தாயென்று கும்பிடடி பாப்பா
- அமெரிக்கா - 23
கீதா சாம்பசிவம்
என்றாலும் லிங்கனின் சொந்தக் கட்சியினருக்கு இதில் அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஆனால் லிங்கன் தனது வாக்குவன்மையால் கட்சியினரை அரவணைத்துக் கொண்டு அவர்களைத் தன் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டார். 1861-ம் ஆண்டு ஒரு முக்கியமான அலுவலகக் கூட்டத்தின்போது இந்த உள்நாட்டுச் சண்டை பற்றியும், அதன் காரணங்கள் பற்றியும் தெளிவானதொரு அறிக்கையைக் கொடுத்து அனைத்துத் தரப்பினரையும் இதற்குச் சம்மதிக்க வைத்தார். மேலும் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் கொடுத்த சொற்பொழிவில், கறுப்பின மக்களின் விடுதலைக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்றும், இந்த அரசு மக்களுக்காக, மக்களால் ஆளப்படும், மக்களின் அரசாகவே இருக்கும் என்ற உறுதியையும் கொடுத்தார். லிங்கனின் இந்த கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு இன்றளவும் பிரபலமான ஒன்று. ஆனால் தென் மாநில மக்கள் வடமாநிலங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்பதை அவர்களுக்கு நேர்ந்த அவமானமாக உணர்ந்தனர். மேலும் அடிமைகளை ஒழிப்பதிலும் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. தங்கள் பண்ணைகளுக்குத் தேவையான வேலையாட்கள் கிடைப்பதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து கொண்டும், பெருவாரியான உணவு உற்பத்தி தென் மாநிலங்களிலேயே செய்யப் படுகிறது என்ற நம்பிக்கையிலும், அவர்கள் தாங்களே ஜெயிப்போம் என்றும் தாங்களே தலைமைப் பொறுப்பையும் வகிக்க முடியும் என உறுதியாக நம்பினார்கள். தென்பகுதி மக்கள் தனியாகப் பிரிந்து செல்ல முடிவும் கட்டிவிட்டார்கள். அதற்கான முதல் வித்து தென் கரோலினா மாநிலத்தில் சார்லெஸ்டான் என்னும் ஊரில் நடந்த ஒரு மாநாட்டில், “தென் கரோலினாவும், மற்ற தென் மாநிலங்களும், “அமெரிக்க யூனியனில்” இருந்து பிரிகின்றன. அமெரிக்க யூனியன் என்பது இனி இல்லை. அது கலைக்கப் பட்டுவிட்டது. ஏற்கெனவே செய்யப் பட்ட உடன்படிக்கையின்படி யூனியனில் இருந்து மாநிலங்கள் தங்கள் உரிமைகளைக் காக்கப் பிரியலாம். மேலும் அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு அதிபரைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் பிரிவினைக்கு ரிபப்ளிகன் கட்சியே தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
சிலருக்குப் பிரிந்து செல்ல இஷ்டமும் இல்லை. அவர்கள் எவ்வளவு தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு தள்ளிப் போட நினைத்தனர். இந்த இடைவெளியில் வடக்கும், தெற்கும் ஒரு உடன்பாட்டிற்கு வரலாம் என எண்ணினார்கள். ஆங்காங்கே தேர்தல்கள் நடந்தன. பிரசாரங்களும் நடந்தன. பிரிய நினைத்த தென்மாநிலங்களின் மக்கள் உற்சாகத்துடன் பங்கு பெற்று வோட்டளிக்க வேண்டும் எனப் பிரிவினைவாதிகள் எதிர்பார்த்தனர். அவர்களை எதிர்த்து பிரிய வேண்டாம் என எண்ணிய மற்றத் தலைவர்களும் தேர்தலில் பங்கு பெற்று டெக்சாஸ், லூசியானா, ஜார்ஜியா, போன்ற இடங்களில் வெற்றியும் பெற்றனர். என்றாலும் பிரிவினைவாதிகளின் வெற்றியையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. பிரிவினை வாதிகளும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.
பிரிந்து போன ஏழு நாடுகள்: தென் கரோலினா, அலபாமா, மிஸ்ஸிஸிபி, ஃப்ளோரிடா, ஜார்ஜியா, லூசியானா மற்றும் மிகப்பெரிய மாநிலமான டெக்ஸாஸ். தென்பகுதியிலேயே சற்று மேலே அமைந்திருந்த தென் மாநிலங்களான, வர்ஜீனியா, வடகரோலினா, டெனிசி மற்றும் ஆர்கன்ஸாஸ் போன்ற மாநிலங்களின் மக்களும், தலைவர்களும் லிங்கன் தான் இவை எல்லாவற்றுக்கும் முக்கியமாய்ப் பிரிந்து செல்வதற்குக் காரணம் என்பதை ஒத்துக்கொள்ளவில்லை. இங்கே எல்லாம் கொஞ்சம் நியாயமான காரணங்களாக இருந்தால் ஒழியப் பிரிந்து செல்வதில் அர்த்தம் இல்லை என்றே பெருவாரியான மக்கள் நினைத்தனர். மேலும் இவர்களுக்கு வட மாநிலங்களுடன் வர்த்தகரீதியான தொடர்பு அதிகமாயும் இருந்தது. அவற்றை இழக்க நேரிடும். மேலும் வேலை செய்யத் தொழிலாளர்கள் கிடைப்பதில் உள்ள கஷ்டங்களையும் ஆராய்ந்து அறிந்திருந்தனர். ஆகவே இவர்களிடம் யூனியனில் இருந்து பிரிந்து செல்லத் தேவையான காரணங்கள் என மற்றத் தென் மாநிலங்கள் சொன்னது போதுமானதாக இல்லை.
ஆகவே முதலில் கூறிய ஏழு மாநிலங்களும் தங்களுக்கு வடக்கே உள்ள மற்றத் தென் மாநிலங்களான வர்ஜீனியா, வடகரோலினா, டெனிசி, ஆர்கன்ஸாஸ் போன்றவற்றின் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் அலபாமாவில் உள்ள, மாண்ட்கோமெரி என்னும் ஊரில் கூடி அந்த வருடம் பெப்ரவர் மாதம் நான்காம் தேதி, தங்கள் மாநிலங்கள் அனைத்தும், “ அமெரிக்கக் கான்ஃபிடரேட் மாநிலங்கள்” என்னும் பெயரில் செயல்படும் என அறிவித்தனர்.
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















