சத்சங்கம் - இணையப் பாட்டி
நீங்கள் நல்ல நண்பர்களுடன் நட்புக்கொள்ள வேண்டும். சத்சங்கம் எனும் கூட்டத்திற்குப் போய் நல்ல அறிவுரைகளைப் பெற்று, பெற்றோர்களுக்குப் பெருமைச் சேர்க்கும் மாணவ மாணவிகளாக ஆக வேண்டும். சத்சங்கப் பெருமைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்:
ஒரு சமயம் நாரதர் கண்ணனைச் சந்தித்தார், அவரை வணங்கினார், பின் கேட்டார், "கண்ணா, எனக்கு ஒரு விடை தெரிய வேண்டும். சத்சங்கத்தினால் என்ன பலன்? எனக்கு விளக்கமாக பதில் அளிப்பீர்களா?" என்று. கண்ணன் புன்முறுவல் பூத்தார், பின் மௌனம் சாதித்தார், சற்று யோசனையில் ஆழந்தார், பின் சொன்னார், "நாரதரே, நீங்கள் அனுபவப் பூர்வமாக இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்".
"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
"நேராகக் கிழக்கு திசையை நோக்கிச் செல்லுங்கள், அங்கு ஒரு குப்பைமேடு வரும், அதிலிருந்து ஒரு புழு வரும், அதனிடம் இதைக் கேளுங்கள்"
"நன்றி பரந்தாமா" நாரதர் பதிலளித்துவிட்டுக் கிழக்கு திசையை நோக்கி நடந்தார். கண்ணன் சொன்னபடியே குப்பை மேட்டைக் கண்டார். அதிலிருந்து ஒரு புழு ஊர்ந்து மேலே வந்தது. "புழுவே, சத்சங்கத்தின் பலன் என்ன? எனக்குச் சொல்வாயா?" என்று கேட்டார்.
புழு கேட்டபின் இங்கும் அங்கும் நகர்ந்து துடித்தது, பின் இறந்தது. நாரதருக்கு ஒரே வருத்தம், இது என்ன? கேள்வி கேட்டவுடனேயே இறந்து விட்டதே என்று. வாடிய முகத்துடன் கண்ணனிடம் போனார், விஷயத்தைச் சொன்னார்.
"ஓ அப்படியா, சரி நான் சொல்வது போல் செய்யுங்கள். நேராக வடக்கு நோக்கிச் செல்லுங்கள், அங்கு ஒரு கோயிலைக் காண்பீர்கள், அது மிகவும் புராதனமான கோயில். அதன் மேல் இருக்கும் கோபுரத்தில் ஒரு புறாவைப் பார்ப்பீர்கள், அதனிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்."
நாரதரும் வடக்கு நோக்கி நடந்தார், கோயில் கோபுரத்தைப் பார்த்து வணங்கினார், அங்கு புறாவையும் பார்த்தார். மனதில் மகிழ்ச்சியுடன், "புறாவே, சத்சங்கத்தின் பலன் என்ன?" என்று கேட்டார். புறா இதைக் கேட்ட மாத்திரத்தில் இறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது, பின் உயிரை விட்டது. நாரதருக்கு ஒரே அதிர்ச்சி. இது என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டதும் புறாவும் இறந்து விட்டதே! என்னால் இரண்டு உயிர்கள் போயினவே என நாரதரின் உள்ளம் உருகியது. திரும்பவும் பரந்தாமனிடம் சென்றார். வருத்தத்துடன் தொண்டை அடைக்க நடந்ததைச் சொன்னார்.
"அப்படியா நடந்தது?" கண்ணன் புன்னகை புரிந்தார். அவருக்குத் தெரியாததா? பின் சொன்னார், "நாரதரே, நேராக தெற்கு திசையில் போங்கள். அங்கு ஒரு அரசனுக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்."
நாரதர் மனதில் பல எண்ணங்கள் உண்டாயிற்று, "அப்பப்பா, அந்தக் குழந்தையிடம் கேட்டு அதுவும் இறந்து போனால் அரசன் என்னைக் கைது செய்வான், பின் எனக்கும் தண்டனை கிடைக்கும்." என நினைத்தார்.
இந்த எண்ண ஓட்டங்களைப் புரிந்துக்கொண்டு கண்ணன், "நாரதரே, இங்கு ஒரு விதமான அசம்பாவிதமும் நடக்காது, உறுதியாகச் சொல்ல்கிறேன்" என்றார்.
நாரதரும் தெற்கு திசையில் நடந்து, பின் பெரிய மாளிகையைக் கண்டார். உள்ளே நுழைந்தார். தொட்டிலில் கிடந்த பாலகனைப் பார்த்துக் கேட்டார், "குழந்தாய் சத்சங்கத்தின் பலன் என்ன?" அப்போது ஒரு அதிசயம் நடந்தது. தொட்டிலிலிருந்து பாலகன் கீழே இறங்கினான், ஒரு தேவ குமாரன் ஆனார். நாரதரை பக்தியோடு வணங்கினார். நாரத முனிவருக்கு ஒரே வியப்பு. வாயிலிருந்து பேச்சே வரவில்லை.
தேவகுமாரன் சொன்னார், "பிரபோ, குப்பைமேட்டு சாணிப் புழு நான் தான். உங்கள் வரவாலும் பேச்சாலும் நான் புழு ஜன்மம் நீக்கி புறா ஜன்மம் எடுத்தேன். திரும்பவும் உங்கள் வரவினால் அருள் பெற்றுப் புறாவின் வாழ்வு முடிந்து ஒரு அரசனுக்கு ராஜகுமாரனானேன். குழந்தையாகப் பிறந்தேன். ,திரும்பவும் மஹாமுனியாகிய உங்கள் வரவாலும் குரலாலும் நான் தன்யனாகி தேவகுமாரன் ஆகிவிட்டேன். என்னே சத்சங்கத்தின் பலன்! புழுவிலிருந்து புறா, பின் அரசகுமாரன், தேவகுமாரன் என்று படிப்படியாக சத்சங்கம் என்னை உயர்த்திவிட்டது. வணங்குகிறேன் முனிவரே" என்று கூறி பறந்து தேவலோகம் சென்று விட்டான். நாரதருக்குத் தன் கேள்விக்கு விடை கிடைத்தது. மிகத் திருப்தியுடன் திரும்பினார்.
அன்புடன் அம்மம்மா







Your Feedback








