ஷீரடியின் சாயி
இணையப் பாட்டி
விஜயதசமி
விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும் பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும். நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் "சாவடி ஊர்வலம்" என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக் காட்சியைக் காண மிகவும் நன்மைப் பயக்கும். ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடக்கிறது. சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும், முஸ்லிம்களும், மற்ற எல்லா மதப் பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர். ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன் நடைபெறுகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம். பிரசாதமும் எல்லாவித உணவும் கலந்த ஒன்று. சீரடி பாபா ஒரு ஜோலிப்பையில் எல்லோரும் கொடுக்கும் உணவைச் சேகரித்து, பின் அதைக் கலந்து எல்லோருக்கும் வினியோகித்து, பின் காக்கை, குருவி, நாய், பூனை போன்றவைகளுக்கும் போட்டு, பின் அவர் சாப்பிடுவாராம். இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமையான ஒன்று. ஷீரடிக்குள் முதன் முதலாக அவர் நுழைந்தபோது அவர் சீதனம் ஒரு செங்கல்லும் இரண்டு சாக்குகளும்தான். "சாயி" என்றால் கூட வாழும் இறைவன்" என்று பொருள் கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம், "அல்லா மாலிக்". பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவின் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்.பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கல்லை ஒரு பழைய துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார். அவருக்கு உதவ ஒரு குட்டிப் பையன், பாபா கூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டி அந்த இடத்தைக் கூட்டுவான். அவர் இறக்கும் சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும் போது குப்பை செங்கல்லில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கல்லை ஒரு துணியில் சுற்றத் தூக்கினான ஆனால் அது கை தவறிக் கீழே விழுந்து இரண்டாகி விட்டது. மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான். பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார், செங்கல் உடைந்ததைக் கண்டார், அந்தச் செங்கல்லில் தலை வைக்க, புதுப்புது சிந்தனைகளும் ஞானமும் பூககளாக மலருவது அவருக்குத்தான் தெரியும். அது உடைந்தது அவருக்குத் தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது. அந்த மரணமும் அவர் தன் பக்தனின் ஆயுள் முடிவைக் காப்பாற்றத் தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார். போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்!
திரு ராமசந்திர படேல் என்பவர் மிகவும் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் எப்போதும் சீரடி நாம ஸ்மரணையில் இருந்தார். கடைசிக்காலம் போல் நாடித் துடிப்பு குறைய ஆரம்பித்தது. ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். அப்போது சீரடி பாபா தலைப் பக்கம் வந்து நின்றார். ராமசந்திர படேல் கேட்கிறார், "பாபா எனக்கு வலி தாங்க முடியவில்லை. எனக்கு எப்போது மரணம் வரும்?"
"நீ பிழைத்து விடுவாய், ஆனால் தாத்யா படேல் உடல் நலம் குன்றி விஜயதசமி அன்று மரணமடைவார். இதை ஒருவரிடம் தெரிவிக்காதே, முக்கியமாக தாத்யாபடேலுக்குத் தெரிவிக்காதே, அவர் இதை நினைத்து நினைத்தே பயத்தில் உடல் இன்னும் மோசமாகிவிடும்"
பாபா இதைச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். சில தினங்களுக்குள் தாத்யாபடேல் சுரத்தில் மிக மோசமான நிலையை அடைந்தார். விஜயதசமியும் நெருங்கியது. ஆனால் அவர் சதா சர்வ காலமும் பாபாவையே நினைத்து அசைக்க முடியாத நம்பிக்கையில், "பாபா என்னைக் காப்பாற்றி விடுவார்" என்று சொல்லி வந்தார். அப்போதுதான் ஒரு திடீர்த் திருப்பம். அன்பே தெய்வமாக வந்த பாபா அவரின் உடல் நிலையைத் தான் பெற்றுக் கொண்டார், அவரைப் பிழைக்க வைத்து விட்டார். தாத்யா படேலின் நம்பிக்கை வீண் போகலாமா? பாபா தன் முடிவை விஜயதசமி அன்று தீர்மானித்துக் கொண்டார். அதனால் பாபாவுக்கு உடல் தளர்ச்சி ஏற்பட்டது, ஆனால் விஜயதசமி அன்று மிகவும் சுறுசுறுப்பாக எழுந்து உடக்கார்ந்திருந்தார். எல்லோருமே பாபா நம்மிடையே பல வருடங்கள் இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர், மகிழ்ந்தனர். ஆனால் அவருக்குத் தெரிந்தது தன் முடிவு நெருங்கி விட்டது என்று.
