அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 12
பாஸ்டன் பிராமணர்கள் என்பவர்கள், இங்கிலாந்து நாட்டின் ஆங்கிலேய ப்ராட்டெஸ்டண்டுகள் ஆவார்கள். இவர்களே முதன் முதலில் பாஸ்டன், மாசாசூசெட்ஸ் போன்ற இடங்களைக் கண்டறிந்தார்கள். அவர்கள் குடியிருப்புகள் ஏற்பட்ட இடமே நியூ இங்கிலாந்து எனவும் அழைக்கப் பட்டது. இந்த நியூ இங்கிலாந்து என்பது தற்சமயம் மெயின் என்னும் மாநிலம், நியூ ஹாம்ப்ஷைர், வெர்மோண்ட், மாசாசூசெட்ஸ், ரோடே ஐலாண்டு, மற்றும் கனெக்டிகம் போன்ற மாகாணங்கள் சேர்ந்தது ஆகும். இங்கே குடியேறிய பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள், இங்கிலாந்தில் இருந்து வந்த புனித யாத்திரிகர்கள் என்றும் சொல்லலாம். தங்கள் மதத்தைப் பரப்பவும், அதன் புனிதத் தன்மையையும், அதன் கலாசாரத்தையும் காப்பாற்றவும் இவர்கள் பாடுபட்டனர். அமெரிக்கக் கண்டத்தின் வட கிழக்கில் இவர்கள் அதிகமாய்க் குடியேறினார்கள். இவர்களே "பாஸ்டன் பிராமணர்கள்" என அழைக்கப் படுகின்றனர்.
இந்தியாவிலிருந்து வந்த இந்த பிராமணர்கள் என்ற வார்த்தை சம்ஸ்கிருத மூலத்தையும் கொண்டது, இந்தியாவின் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த வேதியர்களைப் பிராமணர்கள் எனச் சொல்வதுண்டு. அதே போல் இவர்களும் தங்கள் மத சம்பந்தமான வேதத்தைப் பெருமளவில் பரப்பியதாலும், பெரும்பாலும் இவர்களே தலைமைப் பொறுப்பேற்று நிர்வாகம், கலை, கலாசாரம், அறிவியல், அரசியல், வியாபாரம் மற்றும் அனைத்து சம்மந்தமான கல்வி போன்றவற்றில் சிறந்தும் விளங்கியதாலும் இவர்களைப் ப்ராமணர்கள் என்று சொல்ல ஆரம்பித்தனர்.
இவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாய் இருந்தாலும், தாராள மனப்பான்மை இல்லாமல் இருந்தனர். படிப்பில் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பும், ஆங்கிலேய உச்சரிப்பாகவே இருந்து வந்தது. இந்த உச்சரிப்பு பாஸ்டன் பிராமின் உச்சரிப்பு (Boston Brahmin Accent) என அழைக்கப் பட்டது.
இவர்கள் குடும்பப் பெயர்களைக் காப்பாற்றுவதிலும் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குள்ளேயே அநேகத் திருமணங்களைச் செய்து கொண்டனர். அவர்களில் சில குடும்பப் பெயர்கள் இதோ:
1. ஆடம்ஸ்
2. பிராட்லீ
3. காபட்
4. ஷாஃபீ
5. எமர்சன்
6. ஃபோர்ப்ஸ்
7. ஹோம்ஸ்
8. எலியட்
9. பிலிப்ஸ்
10. பெர்கின்ஸ்
11. லாரன்ஸ்
12. வின் த்ராப்
ஆகியவர்கள் ஆவார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேய நாட்டிலிருந்து வந்து முதன் முதல் குடியேறி, பாஸ்டன் நகரை நிர்மாணித்தவர்களாக இருந்தனர். இன்னும் சில இங்கிலாந்தின் உயர்குடியைச் சேர்ந்த பிரபுக்களின் வம்சத்தினர் 19-ம் நூற்றாண்டுக் கடைசியில் தங்கள் வியாபாரம் செழிக்கவும், பொருளாதார அபிவிருத்திக்காகவும் வந்து, அங்கே ஏற்கெனவே குடியேறி இருந்த ஆங்கிலேய வம்சாவளியினரான பாஸ்டன் பிராமணர்களோடு திருமண சம்மந்தம் வைத்துக் கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் எமர்சன் குடும்பமும், வின் த்ராஃப் குடும்பமும் ஆகும். இவர்களில் பலரும் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறப்பாகப் பங்காற்றினார்கள். அடுத்து அமெரிக்காவின் அடிமைகள் பற்றியும், தென் பகுதிப் பண்ணைகள் பற்றியும், வடகிழக்கே ஆண்டு வந்த ஆங்கிலேய வம்சாவளியினரின் ஆட்சியைத் தென் பகுதியில் உள்ளவர்கள் எதிர்த்தது பற்றியும் பார்ப்போம். இதில் தான் அமெரிக்கா என்றழைக்கப் படும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் உள்நாட்டுப் போர் வருகின்றது. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















