அன்புக் குழந்தைகளே,
என் ஆசிகள். கார்த்திகைத் திருநாளுக்கு அம்மா அகல் விளக்குகள் எல்லாம் சுத்தம் செய்து தயாராக வைத்து, பொரி உருண்டைகளும் பிடித்து அப்பத்துடன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள், இல்லையா? இப்போது அந்தத் திருநாளைப் பற்றிச் சொல்லப்போகிறேன். கார்த்திகைத் திருநாள் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாள். இதில் முருகப்பெருமான், சிவன், பார்வதி, துர்க்கையும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இப்போது சிவனைப் பற்றி ஒரு கதை கேளுங்கள்.
ஒருசமயம் பிரும்மா, "நான் தானே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன். நான் சிருஷ்டி செய்யாவிட்டால் இந்த பிரும்மாண்டமான உலகமே இருக்காது, அதனால் நான் தான் பெரியவன்" என்று கர்வம் பிடித்து எதற்கும் மஹாவிஷ்ணுவிடம் இதைப் பற்றிக் கேட்போம் என்று விஷ்ணுவிடம் சென்றார், விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார். பிரும்மாவைப் பார்த்து வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டார், பிரும்மா விஷயத்தைச் சொல்லி, "இப்போது சொல், நான் தானே,
படைக்கிறேன், நான் தானே உயர்ந்தவன்?" என்றார்.
அதற்கு விஷ்ணு பகவான், "ஒ பிரும்மா, படைத்தால் மட்டும் போதாது, காக்கவும் வேண்டும். நான் எல்லோரையும் காக்கிறேன், அதனால் நான் தான் பெரியவன்." என்றார். வாக்குவாதம் அதிகமாக, இருவரும் சிவனிடம் கேட்போம் என்று முடிவு செய்து சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தனர், இரு தரப்பிலிருந்தும் எல்லாம் கேட்ட பிறகு ஒரு பரீட்சை வைத்தார். "யார் என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து என்னிடம் சொல்லுகிறாரோ அவர்தான் பெரியவர் உயர்ந்தவர்" என்றார். இதைப் பற்றி அறிய இருவருமே ஆவலாக இருந்தனர். மிகவும் எளிதான காரியம் என்று எண்ணி ஒத்துக் கொண்டனர். அப்போது சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய் லிங்க வடிவில் தோன்றினார். பிரும்மா அன்னப் பறவையாக மாறினார். விஷ்ணு வராக, அதாவது பன்றி உருவம் எடுத்துக் கொண்டார். அன்னப் பறவையான பிரும்மா ஆகாயத்தில் உயரப் பறந்து முடியைத் தேடித் தேடி அலைந்தார், பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்துக் களைத்துப் போனார். அப்போது அங்கு சிவபெருமானின் சடாமுடியிலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பார்த்தார். "தாழம்பூவே, எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும்,
நான் சிவனது முடியைப் பார்த்ததாக ஒரு சின்னப் பொய் சொல்ல வேண்டும்." என்றார். தாழம்பூவும் சரி என்று ஒத்துக் கொண்டது. விஷ்ணுவோ பன்றி
ரூபத்தில் பூமியைக் குடைந்து மிகவும் ஆழமாகச் சென்று அடியைத் தேடினார். அவருக்கும் அடி தென்படவில்லை. இனித் தேட முடியாது என்று களைத்து அவரும்
திரும்பி வந்து விட்டார். இருவரும் சிவனிடம் திரும்பி வந்தனர். விஷ்னு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் பிரம்மா சிவன் முடியைக் கண்டதாகப் பொய்யுரைக்க, தாழம்பூவும் பொய்சாட்சி சொன்னது. அபோது சிவன் தன் உன்மையான ரூபத்தைச் சூரிய சந்தரனுடன், மூன்று கண்களுடன், அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன் திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். "நாம் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று காரியங்களுக்காக என்னால் உண்டாக்கப்பட்டோம். நாம் மூவரும் உலகத்திற்கு முக்கியமானவர்கள் தான்." என்றார். பின்னர் பொய் சொன்னதால் பிரும்மாவுக்கு ஒரு கோவிலும் இருக்கக்கூடாது என்றும் தாழம்பூவை சிவபூஜைக்கு சேர்ப்பதில்லை என்றும் கோபத்தில் கூறினார். இந்தக் கதையிலிருந்து கர்வம் கொள்ளாதே, பணிவாக இரு, பொய் சொல்லாதே, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொள்ளாதே என்ற பாடம் கற்றுக்கொண்டோம் இல்லையா? கதை நன்றாக இருந்ததா குழந்தைகளே?
இப்போது திருவண்ணாமலையில் கார்த்திகை பற்றி ஒரு கவிதை பாடலாமா?