அமெரிக்கா 18
கீதா சாம்பசிவம்
பிலடெல்பியா சேர்ந்ததுமே ஹாரியட் டப்மேனுக்குத் தன்னுடைய குடும்பம் நினைவில் வந்தது. தான் மட்டும் இங்கே சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்போது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இன்னமும் அடிமை வாழ்க்கையிலேயே இருப்பதை எண்ணி அவர் மனம் நொந்தார். அவர் எண்ணினார்: "நான் ஒரு புதிய உலகத்தில் புதிய மனுஷியாக என்னை உணருகின்றேன். என் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், நண்பர்கள் அனைவருமே மேரிலாண்டில் இன்னும் அடிமை வாழ்க்கையில் இருக்கின்றனர், ஆனால் நானோ? சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறேன். அவர்களை எப்படியேனும் நான் விடுவிக்க வேண்டும்." இதுவே அவருக்குத் தாரக மந்திரமாயிற்று. கிடைத்த வேலைகளில் சேர்ந்து, கிடைத்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு தன் செலவுக்குப் போக பணம் சேமிக்க ஆரம்பித்தார் ஹாரியட். அந்தச் சமயம் பார்த்து யு.எஸ். காங்கிரஸ் (இங்கே காங்கிரஸ் என்பது மந்திரிசபைக் கூட்டம் என்ற பொருளில் வரும்) ஒரு புதிய சட்டத்தை அமுல் படுத்தியது. அதற்குப் பெயர் fugitive slave law 1850 என்று பெயர். இந்தப் புதிய சட்டத்தின் படி அடிமைகள் இல்லாத மாநிலத்தவர் கூட அடிமைகள் தப்பிக்க உதவ முடியாத நிலைமை ஏற்பட்டது. தப்பி ஓடும் அடிமைகளுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது. பெரும்பாலான அடிமைகள் தப்பி வந்து இன்னும் வடக்கே கனடாவை நோக்கிச் சென்று மறைந்து வாழ ஆரம்பித்தனர். பிலடெல்பியாவிலேயும் நிற வெறி அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.
1850-ம் வருஷம் டிசம்பர் மாதத்தில் டப்மேனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. அவருடைய அத்தை மகள் ஒருத்தி அவளுடைய இரு குழந்தைகளுடன் அடிமையாக விற்கப் படப் போகின்றாள் என்பதே அது. குடும்பம் சுக்குநூறாய்ச் சிதறுகின்றதை எண்ணி ஹாரியட் மனம் வெதும்பினார். என்ன செய்வது என யோசித்துத் தான் விட்டு வந்த அந்த மண்ணுக்கே தைரியத்துடன் திரும்பிப் போனார் ஹாரியட். பால்டிமோர் என்னும் ஊருக்குச் சென்று தன் மைத்துனன் ஆன டாம் டப்மேன் உதவியோடு மறைந்திருந்தார். அவருடைய அத்தை மகளின் கணவன் ஒரு சுதந்திரமான கறுப்பு மனிதன். தன் மனைவியின் அடிமைத்தனத்தை மறைமுகமாய் எதிர்த்ததோடு அல்லாமல், வெளியில் அதை ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டான். அந்தப் பெண்மணி தன் குழந்தைகளுடன் விற்கப் போவதற்கு முதல் நாள் திடீரெனக் காணாமல் போனாள். குழந்தைகளும் சேர்ந்தே மறைந்தன.
அவள் கணவன் நூறு மைல் தூரம் அவளைப் படகில் வைத்து, மறைத்துக் கூட்டிச் சென்று பின்னர் டப்மேனிடம் ஒப்படைத்தான். டப்மேன் அவளையும், அவள் குடும்பத்தையும் பாதுகாப்பாய் பிலடெல்பியா கொண்டு வந்து சேர்த்தார். இதை அடுத்த வசந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை சொந்த ஊர் சென்ற டப்மேன் இம்முறை தன் சொந்த சகோதரனை மீட்டுக் கொண்டு வந்தார். அவரோடு வேறு முகம் தெரியாத இரு அடிமைகளும் மீட்கப் பட்டனர். இம்முறை அவருடன் அடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடுபட்ட தாமஸ் கேரட் என்பவரும் சேர்ந்து கொள்ள ஹாரியட்டிற்கு உற்சாகம் மிகுந்தது. ஒவ்வொரு முறை மேரிலாண்டில் இருந்து அடிமைகளை மீட்டுக் கொண்டு வந்து சேர்ப்பதில் அவருக்கு மிகுந்த உற்சாகமும், அதன் மூலம் பெருத்த தன்னம்பிக்கையும் ஏற்பட்டு வந்தது. நாளடைவில் கறுப்பின மக்கள் மத்தியில் ஹாரியட்டின் பெயர் பிரபலம் அடையத் தொடங்கியது. அவர் "மோசஸ்" என அழைக்கப் பட்டார். மோசஸ் எவ்வாறு மக்களைக் காத்து ரட்சித்தாரோ அவ்வாறே ஹாரியட்டும் தங்களைக் காக்கின்றார் என்று கறுப்பின மக்கள் நம்பினார்கள்.
