ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மனே நம:
அத்தியாயம் 2 பாகம் 2
பகவத் கீதா சாரம்
அசலம்
அத த்விதீயோத்யாய:
ஸ்ரீ பகவான் உவாச:
கதாஸூன் அகதாஸூன்ஸ்ச நானுசோசந்தி பண்டிதா:
ஸ்லோகம் 11: கேளுங்கள்
ஸாரம்:
பகவான் உரை செய்கிறார்:யாரைப் பற்றி சங்கடப்படக் கூடாதோ அவர்களைப் பற்றி நீ சங்கடப்படுகிறாய். ஆனால் அதே சமயம் விவேகத்தைப் பற்றியும் சொல்கிறாய். விவேகிகள், இருப்பவர்களைப் பற்றியோ இறந்தவர்களைப் பற்றியோ கவலைப் படுவதில்லை.
விளக்கம்:
ஆதி சங்கரர் தன் கீதை உரையில் இந்த ஸ்லோகத்தை மூலமாகக் கொண்டு துவங்கியுள்ளார். ஆனாலும் இதற்குமுன் இருந்த ஸ்லோகங்களுக்கு ஒரு சுருக்கமான விரிவுரை தந்திருக்கிறார். தன் சுய தர்மத்தைப் பற்றிய குழப்பமும் ஆனால் இந்த ஆசாபாச பந்தத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் இருக்கும் அர்ஜுனனின் இந்தப் பரிதாப நிலையைக் கண்டு, அவனுக்கு இதிலிருந்து விமோசனம் தர எண்ணி, அதற்கு ஒரே மார்க்கம் “ஆத்ம ஞான்ம்” தருதல் ஒன்றுதான் மேல் எனக் கருதி பகவான் வாசுதேவன் இவ்வண்ணம் உபதேசம் செய்யத் துவங்கினார் எனத் தந்துள்ளார்."யாருக்காக நீ கலங்கக் கூடாதோ அவர்களுக்காக வருத்தப்படுகிறாய். விவெகத்தைப் பற்றியும் பேசுகிராய். ஞானிகள் இருப்பவரைப் ப்ற்றியோ இறந்தவரைப் பற்றியோ நினைப்பதில்ல. அதாவது, எல்லாம் நம் செயலால் நிகழ்வதில்லை. உரு நியதிப்படி எல்லாம் நடக்கிறது. இதில் நமக்கு ஒரு பங்கும் இல்லை, வந்ததை தைர்யமாக எதிர்கொள்வதுதான் விவேகியின் லக்ஷணம் எனத் தெரிந்துகொள்" எனப் பொருள்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால்: மனம் பேதலிக்கக் காரணம் அஞ்ஞான்ம். அதாவது தன் சுய வடிவைப் பற்றிய அறிவு இன்மை. இந்த நிலையில் மாயையால் சிக்குண்டு உலக சுகமே சுகம், சாசுவதம் என நம்புவது, உலக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் தனது எனக் கருதி அதில் உழலும் மனம் தத்தளிக்குமே தவிர, கூர்மையாக சிந்திக்காது. அப்படிப்பட்ட நிலையில் தன் சுய உருவம் தெரியாது "அஹந்தை" எனும் உருவம் நம்மை ஆட்கொள்ளும். அறிவு என்ற நமது சுய உருவத்தை மறைத்துவிடும். அந்த அஹந்தை எல்லாம் தன்னுடையது, தன்னால் செயல்படுவது என்ற பாவத்தில் இருக்கும்போது, நம் செயலும் சுயநலத்துடனேதான் அமையும். எதை எடுத்தாலும் அதில் தன் சுகம் இல்லையேல் பல காரணங்களைக் காட்டி அதைத் தவிர்க்க எண்ணும். சாஸ்திரங்களீல் சொல்லும் வேத வாக்குகளை ஏற்காது மன ஆராய்ச்சியில் இறங்கும். அதனால் ஒரு நிச்சயமான கருத்தைக் கொள்ளாது தத்தளிக்கும் மனம் நம்மை