அதன் ஜெயத்தில் நோக்கம் வைத்துச் செய்தால் செய்யும் கர்மா சரிவர அமையாமல் கர்மபலனும் தவறாக அமையும் என்று பார்க்கிறோம். இங்கு நாம் விரிவாக அர்த்தம் கொள்ள வேண்டும். எல்லாக் கர்மங்களிலும் விஜயிக்க வேண்டுமானால் நம் நாட்டம் கர்மம் செய்யும் முறையில் இருக்க வேண்டும். இதுதான் இதன் கருத்து. கர்மபலனில் கருத்துறைத்தால் அதன் பலன் எப்படி அமையுமோ என்ற பயம் வரலாம். ஒரு வித பயம் எழலாம். மனது தவிக்கும் தருணம் கர்மம் சரிவர அமையாது. அப்படித் தயக்கத்துடன் கர்மம் துவங்கினாலும், சிலர் அதன் பலன் எப்படி அமையும் என்ற பயத்தால் செய்யும் கர்மாவில் கவனக்குறைவு வந்து அது தோல்வியில் முடியலாம்.
கடந்த காலம் போய்விட்டது. வருங்காலம் இன்னும் எழ்வில்லை. நிகழ்காலத்தில் நாம் கவனமாக உழைத்தால் நல்ல எதிர்காலம் அமையும். கடந்தகால அனுபவங்களை மனதில் வைத்து நிகழ்காலத்தில் செயல் புரிந்தால் எதிர்காலம் நல்லபடி அமையாது. ஒரு விவசாயி நிகழ்காலத்தில் உழுது, வித்து விதைத்து, வரும் தடங்கல்களைத் தவிர்த்துக் காத்திருந்தால் அவனுக்குப் பிற்காலத்தில் அறுவடை சுபிக்ஷமாகக் கிடைக்கும் இல்லையா? இதைத் தவிர்த்து, வரும் தடங்கல்களை நினைத்து வருந்தி, நிகழ் காலத்தில் உழுது, வித்து விதைக்கவில்லையானால் எப்படி எதிர்காலத்தில் அறுவடை செய்ய முடியும்? இதுவே இதன் உட்கருத்து. நிகழ்காலத்தில் செய்யும் கர்மாவே எதிர்காலத்தில் பலனாகப் பரிணமிக்கிறது. பலன் கிடைக்கும்போது கர்மா இல்லை. அது மறைந்து விடுகிறது. கர்மாவும் கர்மபலனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை. ஆதலால் நிகழ்காலக் கர்மாவில் கவனம் வைத்தால் எதிர்காலப் பலன் நன்றாக அமையும். இதை விடுத்து, எதிர்காலத்தில் வரப்போகும் பலனை நினைத்துக் கர்மா செய்தால் வீணாக ஆசை, பயம், விசாரம் என்பன நம் கர்மத்திற்குத் தடங்கலாக அமைந்து செய்யும் கர்மா சரிவர ஆகாமல் பலனும் தவறாக விளையும். இதுதான் உண்மை. இதைத்தான் கிருஷ்ணன் “உனக்கு விதித்தது, தர்மசிந்தனையுடன் கர்மத்தில் முழு கவனம் வைத்து, உன் சாமர்த்தியத்தை முழுதும் பயன்படுத்தி கர்மாவில் இறங்கினால் அதன் விளைவு தானாக உன் கர்மத்தின் தன்மையையும் அதன் நோக்கத்தையும் பொறுத்து நல்லபடி அமையும்.” என்று உறுதி கூறுகிறார்.
“வெளியுலகத்திலுள்ள சோதனைகளை எதிர்த்து தர்மத்திற்காக முழுமனதுடன் போராடினால், ஒருவன் தன் மனதிலுள்ள வாஸனைகளை எரித்து, மனதில் சாந்தியை வரவழைத்து, உள்னோக்கினால் தன் சுய நிலை அறிய ஹேதுவாகும். இதுதான் கர்மகாண்டத்தின் தத்துவம்.” என்ற வேதாந்த உண்மையை இங்கு வலியுறுத்துகிறார். இதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து.
