அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
ஹாரியட் டப்மேனின் தாய், தந்தையரும் அடிமைகளே. அவரின் தாய்வழிப் பாட்டி காலத்தில் அடிமைகளைக் கொண்டு வந்து சேர்க்க என்றிருந்த கப்பலிலே யு.எஸ்.ஸுக்கு வந்து சேர்ந்தார். மூதாதையர்களைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை எனினும் கணா நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கலாம் என்று தெரிய வருகின்றது. அவரின் தாயின் பெயர் ஹாரியட் க்ரீன் என்பதாகும், தந்தையின் பெயர் பென் ரோஸ் என்பதாகும். ஹாரியட்டின் தாயை “ரிட்” என்றே அழைத்து வந்தனர். அவர் மேரி பாட்டிசன் என்பவரிடம் அடிமையாக இருந்து வந்தார். தந்தை பென் மேரி பாட்டிசனின் இரண்டாம் கணவர் அந்தோணி தாம்ப்சன் என்பவரிடம் அடிமையாக இருந்து வந்தார். அவருடைய பண்ணை மிகப் பெரியது. மேரிலாண்ட் என்னும் ஊரில் உள்ள டார்செஸ்டர் கவுண்டி என்னுமிடத்தில் அந்தப் பண்ணை இருந்தது. அங்கே தான் ஹாரியட் பிறந்தார். பிறந்த வருடம் சரியாய்த் தெரியவில்லை. ஒவ்வொரு கோப்பும் ஒவ்வொரு வருஷத்தைக் காட்டுகின்றது. 1820ல் இருந்து 1825-க்குள் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. பிறந்ததில் இருந்தே அடிமையாக வேண்டிய கட்டாயம் ஹாரியட்டிற்கு. குழந்தைப் பிராயத்தில் உள்ள இனிமைகளை எதையும் அனுபவித்ததில்லை.
இவரின் தாய் பண்ணையில் சமையல் செய்பவராயும், தந்தை சிறந்ததொரு தச்சு வேலை செய்பவராகவும் இருந்தார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். இவர் ஐந்தாவது பெண்ணாக இருந்தார். இவரின் தாய் வேலை பார்த்து வந்த மேரியின் பிள்ளையான எட்வர்ட் என்பவர் இவருடன் கூடப் பிறந்த மூன்று சகோதரிகளை மற்றப் பண்ணைக் காரர்களுக்கு விற்று விட்டார். இவரின் தாய் கிடைத்த குறைந்த கூலியில் குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டு வந்தார். விற்கப்பட்ட சகோதரிகள் எங்கே சென்றனர் என்பதே தெரியாமல் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்டு விட்டனர். இவரின் கடைசிச் சகோதரன் மோசஸ் என்பவனை ஜியார்ஜியாவில் இருந்து வந்த ஒரு வியாபாரி வாங்க முடிவு செய்து விலை பேசப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இவர் தாய் தன் கடைசியும், அருமையும் ஆன குழந்தையை மறைத்து வைத்தார், மற்ற அடிமைகளின் துணையோடும், அங்கே இருந்த ஒரு சில அடிமைகள் அல்லாத கறுப்பினத்து மக்களின் உதவியோடும். கிட்டத்தட்ட ஒரு மாதம் போல் முயன்று மறைத்து வைத்த பிள்ளையை வியாபாரி பண்ணை முதலாளியின் உதவியுடன் பிடுங்கிச் செல்ல வரவும், ஹாரியட்டின் தாய் மிகுந்த கோபத்துடன், தன் மகனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, யாரேனும் ஓர் அடி முன்னே வைத்தாலும் அவர்கள் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் அரிவாளோடு பயமுறுத்த, பயந்து போன அவர்கள் பின்வாங்க நேரிட்டது. இந்தச் சம்பவமே ஹாரியட்டின் விடுதலை உணர்வைத் தூண்டி விட ஒரு முன்னோடியாக அமைந்தது.