நேர் நிலைக்குச் செல்ல அனுமதிக்காது. இந்த ஆராய்ச்சியில் உலக சம்பந்தப்பட்ட செயல்களையே உதாரணமாகக் கொண்டு முடிவுகள் எழும். ஆன்மீக சிந்தனையோ ஆத்ம பலத்தில் விசுவாஸமோ எழாது. சாஸ்திர நீதி நீங்கி உலக நீதியில் நம் தீர்மானங்கள் எழும். இதனால் நாம் மன அளவில் தத்தளிக்க நேரிடும். நம் புத்தியும் பேதலித்துவிடும்- அதாவது சிந்தனா சக்தியை இழந்துவிடும். மனதை அதன் போக்கில் விடாது, வேதாந்த சிந்தனைப்படி, சாஸ்திரங்களின் கருத்துக்களை மையமாகக் கொண்டு நம் தீர்மானங்கள் எழணும். அதில் தான் நமக்கு ஆத்ம ஞானம் கிடைக்கும். ஆத்ம ஞானமில்லாமல் செய்யும் காரியங்கள் பிழைபட்டுவிடும். எந்த சோதனை வந்தாலும் அதை தைர்யமாக நோக்கி விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
நசைவ நபவிஷ்யாம:ஸர்வேவயமத:பரம்
ஸ்லோகம் 12: கேளுங்கள்
ஸாரம்:
முன்காலத்தில் ஒருபோதும் நீ அல்லது நான் அல்லது இந்த இராஜாக்கள் இருக்கவீல்லை என்றோ, இனி வரும் காலத்தில் நாம் இருக்க மாட்டோம் (இறப்பிற்குப் பிறகு) என்றோ ஒரு நிலை இல்லை.விளக்கம்:
அர்ஜுனனுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் முதலில் தேஹ ஆத்ம நிலையைப் பற்றிக் கூற வேண்டும். இந்த தேஹம் நாம் காண்பது. ஆனால ஆத்மா காண முடியாதது. நமது அறிவு இந்த உடல் நிலையில் மட்டும்தான். இந்த உடல் அழிந்தால் நம் வாழ்க்கை முடிந்து விட்டது என நாம் நினைக்கிறோம். ஆனால் உடம்பிற்கு ஊக்கம் தருவது ஆத்ம சக்தி என்று அறிய வேண்டும். அது அழிவில்லாத வஸ்து எனபதை உணர வைக்க வேண்டும். அதைத்தான் இங்கு கிருஷணன் வலியுறுத்துகிறார். முற்காலத்தில் (Past) நீயோ, நானோ, இந்த இராஜக்களோ எல்லாம் இல்லாமலிருந்ததில்லை, வரும் காலத்திலும் (Future) நாம் இல்லமலிருக்கப் போவதில்லை. இப்பொழுதும் இருக்கிறோம். என்ன பொருள்? தேஹம் அழிந்தாலும் இந்த ஆத்மா பிறிதொரு தேஹத்தைக் கொண்டு வாழ்கிறது. ஆத்மாவுக்கு அழிவில்லை. தேஹம் மட்டும் மாறுகிறது. ஒருபோதும் நாம் இல்லாமலில்லை. இதுதான் வேதாந்திகளுடைய கண்டுபிடித்தம். அதாவது வாழ்க்கைத் தொடர் என்று ஒன்று உண்டு. வாழ்வு நித்தியம், சத்தியம், அழிவில்லாதது என்ற பெரிய வேதாந்த தத்துவத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.