வாழ்வின் லட்சியம் - பாகம் 3
அசலம்
உள்ளே உள்ளதென்ன?
சென்ற இதழில் சொன்னதுபோல் நம் கவனத்தை உள்நோக்கிச் செலுத்தி "நான் யார்?" என்ற விசாரத்தைக் கையாண்டால் நமக்கு என்ன விடை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். நான் உடலா, அல்லது மனமா, அல்லது புத்தியா, அல்லது அஹம் என்ற உணர்வா என்று கண்டுபிடிக்க வேண்டும். அது எப்படி? இது நம் புத்திபூர்வமாக அறிய வேண்டிய விஷயம். இதுவரை ஓர் விசாரமாகவே இதைக் கையாளவேண்டும். பார்ப்போமா?நான் உடலா? நாம் பேசும்பொழுது உடலைத் தொட்டு நான் என்றல்லவா சொல்கிறோம்? அப்போது உடல்தானே "நான்" என்ற வினா எழலாம். "எனக்குப் பசிக்கிறது", "என்னுடல் நலம் கெட்டுவிட்டது", "என்னால் நடக்க இயலாது" என்றெல்லாம் சொல்லும் பொழுது நாம் உடலைப் பற்றித்தானே சொல்கிறோம்? ஆம். ஆனால் பாருங்கள் என், எனக்கு, என்னுடைய, என்னால் என்றெல்லாம் சொல்லும்பொழுது அதில் உடமை நினைப்பு இருக்கிறதல்லவா? அதாவது நான் வேறு, எனது உடல் வேறு என்று ஆகிறதல்லவா? அதாவது உடல் எனது உடமையாகும். அதேபோல், "நான் நினைக்கிறேன்", "எனக்குக் கவலையாக இருக்கிறது", "என் மனம் ஓர் நிலையில் இல்லை" என்றெல்லாம் கூறும் பொழுது, அங்கேயும் நான் வேறு என் மனம் வேறு என்றாகிவிட்டதல்லவா? இங்கேயும் மனம் எனது உடமை என்று ஆகிவிடுகிறது அல்லவா? இதுபோல் புத்தி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்வோம். "எனது அறிவில்", "என் கருத்தில்", "எனது நினைவில்" என்றெல்லாம் உரைக்கும் பொழுதும், நான் வேறு எனது கருத்து, அல்லது எனது அறிவு வேறு எனக் கோள்கிறோம் அல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது? "நான்" என்பது நம் உடல் அல்ல, மனமல்ல, புத்தியும் அல்ல எனவாகும் இல்லையா?
அப்படியானால் இந்த "நான் யார்"? எப்படி அறிவது? நாம் பேசும் பொழுது "நான்", "எனது", "என்னால்" என்று சொல்லாமல் எதையாவது குறிப்பிட முடியுமா? ஆதலால் இந்த நான் எனப்படுவது ஓர் நினைவு தானா? ஆம், அது நம் விசாரங்களின் அடிப்படையாகும். இந்த "நான்" என்பதை ஒரு மூல விசாரமாகக் கொண்டு நாம் உரையாடுகிறோம். அதனால் இந்த "நான்" நம் விசாரங்களின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ள மூலவிசாரமாக உள்ளது எனத் தெள்ளெனத் தெரிகிறது இல்ல்யா? இந்த முதல் விசாரத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால், அதாவது வேறொன்றும் நினைக்காமல் "நான்" என்ற மூல விசாரத்தை மட்டுமே பின்பற்றிச் சென்றால், அது பின்வாங்கிவிடும். கொஞ்ச நேரத்தில் அதன் மூலத்திலே போய் அடங்கிவிடும். அதன் மூலம் (இருப்பிடம்) ஏது? அதைத்தான் நாம் "மனம்" எனக் குறிப்பிடுகிறோம். இது சாதனை மூலமாகத்தான் உணர முடியும். விசார வடிவில் புரிந்துகொள்ள முடியாது. இது எப்படி முடியும்? ஒரு உதாரணாத்தைக் கொண்டு பார்ப்போம்.
