ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:
அத்தியாயம் 2 பாகம் 5
பகவத்கீதா சாரம்
அசலம்
ததபி த்வம் மஹாபாஹோ நைனம் சோசிதும் அரஹஸி
ஸ்லோகம் 26 கேளுங்கள்
ஸாரம்:
(ஆத்மா) திரும்பத் திரும்ப ஜெனன மரணத் தொடரான ஒரு நிகழ்சி என நீ கருதினாலும், ஹே பலசாலி, அதில் நீ கவலைப்பட வேண்டியதில்லை.விளக்கம்:
இதுவரை தந்த விளக்கத்தால் அர்ஜுனனுக்கு விளங்கவில்லை போலும். உலக நியதிக்குட்பட்டு விளக்கம் தர வேண்டும் எனக் கருதிய ஸ்ரீ கிருஷ்ணன் இந்த மஹத் தத்துவத்தை உலகநியதிக்குட்பட்டு விளக்க முன்வந்தார். உலகத்தில் கண்கூடாகக் காணும் பௌதீக விஷயங்களை மட்டுமே நாம் நம்புகிறோம். அந்த மட்டில் பார்த்தால் வாழ்க்கை என்பது ஒரு ஜெனன மரணத் தொடராகத்தான் தெரிகிறது. உலகிலுள்ள எல்லா வஸ்துக்களும் உண்டாகி அழிந்துபோகின்றன. மீண்டும் மீண்டும் உண்டாகி அழிகின்றன. அப்படியானால் நீ எதற்கு வருந்த வேண்டும் என வினவுகிறார். மழைக்காலத்தில் நீரில் மிதக்கும் குமிழி தோன்றி சிறிது நேரம் நீரில் மிதந்து பிறகு மறைவது ஸஹஜம்தானே. அதேபோல் கௌரவ சேனையில் உள்ள ஆயிரக் கணக்கான பேர்களும் தொடராகப் பிறந்து அழிபவர்கள்தாமே. அப்படியிருக்க நீ எதற்கு வருந்த வேண்டும் எனப் பொருள்.இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவமானது: “அநித்தியமான, அழியக்கூடிய வஸ்துக்களை நாம் பிரியும்போது வருந்துவது மூடத்தனம். உலகநீதிக்குட்பட்டு ஏதொன்று உண்டாகிறதோ அது அழியத்தான் செய்யும். அப்படி ஜெனன மரணம் நம் கையில் இல்லாதபோது நாம் எதற்காக அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர வேண்டும்.”
தஸ்மாதபரிஹார்யேSர்தே ந த்வம் சோசிதும் அர்ஹஸி
ஸ்லோகம் 27 கேளுங்கள்
ஸாரம்:
ஜெனித்தால் மரணம் நிச்ச்யம். மறித்தால் ஜெனனம் நிச்சயம். (அது நம் கையில் இல்லை). ஆதலால் தவிர்க்க முடியாத இந்த நிலையைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?விளக்கம்:
ஏதொன்று பிறக்கிறதோ அது அழிவது திடம். இந்த பௌதீக நியதியை ஸ்ரீ கிருஷ்ணன் கையாளுகிறார். உலகநியதிக்குட்பட்டு நோக்கினால் வாழ்க்கை என்பது ஒரு தொடரான பிறப்பு இறப்பு சம்பவம்தான். எங்கிருந்து உதிக்கிறது, எங்கு செல்கிறது எனத் தெரியாது. ஈஸ்வரவாதிகள் சொல்வது, வாழ்க்கை என்பது ஜீவாத்மா ஒரு உடலை எடுத்து அதன்மூலம் தனது இச்சைகளைப் பூர்த்தி செய்து வளர்ந்து காலப்போக்கில் தன் உருவம் அழிய, பிறிதொரு உடலை நாடி முடிவுறாத ஆசைகளைப் பூர்த்தி செய்து வளர்ந்து அழிகிற ஒரு தொடர்பான நாடகம் எனபதே. இப்படி ஈஸ்வரவாதிகளும் நிரீஸ்வரவாதிகளும் ஒன்றுசேர ஒப்புக்கொள்ளும் தத்துவம் இது.சூரிய வெளிச்சத்தில் நின்றுகொண்டு வெப்பத்தைப் பற்றியும் அதிரொளியைப் பற்றியும் புகார் சொல்லுவர் ஞானிகளல்ல. அதேபோல் ஜெனித்த பிறகு வாழ்வில் வரும் சுக துக்கத்தைப் பற்றிப் புகார் சொல்வது படித்தவருக்கு அழகில்லை. ஏனென்றால் வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாத ஜெனன மரணத் தொடர்தான் என அறிந்தபின் அதைப்பற்றிக் கவலைப் படுவது என்பது அஞ்ஞானம். ஸ்ரீ கிருஷ்ணன் பெரும் வாழ்க்கைத் தத்துவமான “கவலைப்படுவது அஞ்ஞானம்”, "சந்தோஷப்படுவது ஞானம்” என்ற் நியதியை இங்கு போதிப்பதாகத் தெரிகிறது.