கிரிஸ்துவ மதத்திலும், இஸ்லாம் மதத்திலும், ஜைன மதத்திலும், புத்த மதத்திலும் கூட இந்த அழியா வாழ்வைப் பற்றி நேரடியாகவோ, சூசகமாகவோ தந்துள்ளார்கள். எல்லா மதத்தினரும் இதைப் பற்றி ஊடுருவிப் பார்க்காம்ல் உலக நீதிக்குட்பட்டு, கண்கூடாகக் கண்டதே நிசம். மற்றவை பொய் என்று கருதுகிறார்கள். பிறந்து மூன்று நான்கு வயதுடைய சிறுவர் சிறுமியர் தங்கள் கடந்த ஜென்மாவைப் பற்றி மிகத் தெளிவாகவும், ஆதாரத்துடனும் பேசுவதைப் பற்றி நாம் பேப்பரில் வரும் செய்திகளைப் பார்ப்பதில்லையா? முன் ஜென்மாவின் அழிவின் பொழுது இருந்த ஞானம் இந்த ஜென்மாவில் தொடர்ச்சியாக இல்லையானல் இப்படிக் கூற முடியுமா? இதை நாம் Occult Power அல்லது Premonition அல்லது Super Intelligence எனக் கூறுகிறோம். முன் ஜென்மாவின் தொடர்ச்சி இல்லையேல் இப்படிக் கூற முடியாது. அது ஒவ்வொருவருடைய புத்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது. இப்படி வாழ்வு என்பது ஒரு தொடர், அதற்கு அழிவில்லை, உடம்பு மட்டும் மாறுகிறது, அதற்குள்ளிருக்கும் ஆத்மாவிற்கு அழிவில்லை. அது நித்திய வஸ்து என்பது தெள்ளத் தெளியத் தெரிகிறது. அப்படியானால் உடல் அளவில் செய்யும் காரியங்கள் நம் இந்த வாழ்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. அது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல் புரிகிறது. அதில ஆத்மாவுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. ஆதலால் அழியும் வ்ஸ்துவை மையமாகக் கொள்ளாமல், அழிவில்லா ஆத்ம சக்தியின் தன்மையில் நாம் இய்ங்க வேண்டும் என்ற பெரும் தத்துவத்தை இங்குத் தெளிவாக உரை செய்கிறார் கிருஷ்ண்ன்.
நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்? நம் ஆத்மசக்தியை நமது அஹந்தை மறைத்து, நம்மை ஆசாபாச பந்தத்தில் ஆழ்த்தி, உண்மை வஸ்துவை அறியாமல் செய்வதுதான் மாயை எனப்படுவது. உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும் பொய்க் கண்ணாடியே இந்த மாயை என்பது. அதாவது அஞ்ஞானம். ஞானம் உண்மை, அஞ்ஞானம் பொய். இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.
ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்தத்ர நமுஹ்யதி
ஸ்லோகம் 13: கேளுங்கள்
ஸாரம்:
எப்படி ஆத்மா நம் இந்த தேஹத்தில் கௌமாரம், யௌவனம், வர்த்தக்யம் என்ற மூன்று நிலைகளைத் தாண்டுகிறதோ அதேபோல், அது ஒரு உடலைப் பிரிந்து மற்றொரு உடலை அடைகிறது. த்ருட புத்தியுள்ளவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.விளக்கம்:
மறு பிறவி என்பது என்ன என்பதைத் தெளிவாகத் தருகிறார். அனுபவத்தை உணர்பவனும் புத்தியை உடையவனும் இரண்டும் ஒன்றுதான். இல்லையேல் இந்த வாழ்விலேயே நாம் குழந்தைப் பருவத்திலும், யுவா பருவத்திலும், முதியவர் பருவத்திலும் மாறினாலும் நம் சிறு வயதில் நடந்த விஷயங்களை எப்படி முதிய பருவத்தில் உணர முடியும். அதற்கும் நித்தியமாக அழிவில்லாத ஒரு வஸ்து இருந்தால்தானே இது சாத்தியமாகும்? அதுதான் நமது ஆத்மா. அதற்கு இந்த மாற்றங்கள் இல்லை. அது நித்தியம். நமது புத்தி (அறிவுக் களஞ்சியம்) மாறுவதில்லை. அதன் சக்தி ஆத்மாவிலிருந்து வருகிறது. அப்படி ஞாபக சக்தி நிரந்தரமாக இருந்தால்தான் நமக்கு முற்கால்த்தில் நடந்த விஷயங்கள் பிற்காலத்தில் ஞாபகம் வரும். அப்படியானால் இந்த சக்தி ஒரு தேஹத்தை விட்டுப் பிறிதொரு தேஹத்தை அடையும்போதும் இந்த ஞாபக சக்தி ஆத்மாவின் அழிவில்லாத தன்மையினால் நிலைத்திருக்கிறது. அதற்குக் காராணம் நமது வாஸனா என்ற (செயல்படாத ஆசைகள்) தான். அது அதன் தன்மைக்கு உகந்தபடி பிறிதொரு உடலை அடைகிறபோது தன் முன் கால்த்திலுள்ள அனுபவங்களைத் தன்னுடன் கொண்டு வருகிறது. இதுதான் மறுபிறப்பு எனப்படும் தத்துவம். இப்படி நம் வாழ்ககையில் நிலைகள் மாறுவதுபோல உடலும் மாறும்போதும், அழிவில்லாது சாசுவதமாக உள்ள நமது ஞாபக சக்தியும் கூட வருவதால் அது ஆத்மசக்தியின் பொருட்டே என்று தெரிகிறது. ஆதலால் அறிவாளிகள் உடல் நாசத்தைப் பற்றியோ மறு பிறவியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.பிறப்பு இறப்பு என்பவை நமது வாழ்க்கையில் தினமும் நிகழ்கின்றன. குழந்தைப் பருவம் இறக்கிறது, யௌவனப்பருவம் ஜெனிக்கிறது. யௌவனம் அழிகிறது, வார்த்தக்யம் உதயமாகிறது. ஆனாலும் இந்த இறப்பில் நாம் பயப்படுவதில்லை. சந்தோஷமே கொள்கிறொம். ஏனெனில் முதிர்ச்சி அடயும்போது நமக்குப் பல புது அனுபவங்கள் வருகின்றன். அவைகளில் சந்தோஷமே கொள்கிறோம். அதே போல் உடல் மாறும்பொழுதும் நாம் பயப்படத் தேவை இல்லை என்று அறியவும்.
இங்கு ஆதிசங்கரன் மிகத் தெளிவாக இந்த ஸ்லோகத்தினுடையதும் அடுத்து வரும் ஸ்லோகத்தினுடையதுமான கருத்தின் தராதரத்தைத் தந்துள்ளார். அதாவது, ஆத்ம ஞானத்தால் ஒருவன் "ஆத்மாவுக்கும் அழிவுண்டு" அன்ற கருத்தைப் பற்றிக் சுவலைப்பட மாட்டார்களாயினும், அறிவீனர்களிடம் நாம் பரவலாகக் காண்பது என்ன? "இந்த ஆத்மா வெப்பம் குளிர், ஸுகம், துக்கம் என்ற் துக்ககரமான மாறறங்களுக்கு ஆளாகிறது என்ற சங்கடத்தை உடையவர்களாய்க் காண்கிறார்கள் என்பதுதான்".
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்தாவது: இப்பறவியில் நமது உடல்நிலை பல பருவமாக மாறினாலும் நமது ஞாபக சக்தி மாறுவதில்லை. எல்லாப் பருவத்திலும் ஒரு தொடர்புடையவன் இருக்கிறான். அதுபோலத்தான் ஒரு பிறவியிலிருந்து மறு பிறவி எடுக்கும்போதும் ஒரு நித்தியமான சக்தி (ஆத்ம சக்தி) நிலையாக உள்ளது. அதற்கு மாற்றமோ அழிவோ இல்லை. உடல் மட்டும்தான் அழிகிறது என்பதே.