ஒரு மழலைச் சிறுவன் தன் களிக்கோப்பைகளை வைத்து விளயாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சேஷ்டைகளை நாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவன் கோப்பைகளை மேலும் கீழும் உருட்டியும் புரட்டியும் பார்க்கிறான். சிலவற்றை உடைக்கிறான். இன்னும் சிலவற்றை சிதைக்கிறான். மற்றும் சிலவற்றைத் தூர எறிகிறான். நாம் கோபம் கொள்ளாமலும் அவனிடம் போகாமலும் இருந்த இடத்திலிருந்தே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுவனின் கவனம் தானாக நம்மிடம் திரும்புகிறது. நாம் ஒன்றும் சொல்லாமலும் முகமாற்றம் இல்லாமலும் இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறான். அப்போதும் நாம் பேசாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோம். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல நம்மை நோக்கி நகர்ந்து வருகிறான். முடிவில் நம்மைத் தொட்டுப் பார்க்கிறான். நாம் அசையாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோமே தவிர, பேசவில்லை. அவனை அதட்டவில்லை. அப்பா நம்மைப் பார்க்கிறார், ஆனால் நம்மை ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்து நம்மிடம் வந்து நம் மடியில் ஏறி அமர்கிறான். நம் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கிறான். நாம் அசையவில்லை. முடிவில் தானாகத் தோய்ந்து படுத்து உறங்கிவிடுகிறான். நாம் ஒன்றும் சொல்லாமலே அவன் சேஷ்டைகள் நின்று விடுகின்றன, அவன் உறங்கிவிடுகிறான் இல்லையா?
இப்போது நம் மூலவிசரத்தை அந்தச் சிறுவனாகக் கொள்வோம். நாம் பிரிந்து நின்று இந்த "நான்" என்ற மூலவிசாரத்துடன் வேறு விசாரங்கள் எழாமல் அல்லது கலக்கமல் அதன் போக்கை கவனிப்போம். அந்தச் சிறுவனைப்போல் இந்த "நான்" அதன் இருப்பிடத்திற்குச் சென்று அடங்கிவிடும். நம் கவனம் மட்டும் அதை நோக்கியே இருக்க வேண்டும். அது தானாக ஓய்ந்து அடங்கிவிடும். இதைத்தான் "ஆத்ம விசாரம்" அல்லது "Meditation" என்று சொல்கிறோம். இது வெகு எளிதில் கைவரக்கூடிய சாதனை அல்ல. தொடர்ந்து பல நாள் கையாள வேண்டிய ஒரு மகத்தான சாதனையாகும். இப்படி "நான்" என்ற உணர்வு அடங்கிவிட்டால் அதாவது மூல விசாரமே இல்லையெனில் அங்கு மனம் இல்லை. காரணம் மனம் என்ற ஒன்று தனித்து இல்லை. தொடர்ச்சியாக வந்துபோகும் பலவாறான விசாரங்களின் சேர்க்கையே "மனம்" எனப்படும். முதல் விசாரமான "நான்" அடங்கிவிட்டால் மற்ற விசாரங்களுக்கு ஆதாரமில்லாமல் போய்விடும். ஆகையால் யாதொரு விசாரமும் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுது மனம் என்ற ஒன்றுக்கு இடமேது? அப்பொழுது அங்கு என்ன உள்ளது? எல்லாமாக ஒன்றாக உள்ளது. அதென்ன எல்லாமாக ஒன்றாக உள்ளது? அங்கு ஒன்றும் இல்லையே என வினவலாம். இதனை அடுத்த இதழில் பார்ப்போமாக.
"எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும்
அதற்கு ஈசன் கணேசன அருளல் வேண்டும்"
(அடுத்த மடலில் காண்போம்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