ஸித்யஸித்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
ஸ்லோகம் 48 கேளுங்கள்
ஸாரம்:
ஆசாபாசத்தை விடுத்து ஏகாக்ர சித்தத்துடன், ஹே தனஞ்ஜய, ஜெயம் தோல்விகளில் ஸமபாவத்துடன் கர்மமம் செய். ஸமநிலையிலுள்ள மனத்திற்குப் பெயர் யோகம் எனப்படும்.விளக்கம்:
பலனை எதிர்பார்க்காது கர்மம் செய்வது எப்படி சாத்தியம் என்ற வினாவிற்கு இங்கு பதில் தரப்படுகிறது. இங்கிருந்து கர்மயோகத்தின் உட்பொருளை நன்கு விளக்குகிறார். எப்படி ஒரு கர்மயோகி தன் மனதைக் கட்டுப்படுத்தி, சுய கௌரவத்தைத் தவிர்த்து, ஸமபாவனையுடன் செயல் புரிய வேண்டும் என்ற பரமார்த்த தத்துவத்தை இங்குக் காணலாம். சுய கௌரவம் (EGO) நம் சத்திய நிலையை மறைக்கிறது. மனதைக் குழப்பத்தில் தள்ளுகிறது. மனதை இந்தத் தாக்குதலிலிருந்து விடுபட வைக்க, ஸமபாவனை என்ற உபகரணத்தைக் கையாள வேண்டும். தவந்த்வங்களில் ஸமபாவனைதான் மனதை ஒரு நிலைக்கு நிறுத்த உதவக்கூடிய ஆயுதம். அப்படிச் செய்வதைத்தான் இங்கு கிருஷ்ணன் வாயிலாக ஸ்ரீ வியாசர் “யோகம்:” எனப் பறைசாற்றுகிறார். யோகத்தின் நுட்பம் தவந்த்வாதீத ஸமபாவனை எனப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு சீடன் மனதை ஸமபாவனையில் வைத்தால் மட்டும் போதாது, உலகில் வரும் மாற்றங்களும் சோதனைகளும் தம்மைத் தாக்காமல் இருக்க ஆசாபாசத்தைத் துறக்கவும் வேண்டும் என்று இங்கு வலியுறுத்துகிறார். அப்போதுதான் பிற்காலத்திலும் இந்த ஸமபாவனை நிலை நிற்கும் என எடுத்துரைக்கிறார் ஸ்ரீ வியாஸர். இதைப் பல எழுத்தாளர்கள் சுட்டிக்காட்ட மறந்து விடுகிறார்கள். நிர்த்வத்வ ஸமபாவனை மட்டும் வலியுறுத்தி, ஆசாபாசத்திலிருந்து விடுபடுவதை முக்கியமாகத் தருவதில்லை. இது இரண்டும் சேர்த்துதான் நித்தியமான, நிலை நிற்கக்கூடிய மனோபலம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.ஆசாபாசங்கள் என்பன் என்ன எனப் பார்ப்போம். தவறான நினைவுகள், முறைகேடான எதிர்பார்ப்புகள், கர்மபலனின் ஸ்வப்னங்கள், பலனைப் பற்றிய விசாரம், வருங்காலத்தின் கஷ்டங்கள் முதலியவைகள் தான் ஆசாபாசங்களை விளைவிக்கின்றன. இந்த விஷயங்களைப் பார்த்தால் ஏதொரு கர்மயோகியும் மனதுடைந்து போக சந்தர்ப்பம் உண்டு. ஏனென்றால் இவைகளை நம்மால் எப்படித் தவிர்க்க முடியும்? இதை நாம் உபநிஷத்தின் கருத்துக்களுடன் நோக்கினால் நமக்கு விடை கிடைக்கும். அது என்ன? சுய கௌரவம் (EGO) என்பது என்ன? இறந்துபோன நாட்களின் ஓர்மைகளும் இனி வரவிருக்கும் நாட்களின் எதிர்பார்ப்புக்களும் சேர்ந்த கலவைதான் இது. இப்படி மனதை இந்தப் பிற்கால அனுபவங்களிலும் வருங்கால எதிர்பார்ப்புக்களிலும் செலுத்தி நமக்குக் கிடைத்த நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்யாது வாழ்வை வியர்த்தமாக்குவதைத்தான் ஆசாபாச வினைகளில் மனதைச் செலுத்துதல் எனச் சொல்கிறார். இப்படி நம் நிகழ்காலத்தின் நேரத்தை வீணாக்குவதற்குக் காரணம் ஆசாபாசங்கள் என விளக்குகிறார். இதைத்தான் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டு ஸமபாவனையில் மனதை நிறுத்து என விளக்குகிறார்.
