மலரின் மேவு திருவே -
இணையப் பாட்டி
அன்புக் குழந்தைகளே,
பாண்டிச்சேரியில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கும் அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21ம் தேதி. அன்னை பாரிஸில் பிறந்தார், ஆனால் அவர் வந்து தங்கிய இடமோ பாண்டிச்சேரி. அவர் ஒரு அவதார நாயகி, அவரது தாய் அவருக்குச் சிறந்த நற்பண்புகளை ஊட்டி வளர்த்தார். அவர் தன் மகளிடம் சொல்வது, "வாழ்க்கை அனுபவிக்க மட்டும் நமக்குக் கொடுக்கப்படவில்லை, நாம் செய்ய வேண்டியவை பல உள்ளன. அவற்றைச் சிறப்பாகச் செய்யவே நாம் பூமியிலிருக்கிறோம்". ஆசைகளைப் புறக்கணிக்கக் காரணமாய் இருதவர் அன்னையின் தாயார். அன்னையின் பெயர் மிர்ரா. தமிழ்நாட்டில் அவர் மீராம்பிகா ஆகிவிட்டார்.
அன்னைக்கு ஐந்து வயதான முதல் அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் மின்னிக்கொண்டிருந்ததாம். அது பன்னிரண்டு ஒளிப் பந்துகள் போன்று தலையில் கிரீடமாக எப்போதும் பிரகாசித்தனவாம். அன்னை சிறு வயதிலேயே கீதை படித்து மகிழ்ந்தார். அதில் வரும் கண்ணனைக் காண ஆசைப்பட்டார். பின்னர் அவர் இந்தியா வந்து மகரிஷி அரவிந்தரைப் பார்த்து வணங்கியவுடன் அவர் கண்டது ஸ்ரீ கிருஷ்ணனை. ஸ்ரீ அரவிந்தர் அவருக்குக் கண்ணனாகவே காட்சி அளித்தார். சிறு வயதில் அவர் படிக்கும் போது நடுநடுவே தியான நிலைக்குப் போய்விடுவார். பாதி சமைக்கும் போதும் பாதி சாப்பிடும் போதும் சமாதி நிலைக்குப் போய்விடுவார், அதாவது அவருக்குத் தன் ஞாபகமே இருக்காது. அந்த இறைச் சக்தியிடம் ஒன்றிவிடுவார் சிறு வயதிலிருந்தே அவரிடம் ஒரு தெய்வீக சக்தி குடி கொண்டிருந்தது. அதை அவர் நன்றாக உணர்ந்தார்.
ஒரு சமயம் அவர் ஒரு சலையைத் தாண்டினார். பாதி சாலையைத் தாண்டியவுடன் திடீரென்று அவருக்கு தியான நிலை வந்து விட்டது. அப்படியே நின்றுவிட்டார். பச்சை விளக்கு வர, பல வண்டிகள் ஓட ஆரம்பித்தன. அன்னையின் அருகிலே ஒரு பெரிய பஸ் வந்துவிட்டது. அப்போது யாரோ ஒருவர் அவரை ஒரு பக்கமாக இழுத்து பல அடி தூரம் வீசிப் போட்டதையும், ஆனால் உடலில் காயம் ஒன்றும் படவில்லை என்றும் உணர்ந்தார். பஸ் கண்டக்டர் திட்டியவுடன் தான் அவர் தியானத்திலிருந்து மீண்டார். தன்னிடம் ஒரு சக்தி இருப்பதையும் உணர்ந்தார்.
அன்னைக்குப் பூக்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் பூக்களுடன் பேசுவார். பூக்களுக்குத் தனித்தனியாக குணம் உண்டு என்கிறார். பொறுமை இல்லையா? அன்னையே எனக்குப் பொறுமையைக் கொடு என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு மகிழம்பூ வைக்க வேண்டும் பாதுகாப்பு வேண்டும் என்றால் காகிதப்பூ படைக்க வேண்டும். தூய்மையான் மனம் வேண்டும் என்றால் நந்தியாவட்டை மலர் வைக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் வேண்டுமா? நாகலிங்கப்பூ வைக்க வேண்டும். உடல் நலமாகப் பூவரசம்பு வைக்க வேண்டும். உடலில், மனதில் சக்தி தேவை என்றால் சாமந்திப் பூ படைக்க வேண்டும். சண்டை இல்லாமல் சுமுகம் வேண்டுமா? கொடி ரோஸ் வையுங்கள். முன்னேற்றம் காண நித்திய கல்யாணியால் பிரார்த்தியுங்கள்.
அன்னையின் அருள் மொழிகள்
"தெய்வீக சக்தியின் கருணைய மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும். அப்போது நிலையான அற்புதங்களைக் அது நடத்தும்".
"மனிதன் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் முழுவதும் இடையறாது கல்வி பயில வேண்டும். உடல், பிராணன், மனம், ஆன்மா போன்ற எல்லா அங்கங்களுக்கும் பயிற்சி அளிக்க அதுவே பூரண கல்வி எனலாம்".
"இறைச்சக்தியைப் பற்றி மட்டுமே நினை. அது உன்னுடன் இருக்கும்".
அன்னையை வணங்கி அவரது அருளைப் பெறுவோம்.
அவரைப் பற்றிப் பின்னர் நிறைய எழுதுகிறேன்.
அன்புடன் அம்மம்மா



Your Feedback