ஆகமாபாயினோSனித்யா: தாம்ஸ்திதிக்ஷ்ஸ்வ பாரத
ஸ்லோகம் 14: கேளுங்கள்
ஸார்சம்:
நம் கவனம் நமது பஞ்சேந்திரியங்கள் வழி, ஓ! குந்திபுத்ரா! வெளி உலகிலிருந்து வரும் விஷயங்கள் தரும் வெப்பம், குளிர், சுகம், துக்கம் என்ற மாறுபாடான அனுபவங்களை ஒட்டியிருக்கிறது. அவைகள் மாறி மாறி வருவதால் அவை சாசுவதமல்ல. அவைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள், ஓ பரத குலத்துதித்தவ்னே!விளக்கம்:
இங்கு கிருஷ்ணன் அர்ஜுனனை இரண்டு விதமாக சம்போதனை செய்கிறார். குந்திபுத்ரா என்றும், பரத குலத்தில் பிறந்தவனே என்றும். இதன் தாத்பர்யம் என்ன? தாய் வழிக்கும் தந்தை வழிக்கும் பார்த்தால், உயர்ந்த குலத்தில் பிறந்தவனாகிய அர்ஜுனன் இந்த ஆத்மஞான போதனைக்கு அரஹனாகிறான் என்று விளங்குகிறது. ஆதலால் இந்த உபதேசம் அவனுக்குப் பொருந்தியதே எனக் கருதுகிறார் கிருஷ்ணன். வெளியுலகிலிருந்து வரும் விஷய அனுபவங்களை நம் பஞ்சேந்திரியங்கள் வழியே நமது அஹந்தை (EGO) கிரஹிக்கிறது. பஞ்சேந்திரியங்கள் அவைகளை கிரஹிப்பதில்லை. கிரஹிப்பது நமது அஹம் என்ற இருப்பு. ப்ஞ்சேந்திரியங்கள் வெறும் உபகரணங்கள் மட்டுமே. ஒருவனின் ஒரு பொருளிலிருந்து கிடைக்கும் அனுபவம் பிறிதொருவனுக்கு வேறாகத் தெரியும். இரண்டு பேரும் ஒரேபோல் அதை அறிவதில்லை. காராணம் அவர்கள் மனநிலை, அவர்கள் புத்தியின் தன்மை. நமது ஒரு நிலையில் வரும் இனிப்பான விஷய அனுபவம் நமது நிலை மாறும்போது ஒரு கசப்பாக மாறுவதுண்டு. இது விஷயத்திலுள்ள் வேறுபாடா? அல்ல. நம் மன நிலையில் வரும் மாற்றத்தின் காரணமாக மாறுகிறது. அப்பொழுது, விஷயங்களில் சுக துக்கங்கள் இல்லை, அது நம் மன நிலையை ஒட்டி அமைகிறது எனத் தெளிவாகிறது அல்லவா? இப்படி மன நிலை மாறுவதால அது அநித்தியம். ஆதலால் வெப்பம், குளிர், சுகம் துக்கம் போன்ற அனுபவங்களும் அநித்தியம் என்பதை உணர்வாய் எனப் பொருள். விஷயங்களும் மாறுகின்றன. ஒரு பொழுது கிடைக்கும் விஷயம் மறு பொழுது மாறிவருகிறது. அல்லது அதே விஷயம் இரு பொழுதுகளில் வரும்போதும் நம் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. காரணம் நம் மன நிலையும் மாறுகிறது. இப்படி மாறும் வஸ்து அநித்தியம். சாசுவதமில்லை. ஆகையால் அவைகளிலிருந்து வரும் அனுபவமும் நித்தியமில்லை. ஏன் நாம் அதைப்பற்றி அல்லல் பட வேண்டும்?நாம் கவனிக்க வேண்டியது: உலகிலிருந்து வரும் விஷய அனுபவங்களும் அவற்றை உணரும் மனதின் தன்மையும் அநித்தியம், சாசுவதமில்லை. ஆகையால் அவை தரும் அல்லல்களும் இன்பங்களும் அழியக்ககூடியவை. அப்படியானால் நாம் அவைகளைப் பொருட்படுத்தாது எந்த நிலையிலும் த்ருடமாக அவைகளைப் புறக்கணித்து செயல் புரிய வேண்டும்.