தாய்க்கு இருந்த அதிக வேலைகளாலும், குடும்பத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளாலும் தாயால் குடும்பத்தைக் கவனிக்க நேரம் இல்லாமல் போக, ஹாரியட் மிகச் சிறிய வயதிலேயே தன்னுடைய சிறிய சகோதரனைப் பார்த்துக் கொண்டார். கூடுதலாய் பண்ணை முதலாளியின் சிறு குழந்தையையும், ஆம், ஐந்து, ஆறு வயதிலேயே ஹாரியட் மிஸ் சூசன் என்னும் ஒரு பண்ணை எஜமானியிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வேலைக்குச் சேர நேரிட்டது. குழந்தை தூக்கத்தில் சிறிது சிணுங்கினாலும் அதன் பாதிப்பு ஹாரியட்டின் முதுகில் சவுக்கடியாக வந்து விழுந்தது. குழந்தை சிணுங்குவதற்கு அவளே காரணம் என்று சொல்லி மிஸ் சூசன் அவளைச் சவுக்கால் அடித்து நொறுக்குவாள். சில சமயம் காலை உணவு சாப்பிடக் கூட நேரம் இருக்காது ஹாரியட்டிற்கு. ஆனால் சவுக்கடி காலை உணவுக்குள் ஒரு பத்து முறையாவது விழுந்து இருக்கும். இப்படி இருக்கையிலேயே ஒரு நாள் திடீரென ஹாரியட்டிற்கு அடி பலமாய் விழப் பயத்தில் திகைத்த சிறுமிக்குக் காரணம் புரியவில்லை. கடைசியில் சர்க்கரை காணவில்லை என்று அவள் தான் திருடி இருக்க வேண்டும் என்று தண்டனை என்பது புரிய, சிறுமி பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டது எங்கே தெரியுமா?
பக்கத்துப் பண்ணையில் வளர்க்கப் படும் பன்றிகள் வாழும் இடத்தினருகே ஒரு குழியில் கிட்டத் தட்ட 4,5 நாட்கள் அங்கே மறைந்து இருந்ததோடு அல்லாமல், உணவுக்காகவும் வாட நேர்ந்தது. பன்றிகளுக்குப் போடும் உணவை அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டி வந்தது. பசி பொறுக்க முடியாமல் கடைசியில் எஜமானியிடமே திரும்பிய ஹாரியட்டிற்கு மேலும், மேலும் சவுக்கடிகள். முதுகே ரத்த விளாறாக மாறிவிட்டது. தன் வாழ்நாள் பூராவும் மறக்க முடியாதபடிக்கு அடிகளை வாங்கிய ஹாரியட் எப்படியேனும் இங்கிருந்து தப்ப வேண்டும் என்றும் மனதிற்குள் முடிவு கட்டினாள். அடிகளிலிருந்து தப்ப அடுக்கடுக்காய் உடைகளை அணிந்து அடி வாங்கும்போது நேரிடும் வலிகளிலிருந்து ஓரளவு சாமர்த்தியமாய்த் தப்பினாள். மற்றோர் முறையில் தன்னை அடிக்கும் வெள்ளை மனிதனான எஜமானிடம் இருந்து தப்பிக்க வேண்டி அவன் முழங்காலைக் கடித்து விட, அன்றிலிருந்து அவன் ஹாரியட் இருக்கும் இடத்துக்கே வருவதில்லை. இது போதாது என்று பண்ணை வயல்களிலும் வேலை செய்ய ஹாரியட் அனுப்பப் பட அதிக வேலையால் அவருக்கு அம்மை நோய் வர, அப்படியும் விடுமுறை கிட்டாமல் வேலை செய்ய நேரிடுகின்றது. முழங்காலளவு தண்ணீரில் வேலை செய்ய நேரிட்ட ஹாரியட்டின் உடல்நிலை மோசமடைய வீட்டிற்கு அனுப்பப் பட்டு அவரின் தாயால் உடல் நலம் தேறுகின்றார். எனினும் மீண்டும், மீண்டும் பண்ணை வேலைகளுக்கே அனுப்பப் படுகின்றார். இதற்கு ஒரு முடிவே இருக்காதா என எண்ணி மனம் நொந்து போகின்றார் ஹாரியட். வயது ஆக, ஆக வயல் வேலைகளில் மிகக் கடுமையாக மாடுகளை ஓட்டவும், களை எடுத்தல், நாற்றுக்கள் நடுதல் என வேலை மிகக் கடுமையாக அவரை நெறிக்கின்றது.
