அமெரிக்கா 17
கீதா சாம்பசிவம்
1844-ம் வருடம் ஹாரியட்டின் தந்தை அவரின் நாற்பத்தி நான்காம் வயதில் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து தன்னை அடிமையாக வைத்திருந்த தாம்ப்ஸன் குடும்பத்திற்கே தொடர்ந்து தச்சுவேலை செய்து வந்தார். ஹாரியட்டின் தாயும் அதே போல் நாற்பத்தி நான்காம் வயதில் விடுவிக்கப் படலாம் என்றும், அதன் பின்னர் அவருக்குப் பிறக்கும் குழந்தைகள், அடிமைத் தனத்தில் அமிழ வேண்டாம் எனவும், ஹாரியட்டின் மனம் தன் தம்பியோ, தங்கையோ அடிமை இல்லாமல் பிறக்க வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் ஹாரியட்டின் தாயை விலைக்கு வாங்கிய குடும்பமோ அவரை விடுவிக்க யோசித்தது. 1844-ம் வருடம் ஹாரியட் ஜான் டப்மேன் என்பவரை மணந்தார். ஜான் டப்மேன் அடிமை இல்லை. ஹாரியட்டோ அடிமை. விடுவிக்கப் படாத அடிமை. ஆகவே அவர்கள் உறவு அப்படி ஒன்றும் இனிமையாகவோ, சுமுகமாகவோ அமையவில்லை. அப்போது இருந்த காலகட்டத்தில் அடிமையாக இருந்து வந்த ஆப்பிரிக்க இனத்துப் பெண்களை, அடிமை அற்ற ஆப்பிரிக்க இனத்து ஆண்கள் மணப்பது பெரும்பாலும் சகஜமாய் இருந்தாலும், ஜானைப் பற்றிய விபரங்கள் ஏதுமே ஹாரியட்டிற்குச் சரியாய்த் தெரியவில்லை. திருமணம் என்பது ஒரு பெயருக்குத் தான் நடந்தது என்று சொன்னாலும் அதில் மிகை இல்லை. இந்தச் சமயம் தான் ஹாரியட் தன் உண்மைப் பெயரான ஆரமிண்டா ரோஸ் என்பதை ஹாரியட் டப்மேன் என மாற்றிக் கொண்டார். இது அவருடைய நெருங்கிய நண்பர்கள் சொல்லுவதாகும். இவரின் பிறப்பு, அல்லது திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்தக் கால கட்டத்தில் நடந்திருக்கலாம் என்பதே ஓர் அனுமானம் தான். படிப்பறிவற்ற ஹாரியட்டால் துல்லியமாய் அதைச் சொல்ல முடியவில்லை. இதற்குள் ஹாரியட்டின் பிரியத்துக்குகந்த ஒரு சகோதரியும், காணாமல் போயிருந்தாள்.
திருமணம் நடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் ஹாரியட்டின் உடல்நிலை மீண்டும் சீர் கெட ஆரம்பித்தது. அவரை விலைக்கு வாங்கி இருந்த முதலாளி அவரை வேறு யாருக்காவது விற்றுவிட எண்ணினார். தன் கணவன் அடிமை இல்லை என்பதாலும் சிறு வயதிலிருந்தே அடிமையாக இருப்பதாலும், உடல் நலம் சீர்கெட்டு வந்ததாலும் தான் அடிமைத் தனத்தில் இருந்து சீக்கிரமே விடுவிக்கப் படுவோம் என எண்ணிய ஹாரியட்டின் எண்ணத்தில் இடி போல் இந்தச் செய்தி கிடைத்தது. அவர் கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்தார். பல முதலாளிகள் வந்து, வந்து ஹாரியட்டைப் பார்த்து விலை பேசிப் போனார்கள். ஹாரியட்டின் பிரார்த்தனையும் தொடர்ந்தது. முதலாளியிடம் தன்னை விற்க வேண்டாம் என்று கெஞ்சியும் அவர் மனம் மாறவில்லை என்பதால் ஹாரியட், தன்னை விற்கப் போகும் முதலாளியின் உயிரை எடுத்துக் கொள்ளும்படிக் கடவுளை இடைவிடாமல் வேண்டிக் கொண்டே இருந்தார். என்ன ஆச்சரியம்? கடவுள் அவருக்குச் செவி சாய்த்தாரா அல்லது அவர் விதியா தெரியவில்லை. ஹாரியட்டின் முதலாளி ஆன ப்ராடெஸ் திடீரென ஒரு நாள் இயற்கையாகவே இறந்து போக, இப்போது ஹாரியட்டின் நிலைமை முன்னை விட மோசம் அடைந்தது. தன்னுடைய பிரார்த்தனை தான் பலித்ததோ என எண்ணிக் கலங்கிக் கொண்டே, தான் நினைத்தது தவறு என வருந்திக் கொண்டிருந்த ஹாரியட்டிற்கு மேலும் அதிர்ச்சி.
