அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 11
அமெரிக்கா என்றழைக்கப் படும் இந்தக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட ஆங்கிலேயர் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். இவர்களில் பலரும், 18-ம் நூற்றாண்டில், யு.எஸ்ஸில் ஏற்பட்ட மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், விடுதலைப் போரில் மட்டுமில்லாமல், ஆட்சியிலும், வக்கீல் தொழில் போன்ற முக்கியமான தொழில்களிலும் தங்கள் அளவில் மிகச் சிறந்திருந்தார்கள். இவர்களை அமெரிக்கச் சுதந்திரத்தின் தந்தைகள் எனச் சொல்லலாம். 55 நபர்கள் கொண்ட இந்தக் குழுவில் அனைவருமே ஒவ்வொரு வகையில் அரசுடனும், அரசு சார்ந்த நிர்வாகங்களிலும் மிகத் திறமை படைத்தவர்கள்.
இவர்களில் முக்கியமானவர் ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். இவருடன், பெஞ்சமின் ப்ராங்க்லின், தாமஸ் ஜெபர்ஸன், ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாண்டர் ஹாமில்டன், ஜான் ஜே, ஜார்ஜ் மேசன், சாமுவேல் ஆடம்ஸ் ஆகியவர்கள் இணைந்து "Declaration of Independence" என்னும் ஒரு அறிக்கையைத் தயார் செய்து, அதை நடைமுறைப் படுத்துகின்றார்கள். அதிலும் சிலர் கை எழுத்திட மறுக்கின்றார்கள். பலரும் இந்த பதின்மூன்று காலனிகளைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சிலர் வெளியில் இருந்தும் சமீப காலத்தில் வந்தவர்களாகவும் இருந்தனர். கிட்டத்தட்ட 15 பேர் கை எழுத்துப் போடாவிட்டாலும் சுதந்திரப் பிரகடனம் அமலுக்கு வந்தது. சுதந்திரப் போரும் ஆரம்பம் ஆனது.
Click the image below to view the high resolution image
1775-ம் வருஷத்தில் இருந்து 1783 வரை நடந்த இந்த உள்நாட்டு யுத்தம், பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசை, வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்த பிரிட்டிஷ் காலனிகள் பதின்மூன்றும் எதிர்த்துப் போட்ட சண்டை ஆகும். வெளிநாடுகளும் சேர்ந்து ஆதரவு அளிக்க, நாளாவட்டத்தில் இது உலக அளவில் ஆன ஒரு பிரச்னையாக மாற ஆரம்பித்தது. காலனிகள், பிரிட்டிஷ் அரசின் போக்கைக் கண்டித்து, அதைத் தூக்கி எறிந்து விட்டதாய்ச் சொல்லிவிட்டுத் தங்களுக்கென ஒரு புதிய அரசையும், புதிய பெயரையும் அறிவித்தன. இதை அறிந்த பிரிட்டிஷ் அரசைப் பிடிக்காத மற்ற ஐரோப்பிய நாடுகள், இப்போது பகிரங்கமாய் ஆங்கில அரசை எதிர்த்து, அமெரிக்கக் காலனிகளுக்குத் தன் ஆதரவை அளித்தன. ஆங்கில அரசின் கடற்படையின் மிகத் திறமையான போர்த்தந்திரமும் தோற்றுப் போய் 1778-ம் ஆண்டு சரடோகா என்னும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள், அமெரிக்கப் படைகளிடம் சரண் அடைந்தன. உடனேயே பிரான்சும் பிரிட்டனின் ஆதிக்கத்தைக் கண்டித்து, சண்டையை அறிவித்தது. அதனோடு துணைக்கு ஸ்பெயினும் வந்ததாலும், பிரான்சின் இரு வருடச் சண்டை கடைசியில் பிரிட்டனின் படை வீரர்களின் இரண்டாவது சரணாகதியைக் கொண்டு வந்தது. பின்னர் 1783-ல் "Treaty of Paris" என்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அமெரிக்காவின் பதின்மூன்று பிரிட்டிஷ் காலனிகளையும், சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டதாய் அறிவிக்கப் பட்டது.Click the image below to view a high resolution image of the same
தொடரும்...








Your Feedback