ஸமது:க்க ஸுகம் தீரம் ஸோSம்ருதத்வாய கல்பதே
ஸ்லோகம் 15: கேளுங்கள்
ஸாரம்:
ஏதொரு மனிதன் இவைகளால் பாதிக்கப்படுவதில்லையோ, ஓ புருஷர்களில் உத்தமனே! எவனொருவன் சுகத்தையும் துக்கத்தையும் தீரமாக எதிர்கொண்டு சமமாகக் கொள்கிறானோ, அவன் ஆத்மாவின் அழிவில்லாத் தன்மையை (அம்ருதம்) உணர அருஹதை உள்ளவனாவான்.விளக்கம்:
பொறுமையுடன் கூடின சஹிப்புத்தன்மை தான் ஆத்ம ஞானத்திற்கு அடிப்படை. இதுதான் நம் உபநிஷத்துகள் ஆத்மானுபத்திற்குத் தரும் வழி. இதை அடிப்படையாகக் கொண்டு “யாதொருவன் சந்தர்ப்ப சூழ்நிலையில் வரும் சுகம், துக்கம் இரண்டினாலும் தாக்கப்படாமல் மனோபலத்துடன், சமபாவத்துடன் திகழ்கிறானோ அவனே ஆத்ம ஞானத்திற்கு அருஹதையுள்ளவனாவான்” என ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனைச் சொல்லிப் பலிப்பிக்கிறார். நம் வேதங்கள் இதைத்தான் இறப்பின்மை என்று பறைசாற்றுகின்றன. இக்காலத்தில் ஜெனித்தால் மறிக்க வேண்டும்.. ஒன்று எழுந்தால் அது அழிய வேண்டும். இதுதான் உலக நீதி. ஏனெனில் உலக்த்திலிருந்து கிடைப்பதெல்லாம் அநித்தியம், அழியக்கூடியதே. மரணம் வேண்டாமென்றால் ஜெனிக்கக் கூடாது. ஆதலால் இரண்டு வாககியங்களும் ஒன்றையே குறிக்கின்றன. இந்த மனோபலம், ஞானம், ஆத்மானுபூதி கிடைப்பது தான் நம்முடய லக்ஷியம். அதை அடைய ஸமபாவனை, அஹந்தை அழிவு முதலியவை தேவை. சுகதுக்கங்களின் தன்மை, அவைகளின் எழுச்சி, அழிவு முதலியவற்றைத் தெரிந்துகொண்டால் நமக்கு இந்தத் தத்துவம் எளிதில் விளங்கும்.இந்த அறிவு ஒருவனுக்கு சுயமாகவே தன் ஸ்வானுபவத்தாலும், சுய ஆராய்ச்சியாலும், தெளிந்த மனத்துடன் வர வேண்டும். புத்தக ஞானம் உதவாது. ஸ்வயம் அனுபத்தால் கிடைக்கும் அறிவே இதை ஊர்ஜிதப்படுத்தும். அதற்கு ஆத்ம சிந்தனை ஒன்றே வழி. ஒருவன் தன் மனைவி மக்களுக்காக உடலளவு அல்லது மன அளவு துயர்ப் பட்டு உழைக்கிறான். அதில் வரும் துயரங்களைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்கிறான். அந்த துக்கத்தில் அவன் மனம் தளருவதில்லை. இது தன் சுயேச்சை பூர்த்தியாவதற்கு அவன் செய்யும் தியாகமேயன்றி ஸமபாவனை அல்ல. புத்திபூர்வமாகத் தன்னை ஆயத்தப்படுத்தி துக்கத்தை ஸஹித்துக்கொள்ளும் மனோபாவம் கொள்கிறான். அனால் அழிவில்லா நிலை வர அவன் புத்திக்கும் அப்பாற்பட்டு தியாக மனப்பன்மை இல்லாமல் நிஜமாகவே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்வானாகில் அது ஸமபாவம் எனக் கூறப்படுகிறது. அது ஆத்ம ஞானத்தினால் தான் வரும். அதற்குப் பிறகு அவன் ஜீவன்முக்தன் அல்லது ஜெனன மரணச் சுழலிலிருந்து முக்தனாவான். அதன் பிறகு அவனது ஜீவிதம் ஒரு ஞானியினுடையதாகும், ஜீவன்முகதனுடையதாகும்.
ஹரி ஓம்
தொடரும்...
அத்தியாயம் 2 பாகம் 1
அத்தியாயம் 2 பாகம் 3
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