ஒருவன் தான் செய்யும் வேலையில் முழு கவனத்துடன் இருக்கும்போது, வேறொருவர் அவரிடம் வந்து குசலம் விசாரிக்கும்போது எப்படி அவர் தன்னை மறந்து வந்தவரின் பேச்சுக்கு செவி சய்ப்பதில்லையோ அதுபோல் நாம் செயல் புரிய வேண்டும். தான் செய்யும் வேலையில் முழு கவனம் வர வேண்டுமானால், கடந்தகால சிந்தனைகளோ வரும்கால விசாரங்களோ இல்லாமல் செய்யும் தொழிலில் மூழ்கிவிடுவது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. இதில் கர்மபலனைப் பற்றியோ, தோல்வியைப் பற்றியோ, மனம் கலங்காமல் செய்யும் காரியத்தில் முழுமையாக மனதைப் பறிகொடுத்து செய்வது ஒருபோதும் தக்க பலனை தராமலிராது. ஏனென்றால் செய்யும் வேலையில் உள்ள ஈடுபாடும் அதன்மேல் உள்ள அன்பும் தான் காரணம். என்ன, தெரிந்ததா? “செய்யும் வேலையில் முழு கவனம் செல்ல வேண்டுமானால், கடந்தகால அனுபவனங்க்ளையும் வரும்கால எதிர்பாப்புக்களையும் தவிர்த்து, நிகழ்காலத்தில் கிடைத்த சமயத்தைப் பயனுள்ளதாகச் செய்ய வேலையில் தன்னை மறந்து மூழ்கிவிடுவதனால் அப்பொழுது கிடைக்கும் மன அமைதியே நல்ல பலனைத் தரும்.:” என்றூ புரிந்திருக்குமே?
புத்தௌ சரணமன்விச்ச க்ருபணா: பலஹேதவ:
ஸ்லோகம் 49 கேளுங்கள்
ஸாரம்:
கர்மயோகம் என்பது புத்தியோகத்தை விடத் தாழ்ந்தது ஓ தனஞ்ஜய! புத்தியைச் சரணடை . கர்மபலனில் நாட்டம் கொண்டவர்கள் பதிதர்களே (தோல்வியுற்றவர்களே).விளக்கம்:
கர்மபல ஆஸக்தியுடன் செய்யும் கர்மம் ஆசாபாசத்தில் உழன்று செய்வதால் மன அமைதியில்லாமல் தகுந்த பலனைத் தராது (இது கர்மயோகம்). ஆனால் பலனில் எதிர்பாப்பில்லாமல் முழுமனதுடன் செய்யும் கர்மத்தில் மனம் சாந்தியுடன் இருப்பதால் அது பலனைத் தரும். (இது புத்தியோகம்). இப்படிச் சொன்னால் புத்தியோகம் என்பது ஒரு புதுக் கருத்து என எழுத்தாளர்கள் தங்கள் மூளையைக் குடைந்து பார்க்கிறார்கள். உபநிஷத்துகள் சொல்வது, “நிச்சயாத்மிகா புத்தி:”, “ஸம்சயாத்மிகா மன:” என்பதாகும். அப்படிப் பார்த்தால் நம் விசாரங்கள் எப்பொழுது அலைபாய்ந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனவோ அப்போது அது “மனம்”, ஏகாங்க்ர நிலையில் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறதோ அப்போது அது “புத்தி” எனப்படும். இப்படிப் பார்த்தால் இது இரண்டும் நம்முள் இருக்கும் ஒரு கருவியின் இரண்டு தோற்றங்களே என விளங்கும். மனதை நிலை நிறுத்தி ஏகாக்ரமாக அமைதியாகச் செய்யும் காரியத்தில் முழுவதும் மூழ்கிவிட்டால் அப்போது அது புத்தியோகம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.பகுத்தறிவு அல்லது நல்லது கெட்டது என்பதை வேர்திரித்தறியும் சக்தியைத்தான் புத்தி என சொல்கிறோம். இது மனதைத் தன் வசம் அடக்கி ஆளும் தன்மை உள்ளது. ஆதலால் புத்தியோகம் என்றால், இந்த உயர்ந்த சக்தியைப் பயன்படுத்திச் செய்யும் கர்மா எனக் கொள்ள வேண்டும். இதற்கு வேண்டியது நம் சுயமரியாதையை (EGO) விட்டுவிட வேண்டும். அப்போதுதான் புத்தி வேலை செய்யும், மனமும் அதற்கு அடங்கும். கர்மபலனை நினைத்துச் செயல் புரிபவர்கள் பதிதர்கள் எனச் சொன்னார். அப்படியென்றால் என்ன? ஆசாபாசத்தில் கட்டுண்டு, தன் நோக்கம் நிறைவேறச் செய்யும் கர்மா தரும் பலன் அவர்களை பாதிக்கும். அப்படிப் பலன் கிடைக்கவில்லையானால் அத்ருப்தி, கிடைத்தால் இன்னும் அடைய ஆசை, இப்படி வாஸனைகளைப் பெருக்கி, மீண்டும் மீண்டும் இப்படியே செயல் புரிந்து, கர்மவினைகளால் கட்டுண்டு, மனம் பேதலித்து, தன் நிலை ஒருகாலும் உண்ராமல் போய்விடுவார்கள். அதனால் அவர்கள் தோல்வியுற்றவர்கள் அல்லது பதிதர்கள் எனக் கருத்து. ஆனால் புத்திக்கு உட்பட்டு ஒருவன் செய்யும் காரியத்தில் மூழ்கிச் செய்தால் அதில் கிடைக்கும் த்ருப்தியே அவனுக்குப் பலனாக அமையும். மனம் பேதலிக்காது. தன் சுயமரியாதையை விட்டுச் செய்வதால் பலன் தன்னைத் தாக்காது. அதனால் வாஸனைகள் தனனை வந்து சேராது. இருந்த வாஸனைகள் எரிந்துபோய் அவர்கள் மனம் நிம்மதியடைந்து புத்திபூரவகமாகச் செயல் புரிவதால் தன் சுய நிலையை அடைய ஹேதுவாகும்
”சஞ்சலாஸ்பதமான மனத்தளவில் செயல்புரியாமல் நிச்சயாஸ்பதமான புத்திபூர்வகமாகச் செய்யும் செயலில் மன அமைதியும் நற்பலனும் கிடைக்கும், ஏனென்றால் அதில் நம் அஹந்தை அல்லது சுயமரியாதை (EGO) இராது. அங்கு நம் தெளிந்த சுய உருவமே நிலைக்கும். இதுவே புத்தியோகம். அதுவே கர்மயோகத்தை விடச் சிறந்தது.” என்பதை நாம் உணரவேண்டும்.
