அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 10
அமெரிக்கா என்று அழைக்கப்படும் யு.எஸ்.ஸில் பாலும், பால் சார்ந்த பொருட்களும் பெரும்பாலும் பதப் படுத்தப் பட்டதாகவே இருக்கும். பால் பலவிதமான ரகங்களில் கிடைக்கும். முழுதும் கொழுப்பு நீக்கிய பால், 1% கொழுப்பு உள்ள பால் என்று ஆரம்பித்து முழுதும் கொழுப்பு உள்ள பால் என்பது வரையிலும் கிடைக்கும். பால் பவுடர் ஆக்கப்பட்டும் கிடைக்கும். இந்தப் பால் ரகங்களில் ஹாஃப் & ஹாஃப் என்று ஒரு வகை உள்ளது. இந்த ஹாஃப்&ஹாஃப் பெரும்பாலும் காஃபி, டீ போன்றவற்றில் சேர்க்கவே பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாய்க் காஃபி, டீ என்றால் இந்தியாவில் மட்டுமே பால் கலந்த காஃபியோ, டீயோ சர்க்கரை தேவையானால் சேர்த்துக் கொடுப்பார்கள். இந்தியாவைத் தாண்டினால் காஃபி என்றால் வெறும் கறுப்புக் காஃபி தான், டீ என்றால் கறுப்பு டீ தான் கிடைக்கும். பாலோ, சர்க்கரையோ வேண்டுமென்றால் நாம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போது தான் கொடுப்பார்கள். ஒரு சின்ன சாஷே தான் பால் கொடுப்பார்கள், அது போதுமா என ஆச்சரியமாய் இருக்கலாம், முதல் முறையாக இருந்தால். ஆனால் அதுவே போதும் என்று கலந்து பார்த்ததும் தெரிய வரும். காபிக் கொட்டைகளும் வித விதமாய், ரகவாரியாய்ப் பிரிக்கப் பட்டு, வறுத்து வைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ஒவ்வொரு காஃபிக் கொட்டை மெஷின் வைக்கப் பட்டிருக்கும். நமக்கு வேண்டிய கொட்டையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அங்கேயே மெஷினில் போட்டு அரைத்து ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொள்ளலாம். என்ன எடை வருகின்றதோ, அதற்குத் தகுந்த பணம் வசூலிப்பார்கள். காபி பவுடராயும் கிடைக்கிறது. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் கொட்டையை அரைத்தே வாங்கிச் செல்லுவார்கள்.
காபி ஃபில்டர் என்பது நம் நாட்டில் இப்போது பரவலாய்க் கிடைக்கும் காஃபி மேக்கர் தான். பெரிய பெரிய காஃபி மேக்கர்களைச் சர்வ சாதாரணமாய்ப் பார்க்கலாம். சில கடைகளிலும், சில ஆஸ்பத்திரிகளிலும், சில கோயில்களிலும் காபி, டீ இலவசம். எவ்வளவு வேணுமானாலும் எடுத்துக் கொண்டு சாப்பிடலாம். அலுவலகங்களில் கட்டாயமாய்க் காஃபி மேக்கரும், டீ மேக்கரும், பால், சர்க்கரை போன்றவையும் இருக்கும். சில இடங்களில் வெண்டிங் மெஷின்களும் இருக்கும். அங்கே நம் நாட்டை விடக் காஃபி அதிகம் குடிப்பார்கள், ஆனால் கறுப்புக் காஃபி தான். காஃபியின் முக்கிய சத்தான "காஃபேன்" நீக்கிய காஃபியும் உண்டு. நோயாளிகளுக்கும், இன்னும் கர்ப்ப ஸ்திரீகளுக்கும் இது சிபாரிசு செய்யப் படுகின்றது.
காலனி ஆதிக்கம் தொடங்கியதுமே ஆங்கிலேயர்கள் பெருமளவில் அமெரிக்கக் கண்டத்துக்குக் குடி பெயர ஆரம்பித்தனர். அங்கே உள்ள நீர் வசதி, நில வசதி போன்றவற்றைப் பார்த்துவிட்டுக் குடிபெயர்ந்தவர்கள் தென் பகுதியை ஆக்கிரமித்தனர். வட பகுதியில் (நியூயார்க், பாஸ்டன், மின்னசோட்டா, வர்ஜினியாவின் ஒரு பகுதி) குளிர் அதிகமாய் இருந்தால் வருடத்தின் 8 மாதங்கள் அங்கே எதுவும் பயிராக்க முடியாது. ஆனால் தென் பகுதியில் வருடத்தின் 6 மாதங்களுக்கு விவசாயம் செய்ய முடியும். ஆகவே தென்பகுதிகளில், (இப்போதைய டென்னிசி, ஜார்ஜியாவின் ஒரு பகுதி, லூசியானா, டெக்சாஸ், ப்ளோரிடா) போன்ற இடங்களின் தட்ப வெப்பம் ஓரளவுக்குக் கட்டுப்பாடில் இருந்தமையால் அங்கே அதிகம் விவசாயப் பண்ணைகள் பெருமளவில் தோன்றின. அந்தப் பண்ணைகளிலேயே கால்நடைகளும் வளர்க்கப் பட்டன. அவற்றைக் கவனித்துக் கொள்ளவும், வயல்களில் வேலை செய்யவும் பெரும்பாலான ஆட்கள் ஆப்ரிக்கக் கண்டத்தில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப் பட்டனர். இவர்கள் முற்றிலும் மனிதர்களாய் நடத்தப் படாமல் விலங்குகளைப் போலவே நடத்தப் பட்டனர். சில பண்ணைகளின் முதலாளிகள் கொஞ்சம் கொஞ்சம் அனுதாபம் காட்டினாலும் வேலை அதிகமாகவே செய்ய வேண்டி வந்தது. தங்குமிடங்களும், குளிருக்குப் பாதுகாப்பும், சரிவரக் கொடுக்கப் படவில்லை. இதைக் கொஞ்ச்ம கொஞ்சமாய்ப் பார்ப்போமா?
