என்னைப் பற்றி
தமிழ்த் தேனீ
அன்பு நண்பர்களே,
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர். லுகாஸ் டீ.வீ.எஸ். நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன். தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞன். தொலைக்காட்சிகளில், பல தமிழ் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருப்பவன். 14 நாடகங்கள் எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை வென்றவன். என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தி - ராடன் நிறுவன தொடர், அதில் மேனேஜர் சாரங்கனாக நடித்தவன். சமீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம். படங்கள்:சாமி, ஆறு, திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜி (இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜர்) தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக பல கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள், கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெயர் தமிழ்த்தேனீ. "ஆன்மீகம் எனது ஆணி வேர்". "மனிதம் என்பது என்னுடைய நோக்கம்".
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தைகள் உணர்த்தாது என்பது என் எண்ணம், ஆனால் சில நேரங்களில் வார்த்தைகள் தான் உணர்த்துகின்றன என்பது நிதர்சனம்,
நான் என்னுடைய 20வது வயதிலிருந்து நடிப்பு, நாடகம் எழுதுதல், இயக்குதல், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுதல், பாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், புகைப்படம் எடுத்தல் போன்ற பலவகை கலைகளில் ஈடு பட்டு வருகிறேன். இவை அனைத்துக்கும் காரண கர்த்தா என்னுடைய தாயார் ஆர். கமலம்மாள் அவர்கள் எனக்களித்த உக்கமும், அறிவுறுத்துதலுமே. என் தாயார் ஆர். கமலம்மாள் அவர்களும் ஒரு எழுத்தாளர். அவர்கள் எழுதிய பல கதைகள், கவிதைகள் முன்னாட்களில் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவர்கள் எழுதிய கிருஷ்ண தீர்த்தம் என்னும் சிறுகதை அமுதசுரபி ஜன்கல்யாண் அமைப்பு, மற்றும், பாரத ஸ்டேட் வங்கி மூவரும் இணைந்து நடத்திய கதைப் போட்டியில் முதற்பரிசு பெற்று உயர் திரு சங்கராச்சாரியார் அவர்களால் தங்கக் காசு பெற்று கௌரவிக்கப்பட்டது.
நானும் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டும் இருக்கிறேன். என்னுடைய தாயார் கமலம்மாள் அவர்கள் பல பாடல்களை எழுதி இருக்கிறார்கள். அவைகளில் 9 பாடல்கள் திருமதி பம்பாய் சகோதரிகளால் பாடப்பட்டு, "தெய்வீகப் பாமாலை" என்னும் பெயரில் ஒலிநாடாவாக வெளிவந்தது. நான் தமிழ்த்தேனீ என்னும் பெயரில் பல இணையப் பகுதிகளிலும் இணையப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறேன். எக்ஸ்னோரா என்னும் அமைப்பில் பொதுப்பணி செய்து வருகிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையில் மரபு அணிலாக தமிழ், மற்றும் நாடகம் இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
மழலைகள்.காம் இணைய தளத்தில் தேனீமாமா என்னும் பெயரில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறேன். நான் நடித்த திரைப்படங்கள்: நாலு பேருக்கு நன்றி, தமிழன், திருட்டுப்பயலே, அன்பே சிவம், ஆறு, சாமி, ரமணா, அது ஒரு கனாக் காலம், ஆசை ஆசையாய், சிவாஜீ இன்னும் பல.
நடித்த தொலைத்தொடர்கள்:
சித்தீ, வாழ்க்கை, கிருஷ்ணதாசி, நம்பிக்கை, கங்கா யமுனா சரஸ்வதி, கதைகதையாம் காரணமாம், ஒரு கதையின் கதை, வைதேஹி, குபேரன், அச்சம் மடம் நாணம், கதிரவன், அண்ணாமலை, விசாலம், ஆர்த்தீ, கீதாஞ்ஜலி, கோலங்கள், ஆனந்தம், மற்றும் பல.
இவை அனைத்தையும் என்னுள் இருந்து இயக்கும், என் தாயார் ஆர். கமலம்மாள் அவர்களுக்கும், என்னை சரியாக வழிநடத்திய என் தந்தையார், என் குரு, என் தெய்வங்கள் அனைவருக்கும் காணிக்கையாக்குகின்றேன்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













