அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 14
அமெரிக்கா என்ற பொதுப் பெயரில் அழைக்கப் படும் யு.எஸ்ஸில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்காகப் போராடி சுதந்திரம் பெற்ற பின்னர் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இந்த உள்நாட்டுப் போர் ஏன் ஏற்பட்டது என்பது தெரிய அமெரிக்காவில் அடிமைத்தனம் இருந்தது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிமைகள் பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்த கறுப்பர்களாகவே இருந்து வந்தனர். யு.எஸ்.ஸின் வடக்கு பாகமும், வட கிழக்கு பாகமும் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் அங்கே சீதோஷ்ண நிலைமை எப்போதும் நன்றாய் இருக்காது. வருடத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் குளிர் அதிகமாய் இருக்கும். விவசாயம் நடைபெறுவது கோடை காலத்தில் மட்டுமே. ஆகவே வெயிலும், குளிரும் சமமாய் இருந்து வந்த தென் மாநிலங்களிலேயே பெருமளவு விவசாயம் நடைபெற்றது. அங்கேயே பெருமளவு விவசாயப் பண்ணைகளும் இருந்து வந்தன.
இந்தப் பண்ணைகளில் பயிர் செய்யும் நிலம் மட்டும் இருக்காது. அந்த நிலத்தில் உழும் மாடுகள், இயந்திரங்கள், பால் கொடுக்கும் பசுக்கள், கோழிப் பண்ணைகள், குதிரை லாயங்கள், ஆட்டு மந்தைகள், இவற்றில் குளிருக்குத் தேவையான கம்பளியைக் கொடுக்கும் செம்மறி ஆடுகளும் அடங்கும். ஒரு பண்ணை என்றால் இவை மொத்தமும் இருக்கும் ஒரே இடத்திலேயே. பண்ணை முதலாளியும் ஒரே ஆளாகத் தான் இருப்பார். அவர் குடும்பம் பண்ணையின் நுழைவாயிலில் பெரிய தோட்டத்திற்குப் பின்னால் மாளிகையில் வசிக்கும். அந்த மாளிகைகளுக்குப் பின்னால் கொஞ்சம் தூரத்தில் தனித்தனியாக மிருகங்களுக்கான இருப்பிடமும், பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கான இருப்பிடமும் இருக்கும். சில சமயம் பண்ணையாட்களின் இருப்பிடம் அவர்கள் காவல் செய்யும் நிலத்தின் அளவைப் பொறுத்து மாறுபட்டு தூரத்தில் கூட அமையும். பின்னால் வெகு தூரத்துக்கு ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் பரவிக் கிடக்கும். வேட்டை நாய்களும் காவலுக்கு வளர்க்கப் படும். குளிரோ, மழையோ, வெயிலோ பண்ணை ஆட்களுக்கு விடுமுறை என்பது கிடையாது. காலையில் அவர்கள் சீக்கிரம் வந்துவிட வேண்டும். பண்ணையில் நாள் பூரா வேலைகள் இருக்கும். அவரவருக்குக் கொடுக்கப் பட்ட வேலைகள் பூர்த்தி அடைய இரவாகிவிடும். அதன் பின்னர் அவர்களுக்கெனக் கொடுக்கப் பட்ட குடிலுக்குச் சென்று உணவு சமைத்து உண்டுவிட்டுத் தூங்கினால் மீண்டும் மறுநாள் பண்ணைக்கு வேலைக்கு வரத் தயார் ஆகவேண்டும்.
இத்தகைய அடிமை வாழ்க்கையே நடத்தி வந்தனர் பெரும்பாலான கறுப்பர்கள். இவர்கள் பண்ணை முதலாளிகளிடம் இருந்து தப்புவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. சிலர் பரம்பரை அடிமைகள். அவர்கள் வேறு ஏதாவது காரணத்துக்குப் பண்ணை முதலாளியிடம் பணம் கடன் வாங்குவர். அதைக் கொடுக்க முடியாமல் தங்கள் பெண்ணையோ, பையனையோ, மனைவியையோ அங்கு அடிமையாக அனுப்புவார்கள். பின்னர் அவர்களின் குழந்தைகள் என்று இது மிக நீண்டதொரு சங்கிலித் தொடராக இருந்து வந்தது. இது பெரும்பாலும் தென் மாநிலங்கள் ஆன, டென்னிசி, ஜார்ஜியா, லூசியான, டெக்சாஸ், ஃப்ளோரிடா, மிசிசிபி, மிசோரி, வடக்கு கரோலினா, தென் கரோலினா, டெலவேர், கெண்டுகி, அலபாமா, ஆர்கன்ஸாஸ் போன்ற மாநிலங்கள் ஆகும். பெரும்பாலான கறுப்பர்கள் வேறு வழியில்லாமலேயே இதில் தொடர்ந்து இருந்து வந்தனர். இருந்தாலும் அனைவருக்கும் தங்கள் முதலாளிகளைப் போல் இல்லாவிட்டாலும் ஓரளவு சுதந்திரத்துடன் நல்ல வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எண்ணமே இருந்து வந்தது.
வடக்கு மாநிலங்களில் அவ்வளவு விவசாயப் பண்ணைகள் இருக்கவில்லை, மேலும் அங்கே மக்கள் கொஞ்சம் நாகரீகத்தில் மேம்பட்டவர்களாகாவும் இருந்து வந்தனர். மேலும் ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாக வரும் முன்னரே அடிமைத்தனம் ஒழிக்கப் படவேண்டும் என்ற பேச்சும் இருந்து வந்தது. லிங்கன் ஜனாதிபதி ஆனதும் அடிமைத்தனமும் ஒழிக்கப் பட்டது. ஆனாலும் இந்த அடிமைத்தனம் ஒழியக் காரணமாகவும், ஓர் உந்து சக்தியாகவும் 1820-ம் ஆண்டு பிறந்த ஹாரியட் டப்மேன் என்ற பெண்மணி தன் தீவிர சாகசங்களால் நிரூபித்தார். அமெரிக்க அரசு பல வருடங்கள் அவரை அங்கீகரிக்காவிட்டாலும், கடைசியில் வேறு வழி இன்றி அங்கீகரித்தது. அவர் என்ன மாதிரியான சாகசங்கள் புரிந்தார்? வரும் நாட்களில்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