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக:கர்மஸு கௌசலம்
ஸ்லோகம் 50 கேளுங்கள்
ஸாரம்:
ஸமபாவத்துடன் இயங்கும் சக்திபெற்ற புத்திமான் இவ்வுலகில் செய்யும் நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் (செய்யும் பலனை) களைந்து விடுகிறான். ஆதலால் யோகத்தில் இயங்கு, காரணம் யோகம் என்பது காரியத்தை ஸாமர்த்தியமாகச் செய்வது என்பதுதான்.விளக்கம்:
எவனொருவன் மன உளைச்சலிலிருந்து விடுபட்டு, ஆசாபாசங்களால் தாக்கப்படாமல், புத்திபூர்வகமாகச் சிந்தித்து காரியத்தில் இறங்குகிறானோ அவன் நல்லது கெட்டது போன்ற த்வந்தவங்களிலிருந்து விடுபடுகிறான், ஏனென்றால் நல்லது கெட்டதின் பலன்கள் மனத்தளவிலேயே. மனம் அடங்கிவிட்டால் பிறகு வரும் க்ஷ்ட நஷ்டங்கள் அவனை பாதிக்காது. ஆதலால் அவன் வாஸனைகளுடைய அலைகளில் அகப்பட்டுத் தவிப்பதில்லை. ஜீவராசிகளில் மனித ஜென்மம் உயர்ந்தது. காரணம் அவனுக்கு ஆறறிவு உண்டு. இந்த அறிவை அவன் உபயோகிக்கவில்லையேல் அவன் மனிதனே அல்ல. அர்ஜுனன் ஆசாபாச பந்தத்தால் தாக்குண்டு எதிர் கட்சியில் உள்ளவர்கள் தன் பந்துக்கள், ஆதலால் அவர்கள் அழிவு தனக்கு கியாதியைத் தராது என்று மன்ம் கலங்கியதால் முதலில் அவனை ஒரு மனித வடிவில் கொன்டுவர வேண்டும். அதற்காகவே இந்த வியாக்கியானம் தருகிறார் பகவான்.யொகம் என்பது புத்யாஸ்பதமான கர்ம, அதுவும் ஸாமர்த்தியத்துடன் செய்வது என விளக்கினார். இப்பொழுது அதை இங்கு வேறு தரத்தில் விளக்குகிறார். செய்யும் கர்மாவை ஸாமர்த்தியமாக அதாவது ஜெயம் வரும் விதம் செய்ய வேண்டிய முறைப்படிச் செய்வது எனச் சொல்கிறார். விஞஞானத்தில் ஒரு விளக்கம் தந்தால் அது வேறுவிதமாக மற்றொரு இடத்தில் தரக்கூடாது. அதே விளக்கம் தர வேண்டும் எல்லா இடத்திலும். அப்படியிருக்க, வேதாந்த விஷயத்தில் ஏன் இப்படி மாறாக மற்றொரு இடத்தில் தர வேண்டும்? முதலில் ஸமபாவனையுடன் செய்யும் காரியம் வெற்றிபெறும் என்றார். இதை மனத்தளவில் செய்யாமல் புத்திபூர்வகமாகச் செய்ய வேண்டும் என்றார். இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றே. ஸமபாவனை வர வேண்டுமானால், த்வந்த்வங்கள் அகலணும், அதற்கு சித்தசுத்தி, அல்லது புத்திக்கூர்மை வேண்டும். ஆதலால் இந்த இரண்டும் ஒன்றே. அதேபோல் ஸாமர்த்தியமாகச் செய்ய வேண்டும் என்பதும் புத்திபூர்வகமாகச் செய்ய வேண்டும் என்பதும் ஒரே கருத்தைத்தான் தருகின்றன.
இதை நாம் அலசிப்பார்த்தால் தெரியும் இதன் உட்க்கருத்து. வாஸனைகளின் அழுத்தத்தால் மனம் அலைபாயும், அப்பொழுது நம் மூளை வேலை செய்யாது. மன உலைச்சல் தான் மிஞ்சும். இத்தருணத்தில் நாம் கர்மத்தில் ஈடுபட்டால், செய்யும் வேலை சரிவரச் செய்ய இயலாது. குழப்பமே வரும். வேலயில் கவனம் செல்லாமல் வரும் பலனைப்பற்றிய கவலையே முன் நிற்கும். மன அமைதி வேண்டுமானால், கர்மபலனை யோசிக்கக்கூடாது. செய்யும் கர்மா ஒன்றுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படி நம் மூளையைத் தீட்டிச் செய்தால் நிச்சயம் அந்தக் காரியம் வெற்றி பெறும். ஏனென்றால் இங்கு புத்தியின் தீக்ஷண்யம் வேலை செய்கிறது. என்ன தெரிகிறது: “மனது அடங்கி புத்தி மேலோங்கி நிற்க்கும்போது செய்யும் காரியத்தில் கவனம் சென்று அது சரிவரs செய்யப்படும். ஆதலால் இதற்கு யோகம் என்று பெயர். அதாவது, மனமும் புத்தியும் ஒன்றுபட்டு ஏகாக்ர சித்தத்துடன் செய்யும் கர்மா பலன் தரும்” என பொருள்.
(தொட்ரும்)
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