ப்ராடெஸின் விதவை மனைவியான எலிஸா தன்னிடம் இருந்த அடிமைகள் அனைவரையும் விற்க முடிவு செய்தாள். ஹாரியட் செய்வதறியாது திகைத்தாள். கணவன் உதவி செய்வான் என எதிர்பார்த்தாள். கணவனின் உதவியே கிட்டவில்லை ஹாரியட்டிற்கு. மீண்டும் அடிமையா? அதுவும் புது முதலாளியிடம்? அதைவிடக் கொடுமை வேறெதுவுமே இல்லையே? ஹாரியட் தன் பிறந்த வீட்டு மனிதர்களோடு கலந்து ஆலோசித்தார். அவர்கள் முன்னே இரு விஷயங்கள் தான் இப்போது தோன்றின. ஒன்று தப்பிப்பது அல்லது இறப்பது. ஆனால் எதற்காக இறக்கவேண்டும்? ஆகவே தப்பிக்கலாம் என முடிவெடுத்தனர் ஹாரியட்டும், அவர் சகோதரர்கள் ஆன பென், மற்றும் ஹென்றி ஆகியோர். செப்டம்பர் மாதம் 17-ம் தேதி 1849-ம் வருடம் அவர்கள் மூவரும் தப்பினார்கள்.
இதற்குள் ஹாரியட்டை பக்கத்து பண்ணையான டாக்டர் அந்தோணி தாம்ப்ஸன் என்பவர் விலைக்கு வாங்கி இருந்தார். தன்னுடைய சோகத்திலும், பண்ணை விவகாரங்களை ஒழுங்கு செய்வதிலும் மூழ்கி இருந்த ஹாரியட்டின் பழைய எஜமானி ஆன எலிஸா முதலில் அவர்கள் பண்ணையில் இல்லை என்பதைக் கண்டு பிடிக்கவில்லை. கண்டு பிடிக்கும்போது ஹாரியட்டும் அவர் தம்பிகளும் தப்பி ஓடி மூன்று நாட்கள் ஆகி இருந்தன. ஆனால் ஹாரியட்டின் தம்பியான பென்னிற்குத் தன் மனைவி, குழந்தைகள் நினைவு வாட்டி எடுத்தது. மேலும் அவர்கள் தப்பி ஓடும்போதே எலிஸாவிற்கு விஷயம் தெரிந்ததும், இவர்கள் மூவரையும் பற்றித் தகவல்கள் கொடுத்து கேம்பிரிட்ஜ் டெமாக்ரட் என்னும் பத்திரிககயில் விளம்பரம் கொடுத்து இவர்களைக் கண்டு பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக 100 டாலர்கள் இனாம் தருவதாயும் சொல்லி இருந்தாள். தப்பி ஓடியவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையின் வேகத்தையும், கடுமையையும் நினைத்து ஹாரியட்டின் தம்பிகள் இருவரும் பயந்து கொண்டு திரும்பியதோடல்லாமால், ஹாரியட்டையும் திரும்பச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆகவே ஹாரியட்டும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த ஹாரியட்டிற்கு அடிமை வாசம் பிடிக்கவே இல்லை. ஆகவே வெகு சீக்கிரமே அவர் இரண்டாம் முறையாகத் தப்பினார், இம்முறை தம்பிகள் துணை இல்லாமலேயே. கிளம்புவதற்கு முன்னர் தன் தாய்க்குச் செய்தியைத் தெரிவிக்க விரும்பினார் ஹாரியட். ஆகவே தன் அந்தரங்கத் தோழியான மேரி என்பவளை அவள் வேலை செய்யும் பண்ணையில் தேடிக் கண்டு பிடித்து எவராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் குறிச் சொற்களோடு கூடிய பிரிவைக் குறிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். “நான் நமக்கென விதிக்கப் பட்ட சுதந்திர நாட்டைத் தேடிச் செல்கின்றேன். அது நமக்கென நிச்சயிக்கப் பட்டது. காலையில் சந்திப்பேன் உங்களை” என்கின்றார் இந்தப் பாடலில். இதில் குறிப்பிடும் காலை என்பது