-
அமெரிக்கா 19
- கீதா சாம்பசிவம்
ஹாரியட் தப்பிச் சென்ற காலத்திலும், மற்றவர்களைத் தப்ப வைக்க அவர் பாடுபட்ட காலத்திலும் இருந்த அரசியல் நிலைமையைச் சற்றே பார்ப்போமா?
Fugitive Slave Act of 1793 அடிமைகள் தப்பிச் செல்வதை முற்றிலும் எதிர்த்தது. தப்பிச் செல்லும் அடிமைகளுக்குச் சுதந்திரமாய் வாழ உரிமை இல்லை எனவும், தங்கள் எஜமானர்களிடம் அவர்கள் திரும்ப வடபகுதி மக்களும், அரசு அலுவலர்கள், சர்ச்சின் போதகர்கள் போன்றோர் உதவவேண்டும் என்றது. ஆனால் பொதுவாக மக்களின் அதுவும் வட பகுதி மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்ததால் இந்தச் சட்டத்தை அமலாக்கம் செய்யக் கஷ்டமாகவே இருந்தது. இது கட்டாயமாக்கப் படவில்லை. ஆகவே 1850-ம் ஆண்டில் இந்தச் சட்டம் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. இப்போது இன்னும் கடுமையாகத் தப்பி ஓடும் அடிமைகளுக்கு உதவிகள் செய்பவர்கள் ஆயிரம் டாலர் வரை அபராதம் கட்ட வேண்டும் என்றும் தப்பி ஓடும் அடிமைகளுக்கு விசாரணை தேவையில்லை என்றும் உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டு அபராதமும் கட்ட வேண்டும் என்றும் சொன்னது. இந்த அடிமைகளைப் பிடிக்கும் அதிகாரிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப் பட்டது. ஆனால் வடபகுதி மக்கள் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இது நீதி இல்லை எனவும், தப்பி வந்தவர்கள் தப்பினவர்களாகவே இருக்கட்டும் என்றும் எண்ணினார்கள்.
இதை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் ரெவரெண்ட் லூதர் லீ என்னும் மத போதகர் ஒருவர் ஆவார். அவர் சொல்கின்றார், "நான் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிய மாட்டேன். என்னால் முடியாது. இதுவரையிலும் முப்பது அடிமைகளைக் கனடா தப்பிச் செல்ல உதவி உள்ளேன். அதிகாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். இதோ என் விலாசம். 39, ஒனடாகோ தெரு, நியூயார்க். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்."
இதன் தொடர்ச்சியாக விஸ்கான்சின் சுப்ரீம் கோர்ட் 1854-ம் ஆண்டு வாக்கில் இந்தச் சட்டம் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் எழுப்பப் பட்டுள்ளது என்று சொல்லிவிட்டது. யு.எஸ். சுப்ரீம் கோர்ட் அதை ரத்து செய்துவிட்டது. என்றாலும் நம் கதாநாயகியான ஹாரியட் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. தப்பி ஓடிவர விரும்பும் அநேகத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் பெருமளவில் உதவி செய்தே வந்தார். அவரால் தப்ப வைக்கப் பட்ட அடிமைகள் பெரும்பாலும் கனடாவிற்கே சென்றனர்.
இதை பாதாள ரயில் பாதை என்ற பெயரில் அழைத்து வந்தாலும் பல முறைகளிலும் அடிமைகள் உண்மையான ரயில் பயணத்தைக் காண முடியாமல் நடந்தோ, படகுகளில் ஒளிந்து கொண்டோ, அல்லது சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகன்களில் ஒளிந்து கொண்டோ தான் தப்ப நேர்ந்தது. செல்லும் வழிகளும் அடிக்கடி மாற்றப் பட்டன. அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாய் இருக்கும் நாட்களில் பல நாட்கள் உணவோ, தண்ணீரோ கிடைக்காமல் ஒளிந்தே இருக்க வேண்டி நேர்ந்தது. சில சமயம் தனியாகவும், சில சமயம் குழுவாகவும் தப்பினார்கள். எப்போதாவது பெரிய குழுக்கள் அதிசயமாய்த் தப்ப முயன்று வெற்றி அடைவார்கள். பெரும்பாலும் ஆண்களே தப்பி ஓட முயற்சி செய்தார்கள். பெண்களால் இத்தகையதொரு வழியில் தப்பி ஓடுவது கஷ்டம் எனச் சொல்லப் பட்டாலும் நம் கதாநாயகி டப்மேனோ பல முறைகளிலும் பல்வேறு வழிகளிலும் அடிக்கடி சென்று அனைவரையும் உற்சாகப் படுத்தித் தப்ப வைத்தார்.
தப்பும் வழிகள் தப்பும்போது மட்டுமே அவ்வப்போது வாய் மூலமே சொல்லப் படும். கிளம்பும் எவருக்கும் தாம் எந்த வழியில் செல்லப் போகின்றோம் என்பது தெரியாது. அங்கங்கே சில நபர்கள் உதவிகள் செய்து வழிகளை அதிகாரிகள் கண்களில் படாமல் மாற்றி அமைத்து அடிமைகள் தப்ப உதவி செய்தார்கள். தென் பாகத்துச் செய்திப் பத்திரிகைகளில் தப்பி ஓடிய அடிமைகள் பற்றியும் அவர்கள் தப்ப உதவும் ஹாரியட் பற்றியும் செய்திகள் வெளியிட்டு இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசுகளும் அறிவிக்கப் பட்டிருந்தன. ஆனால், மூச்!!! யாரும் வாயே திறக்கவில்லை. ஆனால் தென்பகுதி மக்களின் அடிமைகள் தப்பும் முயற்சி வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தமும் ஆரம்பித்தது. அது பற்றி வரும்நாட்களில்.
(இன்னும் வரும்)
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















