பரீக்ஷை கால உணாவு
இணையப் பாட்டி
பரீட்சை நேரத்தில் நீங்கள் உணவு உண்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறாமல் கலையில் சாப்பிட வேண்டும். மூளையைத் தூண்டும் உணவாக இருக்க வேண்டும், புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட் கொண்டதாக இருக்க வேண்டும். காலை நேர உணவு இடியாப்பம், இட்லி, ஓட்ஸ், கார்ன்பேளேக்ஸ் போன்றவை இருக்கலாம். உணவில் கண்டிப்பாக ஒரு பழம் சேர்க்க வேண்டும். வாழைப்பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், பப்பாளி போன்றவை இருக்கலாம், எண்ணெய் பணடங்கள் தவிர்க்க வேண்டும். எந்தப் பதார்த்தத்திலும் புரதம் அதிகமாகவும் மாவுசத்து குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
நெய் அதிகமானால் ஜீரணிப்பது கஷ்டம், அதனால் தூக்கமும் வரலாம். மத்தியான உணவுக்கு சப்பாத்தி கலந்த சாத வகைகள், வேகவைத்த கறிகாய்கள் நல்லது, தவிர ஒரு சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட் நிச்சயமாக சேர்க்க வேண்டும். புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கறிவேப்பிலை துவையல் சேர்க்க மிக நல்லது. கீரை அவசியம் வேண்டும். வெட்டின பழங்கள் கன்றிப்போன கொய்யாப்பழம் போன்றவை பள்ளி வாசலில் ஒரு வண்டியில் மசாலா தடவித் தருவான். அதன் கிட்டேயே போகாதீர்கள். அதே போல் குச்சி ஐஸ், மற்ற கரும்புச்சாறு திறந்த வெளியில் விற்பதைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல, அதில் கலக்கும் தண்ணீர் சுத்தமாக இராது. அசுத்தத் தண்ணிரிலிருந்துதான் டைபாய்டு நோய் வருகிறது. படுக்கும் முன் சூடான பாலோ காம்ப்ளானோ அருந்தவும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சம்பழம் ஜூஸ் வெயிலுக்கு மிக நல்லது. கீரை வகைகளில் வெந்தையக்கீரை, கரிசலாங்கண்ணி, வல்லாரை போன்றவை மிக நல்லது.
வல்லாரை ஞபகச் சகதியை அதிகரிக்க உதவும். கரிசலாங்கண்ணி கண்ணிற்கு மிகவும் நல்லது. வெந்தயக்கீரை நோய் எதிர்ப்புசக்தி வளர்க்கும். பரீட்சை நேரத்தில் தேங்காய்ப்பால் சேர்க்கக் கூடாது. "செரடோன்" எனபது அதில் நிறைய இருக்கிறது. அது ஆழ்ந்த தூக்கம் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் பழ ஜூஸோ நிறைய தண்ணீரோ குடிக்க வேண்டும். சிப்ஸ், பகோடா, பஜ்ஜி, வறுத்த தின்பண்டங்கள் இந்த நேரத்தில் அறவே வேண்டாம். டென்ஷனினால் ஜீரணம் ஆகாது. காய்ச்சிய நீரைப் பருகுங்கள். அல்லது கேனில் சுத்தப்படுத்தி வரும் தண்ணிரையே குடியுங்கள். மைதா மாவு கலந்த இனிப்பு வேண்டாமே. பிட்சா விரைவு உணவு, பர்கர் போன்றவைகளும் தவிர்க்க வேண்டும். தின்பதற்கு அருமையான ருசிதான், ஆனால் உடல் நலம் பரீட்சை நேரத்தில் முக்கியம் அல்லவா?. ஆகையால் ஒரு பத்து நாடகள் தேர்வு முடியும் வரை நான் சொன்னபடி உணவை உட்கொண்டு நல்ல தெம்புடன் டென்ஷன் இல்லாமல் பரீட்சை எழுதி வெற்றியுடன் வாருங்கள்.
அன்பு குழந்தைகளே உங்கள் யாவருக்கும் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் விசாலம்





Your Feedback