கடைசியாக பக்தை ஸ்ரீ லட்சுமிபாய் சிண்டேயைக் கூப்பிட்டார், பின் அவளுக்கு ரூபாய் ஒன்பது வழங்கினார், பின் எல்லாச் சீடர்களையும் பகதர்களையும் அனுப்பி விட்டார். திரு காகா சாஹேபிற்கும் பாபூ சாஹேப் பூட்டிக்கும் அவரை விட்டுப் போக விருப்பமில்லை. ஆனாலும் அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டனர். மஸ்ஜித்திற்குச் சென்றனர். பாபாவின் வருகையை எதிர்ப்பார்த்துத் தங்கினர். பையாஜி மட்டும் அவருடன் இருந்தார். பாபாவின் முச்சு வாங்க பையாஜியின் மேல சாய்ந்து கொண்டார். பாகோஜி என்பவர் இதைப் பார்த்த மாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒடோடி வந்தார். அவர் வாயில் தந்தார், ஆனால் தண்ணீர் வெளியே வழிந்தது. "ஓ தேவா" என்ற அலறல் அவர் வாயிலிருந்து வந்தது "ஹா" என்றார் பாபா. பின் நிசப்தம் தான், ஒரு சலனமும் இல்லை. அசைந்த உயிர் சமாதி நிலையை அடைந்தது. ஒரு வேப்ப மரமே அவரது மாளிகையாக இருந்தது. அவர் உடையில் பட்டும் பிதாமபரமும் இல்லை. ஒரு கிழிந்த வேஷ்டியும் ஒரு அழுக்குத் துண்டும் தான் அலங்கரித்தன. அவர் உணவோ எல்லோரிடத்திலும் கேட்டு, பின் அதை ஒன்றாக்கியக் கதம்பம். எத்தனை எளிமையான வாழ்க்கை.
பாபா கோடானுகோடி மக்களுக்கு இன்று சொந்தம். அனபு, சிரத்தை, பொறுமை என்ற கொள்கைகள் அவரின் வேதவாக்கு. விஜயதசமி அன்று சாவடியிலிருந்து துவாரகாமாயிக்கு பக்தர்கள் பாபாவை ஒரு பல்லக்கில் அலங்கரித்து, ஆர்ப்பாட்டத்துடன் வண்ணங்கள் தூவி, வாத்தியங்கள் டோல் முழங்க, பல நிகழ்ச்சிகளுடன், கதாகாலட்சேபத்துடன் அழைத்துச் செல்வார்கள். பாபாவின் படம் தாங்கிய பல்லக்கை ஒரு அழகிய குதிரை சுமந்து செல்லும். அதன் பேர் "ஷ்யாம் சுந்தர்". பாபாவின் தலைக்கு மேல் பின்னல் வேலைகள் செய்த வண்ணக்குடை.
இந்த ஊர்வகத்தைப் பார்க்க பகதர்கள் கூட்டம் அலைமோதும். அவர் சமாதியில் இருந்தாலும் இன்றும் அவர் உயிருடன் இருக்கிறார். எல்லோரையும் அருள் பாலித்து வருகிறார். நம்பினால் கேடபது கிடைக்கிறது, மனம் அமைதி அடைகிறது. அவர் ஹிந்து கோவிலிலும் இருந்தார், மஸ்ஜித்திலும் இருந்தார். ஹோமமும் செய்தார், குர்ரானும் படித்தார் அவருக்கென்று தனி மதம் கிடையாது. இன்றும் பலதரப்பட்ட மதத்தினர் அங்குத் திரள் திரளாகச் சென்று அருள் பெற்றுப் பயனடைவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். என் வாழ்க்கையிலேயே ஏற்றம் அவரால் ஏற்பட்டிருக்கிறது.
"சாயி ஸச்சரிதா" படித்துப் பயன் அடையுங்கள். ஒரு வியாழனன்று ஆரம்பித்து மறு புதனில் முடித்து, பின் மறுதினம் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும். ஒன்று, மனதில் நேர்ந்து கொண்டும் இதைச் செய்யலாம் அல்லது லோகத்தின் சுபீட்சத்திற்கும் இதைப் படிக்கலாம். இதை என்னை எழுத வைத்த சீரடி சாயிநாத்திற்கு நன்றியுடன் பலகோடி வண்க்கங்கள்.
ஓம் சீரடி சாயி நாத்திற்கு ஜெய்!
அன்புடன்
அம்ம்ம்மா
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