இந்த ஸ்லோகத்தையும் அடுத்து வரும் ஸ்லோகத்தையும் சேர்த்து ஸ்ரீ சங்கரர் சொல்வது: “காரண காரியங்களுக்குட்பட்ட வஸ்துக்களைப் பற்றிக் கவலைப்படுவது உசிதமல்ல” எனக் கூறியுள்ளார்.
அவ்யகதானிதனான்யேவ தத்ரகா பரிதேவன
ஸ்லோகம் 28 கேளுங்கள்
ஸாரம்:
இப்போது அனுபவமாகும் பூத (உடல்) அதன் தொடக்கத்தில் காணப்படவில்லை, ஓ பாரதா, இடையில் காணும் அவை முடிவில் மீண்டும் காணப்படுவதில்லை. அப்படியிருக்க அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?விளக்கம்:
இங்கிருந்து 37-வது ஸ்லோகம் வரையில் ஸ்ரீ கிருஷ்ணன் உலக நியதிப்படிப் பார்ர்க்கும் அர்ஜுனனின் நிலையிலிருந்து இந்த மஹத் தத்துவத்தை விளக்குகிறார். ஸ்ரீ கிருஷ்ணன் கையாளும் தரம் மிக அற்புதமானது. முதலில் அவர் ஈஸ்வரவாதிகளைப்போல் வேதாந்த் விஷயம் வழியாக இதைக் காண்பித்தார். பிறகு பின்னாலுள்ள இரண்டு ஸ்லோகங்களால் நிரீஸ்வரவாதிகளைப்போல் வாதிட்டார். இப்படி இரப்ண்டு தரப்புக்காரர்களையும் சமாதானப்படுத்த இப்படி வாதிததார் போலும். உலகம் காரணகாரியங்களை ஒட்டி காரணவஸ்து தென்படாதது, காரியங்கள் தென்படுவன என்ற நியதியை ஒட்டி சலிக்கிறது. இப்பொழுது தென்படும் இந்த உலகம் முன்பு தென்படாததாக இருந்தது. அது பிறகு மீண்டும் தென்படாததாக ஆகிவிடும். ஒரு சக்கரத்தில் ஒரு புள்ளி சக்கரம் சுற்றும்போது முன்பு காணாமல், பிறகு தென்பட்டு, பிறகு மறைவதுபோல்தான் உலக வாழ்க்கையும்.பகவான் சொல்வதுபோல், ஏதொரு நித்திய, அளவில்லாத, மாற்றமில்லாத ஒரு சத்திய வஸ்து இருந்து அதில் இந்த மாற்றங்களாகிய நாடகம் நடக்கிறதோ அதை ஏன் நாம் எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்வதில்லை? அர்ஜுனனைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை என பகவான் கூறுவதாக ஸ்ரீ சங்கரர் சொல்கிறார், தொடர்ந்து அவர். “பிரஹ்மத்தைத் தெரிந்துகொள்வது என்பது இயலாதது. அதற்குக் காரணமான அஞ்ஞானம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க, உங்களைக் குறை கூறுவானேன்? பிரம்மத்தைத் தெரிந்து கொள்வது ஏன் கடினம் என நீங்கள் வினவலாம்” என உரைக்கிறார். அதற்கு பகவான் சொல்வது:
ஆஸ்சர்யவச்சைனமன்ய:ச்ருணோதி ச்ருத்வாப்யேனம் வேத ந சைவ கஸ்சிது
ஸ்லோகம் 29 கேளுங்கள்
ஸாரம்:
சிலர் இதை (ப்ரஹ்மத்தை) ஒரு ஆஸ்ச்ர்யமாகக் காண்கிறார்கள். இன்னும் சிலர் இதை ஒரு ஆஸ்சர்யமாகப் பேசுகிறார்கள். இன்னும் சிலர் இதை ஒரு ஆஸ்சர்யமாகக் கேட்கிறார்கள். ஆனாலும் யாரும் இதைப் புதிந்துகொண்டதாகத் தெரிந்துகொள்ளவில்லை.விளக்கம்:
கதோபனிஷத்தில் சொன்ன தத்துவம் அதே போல் இங்கு தரப்பட்டுள்லது. ப்ரஹ்மம் ஒரு நித்திய, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த எப்பொழுதும் சந்தோஷமான நிலையில் இருக்கும் ஒரு வஸ்து எனச் சொன்னாலும், நம்முடய சொந்த அனுபவம் நாம் அஞ்ஞானத்தில் அளவிற்குடபட்ட, சங்கடங்களைத் தாங்கும் ஒரு ஜீவன் எனபதுதான். இப்படி ப்ரஹ்மத்திற்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டின் தூரம் வெப்பத்திற்கும் குளிருக்கும் உள்ள வேறுபாட்டைப்போலும், ஒளிக்கும் இருட்டிற்கும் உள்ள வேறுபாட்டைப்போலும் மிக விஸதாரமக உள்ளது ஏன்? நம் அஞ்ஞானத்தால், நாம் ப்ரஹ்மத்தை அறிந்துகொள்ள முயலும்போது அது வெகு தூரம் உள்ள ஒரு குறிக்கோளாகத் திகழ்கிறது. ஆனாலும் பகவானின் வாக்கிலிருந்து தெரிவது என்னவென்றால், “நாம் ப்ரஹ்மத்திடமிருந்து அகன்றவரல்ல, ஏனென்றால் அதுதான் ப்ரஹ்மத்தின் தன்மை”. அப்படியானால், ஒரு மனிதன் மோக்ஷத்திலிருந்து வெகுதூரம் உள்ளான், ஒரு பாபி ச்ன்யாசியிடமிருது வெகு தூரம் உள்ளான், ஒரு குறையுள்ளவன் ஒரு வித்வானீடமிருந்து வெகு தூரம் உள்ளான், சொப்பனம் காண்பவன், விழித்திருப்பவனிலிருந்து வெகு தொலைவில் உள்ளான் என்ற நமது கருத்து தவறானதல்லவா?ப்ரஹ்மத்தின் சக்தியை உணர்ந்த மனிதன் ப்ரஹ்மத்துடன் ஐக்யமாகி அவன் வேறு ப்ரஹ்மம் வேறு என்ற வேறுபாடு இல்லாமல் திகழ்கிறான். ப்ரஹ்மம் அஞ்ஞானத்தால் மனித நிலைக்கு வந்துவிடுகிறது. இதுதான் உண்மை. மனம், புத்தி இவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை என்பது அஹந்தைக்கு நினைத்துப் பார்க்கக்கூட இயலாது. ஆனால் ஒரு மனிதனோ எப்பொழுது ஆத்மஞான பயிற்சியால் தன் சுய நிலையை உணருகிறானோ அவன் தன் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட அந்தப் பரமசுக நிலையை அடைகிறான்.
இப்படி நித்திய சுகத்தை உணர்ந்தவன் தன் மனநிலையில் இருக்கும்போது அவன் பித்துப்பிடித்தவனைப்போல் வெளீயில் உற்றுப்பர்த்து, வாய்திறந்து, நாடிகள் துடித்து, ஒரு அற்புதத்தைக் கண்டதுபோல் தெரிவான். இதைத்தான் ரிஷிகள் “ஆத்ம சுகம் அனுபவித்தவன் பித்தனைப்போல் காட்சிதருவான். தன் மன நிலையில் இருக்க மாட்டான்” என்றனர். இப்படி ஸ்வானுபவம் பெற்றவரில் சிலர் தங்கள் உலக வாழ்க்கையில் மௌன்மாக அமர்ந்து அந்த நித்திய சுகத்தில் திகழ்வார்கள். இன்னும் சிலர் தங்கள் அனுபவத்தை சாதாரண மனிதர்களுக்குத் தங்கள் வாக்சாதுர்யத்தால் விளக்கி அந்த அனுபவத்தை ஒரு எல்லைக் கோட்டிற்குள் காண்பிக்க முயல்வார்கள். இவர்களில் சிலர்தான் ஸ்ரீ புத்தன், இயேசுகிருஸ்து, முஹம்மத் நபி, மஹவீர், ஸொராஷ்டர் முதலிய ஆத்மீக விருத்தர்கள்.. இப்பேர்ப்பட்ட மஹான்கள் வந்து நம்மைத் தூண்டி நம் நித்திய சுத்த நிலைக்கு உயர வழி சொல்லும்போது, அதை உணராமல் அவர்களை எதிர்த்து, அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றாமல் நாம் அவர்களை இவ்வுலகிலிருந்து மறைய வழிவகுக்கிறோம். என்னே நம் அறியாமை!
ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் ஒருவன் “தான் உடலுருக் கொண்ட ஆத்மா” என்று உணர்வான். அஞ்ஞானிகளோ “தன் உடலில் ஆதமா இருக்கிறது” எனச் சொல்வார்கள். மஹான்கள் நமக்குச் சொல்லிக்கொடுக்கும் தத்துவபாஷணத்தை உணரக்கூடிய அறிவாளிகள் அவர்கள் வழிச்சென்று தியானத்தில் தங்கள் சுய நிலையை எளிதில் தெளிவாக உணர்வார்கள். சாதாரண மனிதர்களோ அதை மீண்டும் மீண்டும் கேட்டு, (ச்ரவணம்) மனதில் அதைப் பற்றியே சிந்தித்து (மனனம்) பிறகு ஞானம் பெற்று தியானத்திலிருந்து (நிதித்யாஸனம்) தங்கள் சத்திய நிலையை அடைய ஹேதுவாகிறது.
தஸ்மாத் ஸர்வாணி பூதானி நத்வம் சோசிதும் அர்ஹஸி
ஸ்லோகம் 30 கேளுங்கள்
ஸாரம்:
எல்லா ஜீவராசிகள் உள்ளே திகழும் இந்த “ஆத்ம” அழிவில்லாத தாக திகழ்கிறது. ஆகையால் நீ யாதொரு ஜீவனை பற்றியும் கவலப்பட வேண்டிய அவசியம் இல்லை.விளக்கம்:
பகவான் இப்படி ஆத்ம நிலையை விளக்கி அர்ஜுனனிடம் இவ்வண்ணம் முடிக்கிறார்: எல்லா ஜீவராசிகளிலும் இருக்கும் ஆத்மா அழிவில்லாதது, நித்திய சத்திய வஸ்து. மாறுவது அல்லது அழிவது இதைப் பொதிந்திருக்கும் பௌதிகக் கவசம் தான். ஆகையால் எதிர் சேனையில் உள்ளவர்களுடன் போர் புரிவதும், அவர்களை வதிப்பதும் தவறில்லை. ஏனெனில் அவர்களிலுள்ள ஆத்மாவும் அழிவில்லாதது. அவர்கள் தேகம்தான் அழிகிறது. அதுவும் அப்படி அழிய அவர்கள் கர்மவினையே தவிர அர்ஜுனன் காரணமாக மாட்டான் என உறுதி கூறுவதற்காக 11-வது ஸ்லோகம் முதல் இதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் ஆத்மாவின் தன்மை, அதன் நிலை அதை அறிவது எப்படி, நம் உடல் என்பது அதன் கவசம், ஆதமா அழிவதில்லை, உடல் அழிகிறது. அதில் துயரப்பட ஒன்றுமில்லை. அப்படி உயிர்கள் அழிந்தால் அதற்கு அர்ஜுனன் பொறுப்பில்லை, காரணம் எல்லோரிலும் உள்ள ஆதம சக்தி ஒன்றேதான். அதுவும் அது அழிவில்லாதது என்பன போன்ற ஆத்மஞான போதனையை அர்ஜுனனுக்குத் தந்து இந்த ஸ்லோகத்தில் அவனுக்கு உறுதிமொழி கூறி அவனை சமாதானப் படுத்துகிறார்.இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவமானது:”சகல ஜீவராசிகளிலும் உள்ள சக்திதான் ஆத்மா என அறியப்படும் அழிவில்லாத, நித்தியமான, எங்கும் நிறைந்த, அள்விட முடியாத, ஊனக்கண்களால் பார்க்க முடியாத ப்ரஹ்மம் அதன் கவசமான உடல் அழிவுள்ளது, மாறக்கூடியது. அதனால் பிறப்பு இறப்பு என்பதில் கவலைப் படவேண்டியதில்லை. அது மூடத்தனம்” என்பதே.
ஹரி ஓம்
தொடரும்...
அத்தியாயம் 2 பாகம் 4
அத்தியாயம் 2 பாகம் 6
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