ஆனால் ஆங்கிலேயரோ, இங்கே உள்ள, அதுவரையிலும் மனிதன் கைப்படாத நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பெரும் செல்வந்தன் ஆகவும், இங்கே சாலைகள் அமைத்துக் கொடுத்துப் பணம் சேர்த்துக் கொண்டு, பின்னர் திரும்ப இங்கிலாந்து செல்லவும், இங்கே உள்ள கனிமச் சுரங்கங்களைக் கையகப் படுத்திக் கொண்டு அவற்றின் செல்வத்தை அனுபவிக்கவும் ஆரம்பித்தனர். பணி ஆட்களாயும், சாலை போடும் பொறியாளர்களாயும் வந்த மக்களில் சிலர் திரும்பிப் போனார்கள், பெரும்பாலோர் திரும்பவில்லை. மதப் பிரசாரம் செய்யவும் பல மதப் பிரசாரகர்கள் வந்தனர். என்றாலும் காலப் போக்கில் இங்கே இருந்த ஆங்கிலேயர்களுக்குத் தாங்கள் ஆங்கில அரசால் அடக்கி ஆளப் படுவதாய் ஒரு உணர்வு தோன்ற ஆரம்பித்தது. இங்கே உள்ள வசதிகளாலும், இங்கே உள்ள பல்வேறு விதமான செளகரியங்களாலும் யு.எஸ்.ஸிலேயே தங்க ஆரம்பித்த ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் உரிமைகளில் பிரிட்டிஷ் அரசு குறுக்கிடுவதாய்த் தோன்ற ஆரம்பித்தது. பெரும்பாலான குடிபெயரப்பட்ட ஆங்கிலேயர்களின் வழி வந்த வாரிசுகள் தான் அரசு நிர்வாகமும் செய்து வந்தாலும், ஆங்கிலமே வழக்கு மொழியாக இருந்து வந்தாலும் கடல் தாண்டிப்பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தேசம் தங்களை ஆளுவது என்பது யு.எஸ்.ஸில் உள்ள ஆங்கிலேயக் குடிமக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
ஆகவே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கே முதல் முதலாய் ஒரு புரட்சி ஏற்பட்டது, அதன் விளைவு அதாவது, 1775-ம் ஆண்டில் இருந்து 1783-ம் ஆண்டு வரை நடந்தது அமெரிக்காவின் சுதந்திர யுத்தம். யுத்தம் என்றால் நிஜமான யுத்தம், கத்தி எடுத்துச் சண்டை போட்டனர், அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயக் காலனிகளைச் சேர்ந்த அமெரிக்க ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ் ஆங்கிலேயர்களுடன். 1776-ல் அமெரிக்காவைச் சுதந்திர நாடாக அறிவித்து விட்டு, ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் நடந்த இந்த யுத்தம் 1781-ல் அமெரிக்க ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் பட்டாலும் 1783-வரை இங்கிலாந்து தன் பிடியைத் தளர்த்தவில்லை.
இங்கிலாந்துடன் ஜன்மப் பகை கொண்டிருக்கும் பிரான்சு நாடு, இந்தச் சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க ஆங்கிலேயர்களுக்குப் பல்வேறு உதவிகளும் செய்தது. பணம், பொருள் எனப் பலவிதங்களிலும் உதவிய பிரான்சு நாடு, படையும் அனுப்பி அமெரிக்க ஆங்கிலேயருக்கு உதவியது. "யார்க்டவுன்" என்னும் ஊரில் பிரான்சு உதவியுடனேயே அமெரிக்க ஆங்கிலேயர், பிரிட்டிஷாரை வென்றனர். என்றாலும் பிரான்சின் உதவியை அவர்களில் பெரும்பாலோர் அங்கீகரிக்கவில்லை. மன்னராட்சி தான் அங்கேயும் என்பதாலும், அப்போதே பெரும்பாலான அமெரிக்க ஆங்கிலேயருக்கு "மக்களாட்சி" என்பதே கனவாக இருந்து வந்தமையாலும் பிரான்சின் உதவி நீடித்தால் அடுத்து அது தங்களை அடிமையாக்கலாம் என்பதாலும் இது நீடிக்கவில்லை. மேலும் சில தகவல்கள் அமெரிக்கப் புரட்சி பற்றி அடுத்துப் பார்க்கலாம்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||






