விடுதலையைக் குறிக்கும். எங்கே செல்வதென நிச்சயம் செய்ய முடியாத நிலையில் தப்பி ஓடும் கறுப்பர்கள் உபயோகிக்கும் பாதாள ரயில் பாதை எனச் சொல்லப் படும் ஒருங்கிணைப்பாளர்களின் உதவியை நாடினார் அவர். இந்த அமைப்பு விடுதலை பெற்ற சுதந்திரக் கறுப்பர்கள், மற்றும் அடிமைத் தனத்தை எதிர்க்கும் வெள்ளையர்கள், கிறிஸ்துவ அமைப்பாளர்கள் போன்றவர்களின் உதவியோடு அமைக்கப் பட்ட ஒன்றாகும். ப்ரெஸ்டன் என அழைக்கப் படும் இடம் மேரிலாண்டிற்கு அருகாமையில் கரோலின் கவுண்டியில் உள்ளதாகும். அங்கே தப்பி ஓடுபவர்களுக்கு உதவவென்றே ஒரு வீடும், அதன் அமைப்பாளர்களும் உள்ளனர். அங்கிருந்து தான் தப்பி ஓடுபவர்கள் வடகிழக்கே சென்றோ, அல்லது வடக்கே சென்றோ பென்சில்வேனியாவை அடைந்து அங்கிருந்து இன்னும் வடக்கே சென்று சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இந்தப் பயணம் நடைப் பயணமாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள், மூன்று வாரங்களுக்கு மேல் பிடிக்கும் இப்பயணம் 90 மைல்கள் தூரத்தையும் கடந்தும் இருந்தது. வெள்ளையர்களிடமிருந்து தப்பவேண்டி ஹாரியட் பெரும்பாலும் இரவுப் பயணத்தையே தேர்ந்தெடுத்தார். அவரின் வழிகாட்டி நட்சதிரங்களே. அதிலும் வட நட்சத்திரம் என அழைக்கப் படும் துருவ நட்சத்திரமே அவரின் வழிகாட்டி. தப்புபவர்களைப் பிடிக்க என இருக்கும் ஆட்களிடமிருந்து தப்ப அவருக்கு இந்த பாதாள ரயில் அமைப்பாளர்கள் பெரிதும் உதவினார்கள். ஒரு நாள் தப்பி ஓடும் ஹாரியட்டின் தகவலை எடுத்துக் கொண்டு ஒருவன் வந்து விசாரிக்கும் வேளையில் ஹாரியட் தங்கி இருக்கும் வீட்டின் எஜமானி ஹாரியட்டைத் தோட்டத்தைப் பெருக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டு, ஹாரியட் அங்கேயே வேலை செய்துவருவதாய் ஒரு தோற்றத்தை உருவாக்கி வந்தவரைத் திரும்ப அனுப்பினார். இரவானதும் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அவரை ஒரு வண்டியில் மறைத்து, அடுத்த குடும்பத்தில் பாதுகாப்பாய் விட்டனர். தான் தப்பிய வழியைப் பற்றியோ, தனக்கு உதவி செய்த நபர்களைப் பற்றியோ பல வருடங்கள் ஹாரியட் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. என்றாலும் இந்த வழியும், அதன் காடுகளும், நதிகளும், பாதையும் அவருக்கு மிக மிக நன்றாய்ப் புரிந்து போனது. பல வருடங்கள் பின்னர் அந்த வழியில் பலரைத் தாம் தப்பி ஓடி வர அழைத்து வந்திருப்பதைப் பற்றிச் சொல்கின்றார் ஹாரியட். அவருடைய முதல் பயணம் வெகு வெகு ரகசியமாய் வைக்கப் பட்டது. பின்னர் அதை நினைவு கூருகையில், ஹாரியட் தான் தப்பி பிலடெல்பியா வந்து சேர்ந்ததும் சொர்க்கம் என்றால் என்ன என்பதும், அந்த சொர்க்கத்துக்கே தான் வந்துவிட்டதாய் உணர்ந்ததாயும் கூறுகின்றார்.
(இன்னும் வரும்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