ஒரு முறை அவர் வேறோரு பண்ணையில் இருந்து தப்பி ஓடும் சக அடிமை ஒருவரைச் சந்திக்க நேரும்போது, அந்த அடிமையின் மேற்பார்வையாளரால் மிகக் கடுமையாகத் தாக்கப் பட்டு ஹாரியட்டின் மண்டை உடைந்து போகின்றது. அவரின் அடர்ந்த தலைமுடியால் அவர் காயம் அதிக ஆழமின்றித் தப்பினாலும் ரத்தம் கொட்ட அரைகுறை நினைவோடு தான் வேலை செய்யும் பண்ணைக்குத் திரும்பி, எந்தவிதமான மருத்துவ உதவியுமின்றி இரண்டு நாட்கள் கழிக்க நேரிடுகின்றது. ஆனால் இதனால் கடும் வேலை செய்வதில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. வேலை செய்ய முடியாமல் மயக்கம் வந்து தொல்லைகள் கொடுக்க அவர் திரும்பவும் அவரின் ஏஜெண்ட் ஆன ப்ராடெஸ்ஸிடம் திரும்ப அனுப்பப் படுகின்றார். அந்த ஆள் அவரை எங்காவது விற்க முயல்கின்றான். ஆனால் அடிக்கடி மயக்கம் வரும் ஒரு பெண்ணை விலைக்கு வாங்கிக் கொள்ள மற்றப் பண்ணை முதலாளிகள் தயங்குகின்றனர். திடீர், திடீரென மயக்கமா, தூக்கமா எனத் தெரியாத நிலையில் போகும் இவரை எழுப்ப முடியாமல் இவரின் வீட்டிலும் அனைவரும் தவித்தனர். தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட ஒருவகை வலிப்பு இது எனப் பின்னாட்களில் இது இவருக்குத் தெரிய வந்தது. இந்த மோசமான தலைக்காயத்தால் அவருக்கு வாழ்வில் நம்பிக்கை முற்றிலும் இழக்கவில்லை. மாறாக மேலும் இறை பக்தி அதிகரித்தது. எழுதப் படிக்கத் தெரியாத ஹாரியட்டிற்குச் சிறு வயதில் இருந்தே அவரின் தாயார் பைபிளின் பழைய ஏற்பாடில் உள்ள கதைகளைச் சொல்லி வந்தார். அவருக்கு மிகவும் பிடித்தது பைபிளின் பழைய ஏற்பாடே ஆகும். அதை முழுதும் அவர் நம்பியதோடு அல்லாமல் இறைவன் வருவான், தங்களை எல்லாம் இம்மாதிரி ஒரு கொடிய துக்கத்தில் இருந்து காப்பான் என உறுதியோடும், திடத்தோடும் நம்பிவந்தார். மேலும் அவருக்குத் தலையில் பட்டிருந்த பலத்த காயத்தின் காரணமாய் சிலசமயங்களில் சில காட்சிகளும், தெரிய ஆரம்பித்தன. தனக்கு பழைய ஏற்பாட்டிலிருந்தே வழிகாட்டியாக இவை தெரியவருகின்றது என அவர் உறுதியாகவும் நம்பி வந்தார். அந்தக் காட்சிகளும், கனவுகளும் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோடு அல்லாமல் வெள்ளையர்களால் அடிமைகளாய்த் தாங்கள் நடத்தப்பட்டு கொடுமைப் படுத்தப் பட்டதையும் எதிர்த்தது அவருடைய மனம். தன் உள்மனம் தன்னை ஆன்மீக வழியில் திருப்பி நல்வழிப்படுத்துவதாய் அவர் உணர்ந்ததோடு அல்லாமல் கடைசிவரையில் இந்த இறை உணர்வையும், ஆழ்ந்த நம்பிக்கையையும் அவர் கைவிடவே இல்லை.
(இன்னும் வரும்)
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















