மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

பாலாஜி

இணையப் பாட்டி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Sri Pandurangan - Rukmini Devi at Govindapuram - image courtesy: Sri Panduranga Bajanashram
அன்புக் குழந்தைகளே,

ஆடி மாதம் { ஜுலை 17- ஆகஸ்டு 17 வரை} வரும் ஏகாதசி மஹராஷ்டர மாநிலத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இரு பக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும், பெரிய பந்தல் போட்டுப் படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில், "பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா" என்றும், "விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்" என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்.

லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர் சாத்தகி, அவருக்குப் பல வருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன். எதைப் பார்த்தாலும் அழிப்பான், துன்புறுத்துவான், நாய் மேல் கல் வீசுவான், முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான். அவனுக்குத் திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணிப் புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை, வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான். அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன், "அப்பா, நான் என் இஷ்டப்படித் தான் இருப்பேன், இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமில்லை, ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப் போகிறேன்" என்று கத்தி, தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்து போனார்கள். பல நாடகள் கழிந்த பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள். ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள்.

Munivar - Artwork by mazalais kid
இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான். வழியில் அவன் மனைவி, தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்துத் தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன், "வாயை மூடிக்கொண்டு வா, அவர்கள் கிழங்கள் வந்தால் நமக்குத்தான் கஷ்டம்" என்றான் இரக்கமில்லாமல். அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது. அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார். பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான். ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய், " காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது?" என்று கேட்டான்.

"காசியா? எனக்குத் தெரியாதே" என்றார் முனிவர்.

"இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?

"காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும், நீ போக வேண்டும் என்கிறாயே?"

இதைக் கேட்டுக் கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான். இரவு நேரம் தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் ஆஸ்ரமத்துள் நுழைந்தனர். மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர். அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்த அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருவள் வீடு கூட்டினாள், மற்றொருவள் வீட்டைத் துப்புறத் துடைத்து அழகான கோலம் இட்டாள். பின் அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவித் துடைத்து வணங்கினார்கள். அதன்பின் அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம்! மூன்று பேர்களும் மிகவும் அழகாக, லட்சணமாக, சுந்தரிகளாக வந்தனர்.

"இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது?" என வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான், "சுந்தரிகளே ,நீங்கள் யார்? சொல்லுங்கள்" என்று கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான்.

அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறிப் பின் சொன்னாள், "நாங்கள் கங்கை, யமனை, ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவை செய்கிறோம். இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம். பாபம் எங்களிடம் சேர அவலட்சணமாக மாறுவோம். இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்மப் புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய், இனியாவதும் திருந்திப் பெற்றோருக்குச் சேவை செய், நீ இத்தனை நாட்கள் செய்த பாபத்தைப் போக்கிக் கொள். உன் துர்க்குணத்தை மாற்றிக் கொள், தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம், அவர்களை வணங்கு" என்றனர்.

புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான். தான் செய்த தவறுகளுக்கு வருந்தினான், பின் கங்கா தேவியிடம் கேட்டான், "இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படிப் பாவங்கள் விலகுகின்றன?"

"அப்பா புண்டரீகா, இவர் கோவிலுக்குப் போனதில்லை, யாகம் செய்ததில்லை, தான தருமம் செய்ததில்லை, ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வருகிறார். அவர்களே அவரின் தெயவம், பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும், பாபங்கள் கரைந்து போகும்" என்றாள் கங்கா தேவி.

"தாயே, நான் பெற்றோருக்குப் பல அநீதிகளை இழைத்து விட்டேன், இப்போது திருந்தி விட்டேன். இதோ இப்போதே போகிறேன், அவருக்கு மனம் உவந்து சேவை செய்வேன்" என்று கூறித் திரும்பி வந்து படுத்த பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக்கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான். பின் பெற்றோரைத் தேடிக் கண்ணிரால் அவர்கள் பாதங்களைக் கழுவினான். அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான். வேறு ஒரு சிந்தனையும் இல்லை, இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார், அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார், "புண்டரீகா, புண்டரீகா"

"யார்? யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள், நான் பெற்றோரின் சேவையில் ஈடு பட்டுள்ளேன்" என்று ஒரு செங்கல்லைக் கதவைத் திறந்து வீசிப் போட்டான், அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டார், அப்படியே நின்றிருந்தார். வெகு நேரம் கழித்துப் புண்டரீகன் கதவைத் திறந்தான், பார்த்தான் கண்ணனை, தன்னை மறந்தான், அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான்.

"இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்கல்லைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே"

புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன், எதாவது வரம் கேள்"

"உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி"

புண்டரீகா, உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனிப் பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும். நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய். உன்னை எல்லோரும் "விட்டல் "என்றும் அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள்" என்றார்.

ஆடி மாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.

என்ன குழந்தைகளே, பெரியவர்களின் சேவைக்கு ரெடிதானே?

அன்புடன்

அம்ம்ம்மா

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com