பின்னாட்களில் டப்மேன் இதை நினைவு கூருகின்றார், எவ்விதம் தான் தப்பி வந்தோம் என்பதை. அவர் அப்போது தமக்கு உதவி செய்த சில நபர்களின் பெயரையும் வெளியிட்டார். வில்பர் சீபர்ட் என்னும் எழுத்தாளருக்குப் பேட்டி ஒன்றை 1897-ல் அளித்த டப்மேன், பாதாள ரயில் பாதை என அழைக்கப் பட்ட அந்தப் பயங்கரமான தப்பித்து வருதல் பற்றி விவரிக்கும்போது, சாம் க்ரீன் என்னும் சுதந்திரமாய் வசித்த கறுப்பு மந்திரி ஒருவருடன் கிழக்குப் புதுச் சந்தை என்னும் இடத்தில் மேரிலாண்டில் அடைக்கலமாய்த் தங்கியதையும், தன் பெற்றோரின் குடி இருப்புக்கு அருகேயே தான் ஒளிந்து கொண்டிருந்ததையும் விவரிக்கின்றார்.
அங்கே இருந்து தாம் வடகிழக்கே சாண்ட் டவுன், வில்லோ க்ரோவ், டெலவர், வழியாகச் சில கறுப்பு ஏஜெண்ட்கள் உதவியுடன் தப்பி அவர்கள் வழிகாட்டுதலில் வடக்கே டோவர், ஸ்மைர்னா, ப்ளாக்பர்டு, சென்று மற்ற ஏஜெண்டுகள் உதவியோடு செசபீக், டெலவர் கால்வாயைக் கடந்து நியூ காசில் சென்றடைந்து அங்கிருந்து வில்மிங்டன் போனதையும் நினைவு கூருகின்றார். அங்கிருந்து பிலடெல்பியா வந்து பிரசித்தி பெற்ற கறுப்பு இன ஏஜெண்ட்களின் உதவியோடு நியூயார்க், நியூ இங்கிலாந்து, கனடா போன்ற இடங்களுக்குச் சென்றதையும் நினைவு கூருகின்றார்.
சுதந்திரத்தைத் தேடித் தப்பிச் சென்ற டப்மேன்1851-ம் வருடம் டார்செஸ்டர் கவுண்டிக்குத் தன் கணவனைக் கண்டு பிடிக்கவேண்டித் திரும்பினார். ஆனால், அந்தோ! பரிதாபம்! தன் கணவனைக் கண்டு அவனுக்குப் பரிசளிக்க வேண்டிப் பல இடங்களிலும் வேலை செய்து, பணம் சேமித்து அழகிய சூட் ஒன்றை அவனுக்காகத் தயார் செய்து கொண்டு சென்ற டப்மேனுக்குக் கிடைத்த பரிசு, அவர் கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதுதான். என்றாலும் கணவனுடன் சேர்ந்திருக்கும் ஆசையில் அவனை அழைக்கவே செய்தார் டப்மேன். ஆனால் அவன் புது மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் சாக்குப் போக்குச் சொல்ல ஒரு நிமிஷம் டப்மேன் அவன் வீட்டை உடைத்து உட்சென்று தான் அங்கேயே இருந்து தன் உரிமையை நிலைநாட்டுவோமா என எண்ணினார்.
ஆனால் திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தில் இவன் நமக்குத் தகுதி வாய்ந்தவன் அல்ல என்று எண்ணினார். இவனுக்காகத் தான் இத்தனை கஷ்டப் பட்டிருக்க வேண்டாம் எனவும் எண்ணினார். ஆகவே அவர் வேறு சில அடிமைகள் தப்பிச் செல்ல உதவினார் கணவனுக்காகக் கொண்டு வந்த பணத்தின் உதவியோடு. அவர் கணவன் ஜானோ புது மனைவி கரோலினோடு இங்கேயே வாழ்ந்தான், பின்னர் பதினாறு வருடங்களுக்குப் பின் வெள்ளை மனிதன் ஒருவனோடு நடந்த விவாதத்தில் கொல்லப் பட்டான்.
டப்மேன் தொடருவார். அடிமைகள் சட்டம் பற்றிய ஒரு குறிப்பு அடுத்து வரும், அப்போது தொடரக் கொஞ்சம் சுலபமாய் இருக்கும்.
(இன்னும் வரும்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















