மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்பு குழந்தைகளே, நவராத்திரி எப்படி அம்பாளுக்குச் சிறப்போ, அதே போல் சிவராத்திரி சிவனுக்கு ஒரு மிகவும் சிறப்பான நாள். மாசி மாதத்தில் {பிப்ரவரி-மார்ச்) தேய்பிறைச் சதுர்த்தியில் இந்தப் புண்ணிய நாள் வருகிறது. மஹா சிவராத்திரி மிகவும் மகிமை நிரம்பிய நாள். இந்த நாளில் சிவனை இதயத்தில் பதித்து, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்துக் கொண்ட பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பல தடவைகள் ஜபித்து, இரவில் கண்விழித்து, மறுநாள் அடியார்களுக்கு உணவளித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவன் கோவிலுக்குப் போய் நெய் தீபம் வைப்பது வழக்கம். குழந்தைகளாக நீங்கள் என்ன செய்யலாம்? ஓம் நமசிவாய என்ற சிவனுக்கு உகந்த மந்திரத்தை மனதில் ஜபிக்கவும், பெற்றோர்களுடன் கோவில் சென்று சிவனுடைய அருள் பெற்றும் வரலாம், சிலர் இரவு கண் முழிக்கிறேன் என்று டி.வி. முன் உட்கார்ந்து சினிமாப் படங்களைப் பார்ப்பார்கள். அதில் ஒன்றும் பலன் கிட்டாது. நற்சிந்தனையுடன் நல்ல அறிவு தரும் புத்தகங்களைப் படிக்கலாம். இந்த சிவராத்திரியை அடைக்கலம் அளித்த இரவு என்றும் சொல்வார்கள். ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய, அதிலிருந்து மஹாலட்சுமி தோன்றினாள். பின்னர் அதிலிருந்து பல பொருட்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் மத்தின் கயிறாக இருந்த வாசுகி என்ற பாம்பு விஷம் கக்க அத்துடன் பாற்கடலின் நஞ்சும் சேர ஆலகால விஷம் ஆகி எல்லோரும் மயக்கமடைய ஆரம்பித்தனர். சிவபெருமன் இந்த நிலையைப் புரிந்து கொண்டு சுந்தரர் என்ற சிவத்தொண்டரை அந்த விஷம் எடுத்து வரும்படி தூது அனுப்பினார், தொண்டர் சுந்தரரும் அதை எடுத்து வந்தார். அதனால் அவர் பெயரும் ஆலால சுந்தரர் என்று ஆயிற்று. அந்தக் கடுமையான் விஷமான "ஆலாலத்தை" சிவன் விழுங்க, பார்வதி தேவி மனம் கலங்கி விஷம் கீழே இறங்காமல் இருக்க அவர் கழுத்தைப் பிடிக்க, அந்த இடம் நீலமாக சிவன், "நீலகண் டன்" ஆனார். கண்டம் என்றால் கழுத்து என்று அர்த்தம். சிவன் களைப்பாக இருப்பது போல் படுத்துக் கொண்டார். பார்வதியும் மற்ற பேர்களும் இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானைக் கவனித்துக் கொண்டார்கள். எல்லா உயிர்களையும் காக்க சிவன் ஆலாலத்தைச் சாப்பிட்ட நாள் இந்த சிவராத்திரி. இன்னொரு புராணக் கதை வேண்டுமா? கேளுங்கள்: "சுஸ்வரா" என்ற ஒரு வேடன் தினமும் வேட்டையாடி ஜீவித்து வந்தான். ஒரு நாள் வேட்டைக்குப் போனான், ஆனால் அன்று வெகு நேரமாகியும் ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. இருள் சூழ அரம்பித்தது. அப்போது ஒரு மான் வர, அதை அம்பு எய்து கொன்றான். பின் இரவு ஆரம்பித்து விட்டதால் வீடு போக முடியாமல் அந்த மானை மூட்டை கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டு, தானும் அதில் ஏறி அமர்ந்தான். பசியும் தாகமும் தாக்க ஆண்டவனின் பெயர் நாக்கில் வர, தன் மனைவி குழந்தைகள் பட்டினி கிடப்பார்களே என்று ஞாபகம் வர, அழத்தொடங்கினான். அவன் கண்ணீர் தாரை தாரையாக் கீழே சொட்டியது. பொழுதும் போகமல் இரவைக் கழிக்க அந்த மரத்தின் இலைகளை ஒன்று ஒன்றாகக் கொய்து கீழே போட அது ஒரு சிவலிங்கத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தது. காலை ஆனவுடன் அவன் மரத்திலிருந்து இறங்கி வீடு போய்ச் சேர்ந்தான். பல வருடங்கள் ஓடின. அவன் சாகும் நேரம் வந்தது. அப்போது சிவ தூதர்கள் அவன் முன் வந்து அவனை அழைத்துச் சென்றார்கள். சிவனைப் பார்த்ததும் அவன் மனம் நெகிழ்ந்து, எனக்கா இந்தப் பதவி, நான் மகா பாபி ஆயிற்றே?" என்றான். அதற்கு சிவ பெருமான், "வேடனே, நீ உண்மை அறியாது சிவராத்திரி அன்று எனக்கு வில்வ இலையால் அர்ச்சித்து விட்டாய், தவிர உண் கண்ணீர் என் மேல் நீர் போல் விழுந்து அபிஷேகம் செய்து விட்டது, தவிர இரவு முழுதும் கண்விழித்துப் பட்டினியுடன் இருந்திருக்கிறாய். அதுதான் இந்தப் பெருமைக்குரிய இடம் கிடைத்திருக்கிறது" என்றார். அதற்கு மறு ஜனமத்தில் அவன் சித்ர பானு என்ற அரசனாகப் பிறந்து சிவனுக்குத் தொண்டு செய்தான். அன்புக் குழந்தைகளே, தெரியாது செய்த இந்தப் பூசைக்கே இந்தப் பலன் என்றால் தெரிந்து மனம் பொருந்திச் செய்யும் பூஜைக்கு எத்தனை பலன் உண்டு என்று சற்று எண்ணிப் பாருங்கள். ஓம் நமசிவாய!
பாலாவதம் ரதன் கிரீடம் பாலநேத்ரார்சிஷா தகத பஞ்சேஷூ கீடம் அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |